வாழ்க்கையில் நம்மை விட்டு விலகாத நட்பு என்றும் போற்றுதற்குரியது. செப்டம்பர் 11, முன்னமே திட்டமிட்டபடி காலை ஐந்து மணிக்கு கார் வீட்டை விட்டுக் கிளம்பியது. புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலம் ஜே பி நகரில் இருந்து நேராக எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்திற்குச் சற்று முன் இறக்கிவிட்டது. விடிய இன்னும் நேரமிருந்ததால், விளக்குகள் பளிச்சிட்டன. மேம்பாலத்தை வேகமாகக் கடந்து முதல் டோல் கடந்து பயணித்த போது டிரக்குகள் வரிசையாக அணிவகுத்து போய்க் கொண்டிருந்தன.
ஓசூரைக் கடந்த பிறகு சற்றே வேகமெடுத்து , கதிரவன் மேலெழும்புவதை வனங்களின் பசுமையோடு கண்டு ரசித்தபடி எச்பி பெட்ரோல் பங்கில் டேங்கை நிரப்பிக் கொண்டு பயணம் தொடர்ந்தது. கிருஷ்ணகிரி பாலத்தின் கீழே சென்னை நோக்கி திரும்புவதற்கு முன் காலை உணவை முடித்துக் கிளம்ப நணபன் சேரனின் அழைப்பு பத்திரமாக காரை ஓட்டி வரச் சொன்னது. ஈசிஆர் ரெசார்ட் அடைய ஸ்ரீபெரும்புதூரிலே திரும்புவது உசிதம் எனச் சொன்னான்.
நெடுஞ்சாலை சாலை சந்திப்புகளில் மேம்பால வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் வழி நெடுகிலும் டேக் டைவர்ஷன் பயண நேரத்தை அதிகரித்தது. ஸ்ரீபெரும்புதூர் அடைந்த போது மணி பத்தரை. அங்கிருந்து சிங்கப்பெருமாள் கோயில் சென்று இடது புறம் திரும்பி, வண்டலூரில் வலது புறம் திரும்பி, கேளம்பாக்கத்தில் இடது புறம் திரும்பி, ஈசிஆரை அடைந்து இடது புறம் திரும்பி நைனார்குப்பம் ரெசார்ட், மேப்பின் உதவியோடும், நணபன் இரவியின் வழி காட்டுதலோடும் 12 45க்கு அடைந்தபோது, சுமார் எட்டு மணி நேரப் பயணம், பலநூறு ரூபாய் டோல் முடிந்தது.
நண்பர்கள் எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்க, அளவான சிறிய ரெசார்ட், நான்கு படுக்கை அறை, சமையலறை, மிகச்சிறிய நீச்சல் குளம், லான் சகிதம் அழகாயத் தோற்றமளித்தது. கடற்கரை மிக அருகில் ஐந்நூறு மீட்டர் தொலைவில்.
தீர்த்த பானங்கள் திறக்கப்பட்டு, சோடா, குளிர்நீர், வெந்நீர் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கலக்கப்பட்டு, குழுவின் பேச்சு களை கட்டியது. நெடுஞ்சேரனி்ன் குடும்பத்தினர் சமையலறையில் சுடச்சுட தின்பண்டங்களைச் சுட்டு பரிமாற ஆரம்பித்தனர். வெயில் சூடேற விவாதங்கள் சூடேறின.
மதிய உணவு சைவ அசைவ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பரிமாறப் பட்டது. பதினான்கு நண்பர்கள், சிலர் உணவுக்குப்பிறகு உண்ட மயக்கம் படுக்கை அறையை நாடினர். நானும் நண்பர்கள் சணமுகம், இராஜரத்தினம் சிறிய குளத்தில் நடை நீச்சல் முடித்து, DJ வரவுக்குக் காத்திருந்தோம். இடையே கரோக்கியில் இரவியுடன் இணைந்து பாட்டுப் பாட முயற்சித்தேன்.
இரண்டு இளைஞிகள், மேலாள நண்பர் மூவரும் ஆறு மணியளவில் எங்களை இயக்க ஆரம்பித்தனர். நடனம், கேம், பேச்சு என இரண்டு மணி நேரத்திற்கு மேல் போனதே தெரியவில்லை. இரவு உணவிற்குப் பிறகு சில நண்பர்கள் விடை பெற்றுச் சென்றனர். முன்னதாக நினைவுப் பரிசாக நண்பர் இரவி அலுமினிய மினியேச்சர் பெட்டி ஒன்றை பள்ளிப் பருவத்து புத்தகம் சுமக்கும் பெட்டியை நினைவூட்டும் வகையில் அனைவருக்கும் அளித்தார்.
காலையில் நண்பர்கள் ஒவ்வொருவராக விடை பெற, நானும் இராஜரத்தினமும் காலை உணவுக்குப் பிறகு விடை பெற்றபோது மனம் கனத்தது்
நெடுஞ்சேரனின் முயற்சி, துல்லியமான திட்டம் மீண்டும் நட்பின் இலக்கணத்தைப் பறைசாற்றியது.
ஒரு நட்பிலிருந்து மறு நட்பின் பரிமாணம் தொடர்ந்தது.
( தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக