கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 13/2/25
உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாக விசிட் இன்று. காலையுணவுக்குப் பிறகு புறப்பட்டு, போட்டோவுடன் கூடிய நுழைவுச் சீட்டைப் பெற்று, சுற்றிலும் அகழி போல் நீராலும், பெரிய காடு ஒன்றின் நடுவிலும் காலத்தைக் கடந்து, நின்று கொண்டிருந்த கோயில் வாயிலை அடைந்தபோது. வெயிலின் தாக்கம் தெரிந்தது.
முப்பத்தேழு ஆண்டுகள் கட்டி முடிக்க ஆனதால், நினைவுறுத்தும் வகையில், 37 USD கட்டணம். கழுத்தில் IT Employee போன்று அணிந்தபடி, அகழி நீரின் மேல் போடப்பட்ட பாலத்தின் மேல் நடந்தபடியே, So much என்ற பெயருடைய கைடை பின்பற்றினோம். வித விதமான போட்டோக்கள், குழுக்களாக தனியாக. சிதிலமடைந்த கோயிலின் காலத்தால் கருப்பு நிறத் தோற்றத்தை பார்த்தபடியே நடக்கத் தொடங்கிய போது தெரிந்தது, ஆங்காங்கே படிகளில் ஏறி இறங்க வேண்டுமென்று. எனக்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது.
முதலில் நம்மை வரவேற்றவர், தலை உடைக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்ட புத்தர் முகம் போன்ற தோற்றத்துடன் விஷ்ணு பகவான், பல கரங்களுடன். செருப்பணிந்தே எல்லா இடங்களுக்கும் செல்ல அனுமதி உண்டு. அருகில் சென்று பூஜை செய்யும் கம்போடிய மக்கள் காலணி அணியவில்லை. அருகிலே ரோஜா வண்ண சேலையணிந்து, மகாலஷ்மி தலையற்று காணப்பட்டார். இக்கோயிலை அழிக்கவும், புத்தக் கோயிலாக மாற்றவும் முயற்சித்ததாக தகவல் அறிந்தோம். சிதிலமடைந்த மற்றொரு கோயிலை புணரமைக்க இந்திய தொல் துறையும் சேர்ந்து செயல்படுவதை தகவல் பலகை அறிவித்தது.
கணவன்,மனைவி குழந்தைகள், காதலர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தனர். அழகாய் காணப்பட்டனர். ஒவ்வொரு வளாகமாகப் பார்த்தபடி வந்து, உயரே படியேறி உச்சிக்குப் போகும் இடம் வந்தபோது நான் வரவில்லை என்று கூறி , என் போன்றே போகாத நண்பர்களுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியும், போட்டோ எடுத்தும் முடித்து, மற்ற நண்பர்கள் வந்த பிறகு சுற்றுப் புற சுவர்களில் செதுக்கியிருந்த இராமாயண மகாபாரதக் காட்சிகளை பார்த்து முடித்து, வெளியேறி, மதிய உணவிற்கு் இந்திய உணவகத்திற்குப் புறப்பட்டோம்.
மீண்டும் மற்றொரு சிதிலமடைந்த கோயிலை அடைந்து, புணரமைப்பு வேலை நடந்து கொண்டிருப்பதையும், கற்குவியல்கள் சிதைவின் அடையாளங்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. வியர்த்து விறுவிறுத்து் பார்த்து முடித்து , ஓட்டலை அடைந்து, சற்றே ஓய்வுக்குப் பிறகு. இரவு உணவு முடித்து, எங்களில் சிலர் மட்டும் Pub Street ( பட்டயா வாக்கிங் ஸ் டீரிட் போன்றது) நடந்து போய் வருவது என முடிவெடுத்தோம். மறுநாள் வாலண்டைன் டே என்பதால் வண்ண மயமாக ஜொலித்தது. ஆட்டம் பாட்டம் குடி அரை குறை ஆடைகள் என தெருவெங்கும் நிறைந்திருந்தது. டுக்டுக் என்ற ஆட்டோ போன்ற வாகனத்தில் ஏறி ஓட்டலை அடைந்து, உறங்கிய போது மறுநாள் செல்ல வேண்டிய Floating Village எவ்வாறு இருக்கும் என மனத்திரையில் ஓடியது.
( தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக