நெற்றிக்கண்
பொறுத்தது போதும் பொங்கி எழு
வெறுப்பு நாடகம் வேதனை தந்தது
பொறுப்பற்ற பேச்சு நெஞ்சம் பதறுது
உத்தமர் மறைந்து உன்மத்தர் ஆட்டம்
சித்தம் கலங்கிய பித்தர் போலவே
பொய்கள் மாலைகள் அணிந்த நாடகம்
பொல்லாத மனிதர் பெருகிப் போயினர்
புதைந்த சாக்கடை தெருவில் மீண்டும்
புண்களாய் மாறி புரையோடிப் போயின
சாத்திரம் பேசும் சாதிகள் மீண்டும்
சரித்திரம் திரும்ப பழையதைக் கிளறி
உண்மைகள் மறைத்த உயிரற்ற சொற்கள்
உலகம் எங்கே போகிறது மாயையில்
இரத்தம் கொதிக்குது நடப்பதைப் பார்க்க
இரக்கம் அற்ற அரக்கர் பலரும்
இதயமற்ற செயலைச் செய்வதைப் பொறுப்பதா
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி
எகத்தாள வசனம் ஆயிரம் பேசுவர்
இனியும் வேண்டாம் அமைதி கொள்வது
இரண்டு கண்கள் போதாது இதற்கு
நெற்றிக் கண் கொண்டு எரிப்பதே
குற்றம் தவிர்க்கும் வழியெனச் சொல்வேன்
பொங்கி எழுமின் பொசுக்கி ஒழிப்போம்
ஓங்கிச் சொல்வோம் ஒற்றுமை வேண்டும்
ஒருவனே தேவன் ஒன்றே குலம்
இருப்பவர் அனைவரும் இறைவன் பிள்ளைகள்
பிரிவினை பேசிடும் சாதீயப் பேய்களை
பினங்களாய் எரிப்போம் நெற்றிக் கண்ணால்
எதனைக் கண்டும் கோபம் என்னுள்
எதனால் வந்தது அறிவோமா சொல்வீர்
வறுமை போக்கும் வீரம் எங்கே
பொறுமை கொண்டு இருப்பது ஏனோ ?
கிரகம் விட்டுப் பாயும் வேகம்
இரக்கம் கொள்ள மறப்பது நன்றா?
உழைக்கும் கரங்கள் உலர்ந்தே இருக்க
தழைக்கும் செல்வம் தாங்குதல் முறையா ?
குட்டிக் குட்டி குனிய ஒருவன்
பட்டி தொட்டி பணத்தில் மற்றவன்
மாற்றம் வருமா காத்துப் பூத்தன
மாறியது ஒன்றே மனிதம் மறைந்தது
நல்ல தலைமை காணாமற் போனது
பொல்லா மனிதர் பொய்கள் பேசினர்
சவக் குழிவிட்டு பிணங்கள் எழுந்தன
சரித்திரப் பாடத்தை திரித்து எழுதின
தரித்திரப் பிறவிகள் கைகொட்டி நகைத்தன
உறங்கும் மனிதனை உலுக்கி எழுப்பு
உதிரம் உறைந்து உணர்ச்சி அற்றதாய்
நடக்கும் நாடகம் எதுவரை போகுமோ
நரகம் வேகமாய் உயரப் பார்க்குது
பொறுத்த மனமே பொங்கி எழுமின் !
பொசுக்கும் நாளிது நெற்றிக்கண் திறவாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக