அயலகப் பயணம், சிங்கப்பூர் & தாய்லாந்து, 9 /11/24 to 10/11/24
நிகழ்வுகளைப் பொறுத்தே கட்டுரை சிறியதாகவோ பெரியதாகவோ மாறுகிறது. இன்று சனிக்கிழமை முன்னதாகத் திட்டமிட்டபடி சென்டோஸா செல்ல வேண்டிய நாள். தலைக்குத் தொப்பி, சாம்பார் சாதம் டப்பாக்க
ள், நொறுக்குத் தீனி, தண்ணீர் பாட்டில், கேமிரா ஸ்டேண்ட் முதலானவை பேக் செய்த பின், பயணித்து, சென்டோஸா சென்று இறங்கிய போது, புது உலகத்திற்குள் நுழைவது போன்றதொரு தோற்றம். செல்ஃபி ஸ்டேண்ட் பிக்ஸ் செய்து, நண்பர் சாமும் நானும் கேமிராவில் டிலே ஸ்டார்ட் உதவியுடன் போட்டோக்கள் எடுத்த பிறகு, உள்ளே நுழைந்த போது, Universal Studios Disneyland, Aquarium, water sports என பல பிரிவுகள் வரவேற்றன.
எல்லாவற்றையும் பார்க்க ஒரு நாளில் முடியாது என்பதால், Aquarium பார்ப்பது என முடிவெடுத்து உள்ளே நுழைந்த போதே பிரமாண்டமாய் கடலுக்குள் நுழைந்தது போன்று, கண்ணாடிக் கூரைக்கு மேல் பல வித மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. சுறா மீன்களும் கூட. அதைக் கடந்து சென்றால் வித விதமான கடல் வாழ் உயிரினங்களின் காட்சி. ஒவ்வொன்றாய் பார்த்துக் களித்து, கேமிராவில் கிளிக்கி நகர்ந்து உயர்ந்த போது, திடீரென கண்ணாடித் திரையின் பின்னர் அவதார் படத்தின் காட்சிக்குள் நுழைந்தது போல், காணற்கரிய வடிவத்தில் சுறா, டால்பின், திருக்கைவால் என பலவகை மீன்கள். உட்காருவதற்கு வசதியாக சுவரில் சாய்ந்து அந்தக் காட்சியை பார்த்தபடியும், கிளிக்கியும் பல மணித்துளி நேரம் பலரும் ஓய்வெடுத்தனர். நண்பர் குட்டித்தூக்கமே போட்டார்.
மதிய உணவு சாம்பார்சாதம், ரிப்பன் பக்கோடாவும் வயிற்றுக்கும் சிறிது ஈயப்பட்டது. வெளியில் வந்து ஒவ்வொன்றாய் பார்த்த படி வந்தபோது, கேபிள் காரில் போகலாம் எனத் தோன்றியது. எனக்கு 17 டாலரும், சிங்கப்பூர் வாசி சாமுக்கு 12 டாலரும் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பயணித்த போது, கீழே கடல் பரப்பும், பசுமைக் காடும் ஒரு சேரக் காட்சியளித்தது. சுமார் 20 நிமிட சுற்று வட்டப்பாதை, பல கேபிள் கார்கள் ஆளற்று சுற்றி வந்தன.
சென்டோசா சுற்றுலா முடிந்து வெளிவந்து, நடந்து நடந்து கால்கள் வலிக்க வீடு திரும்பி, இரவு உணவாக தோசை, சட்டினி, குருமா உள்ளே சென்று, சில மணி நேர உரையாடலுக்குப் பிறகு உறக்கம் ஆட்கொண்டது.
மறுநாள் ஞாயிறு, எனது பெரியம்மாவின் பேரன் ( ஜெயக்குமாரின் மகன்) சதீஷின் இல்லத்திற்கு மதிய உணவுக்கு வருவதாகச் சொல்லி இருந்தோம். கட்டிப் மெட்ரோ நிலையம் சென்று, சிறிய காத்திருப்புக்குப் பின், அவரது காரில் எங்களை பிக் அப் செய்தார். அவரது மகனும் மகளும் சுட்டியான சிறுவர்கள். ஒரு கேம் யூனோ ஆடுவதற்குள் மதிய உணவு தயார். மருமகள் அருமையான விஜிடேரியன் பிரியாணி, காளான் கறி, அப்பளம், தயிர் பச்சடி என தடபுடலான விருந்து. எனக்கு மட்டும் சிக்கன் குழம்பு கூடுதலாக. நான் வெஜ் வேண்டாமெனச் சொல்லியிருந்தேன். யாரோ ஒருவரின் பங்கு என்னால் குறைந்திருக்கும்.
சாம் மிக இரசித்து சாப்பிட்டு புகழ்ந்ததால் இரவு உணவும் பேக் செய்து கொடுக்கப் பட்டது. ருசிகரமான உணவுண்ட பிறகு, சில மனித்துளிகள்்பேசி் முடித்து, அவர் இறக்கி விட்ட இடத்திலிருந்து, பேருந்தில் பயணித்து, டேக்கா அடைந்தோம். நண்பர் கபீரின் ஹஜ் பயண நணபரைப் பார்க்க, காத்திருந்து, அவரிடமிருந்து பதில் வராததால் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.
எனக்கு நடந்து செல்வது கடினமாகவே இருந்தது பழக்கமில்லலாததால். மாலையில் ECP எனச் சொல்லப் படும் ஈஸ்ட் கோஸ்ட் பீச்சுக்குப் பயணம். Sunset படங்கள் கிளிக்கி நடந்து, நணபர் சாம் அங்கிருந்த குப்பை பைகள் உடனடியாக அகற்றப் பட அலுவலக அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பிய பிறகு முதல் நாள் சென்ற கோயிலுக்குச் சென்று கும்பிட்டு, எதிரில் இருந்த இந்திய சிற்றுண்டி உணவகத்தில் பூரி சாப்பிட்டு, வீட்டுக்குத் திரும்பிய போது, கோவில் வாசலில் மருந்து பாட்டில் ஒன்றை வைத்து மறந்த சாம் ( என்னிடம் நினைவூட்டச் சொல்லியிருந்தார், நானும் மறந்து விட்டேன்) மீண்டும் பேருந்தில் பயணித்துச் சென்று அதை எடுத்து வந்தார்.
மறுநாள் காலை எனது சிங்கப்பூர் பயணம் முடிந்து பாங்காக் புறப்பட வேண்டிய பேக்கிங்குகள் முடித்து, விரைவாக உறங்கப் போயானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக