வெள்ளி, 6 டிசம்பர், 2019

நிரந்தரம் எதுவுமில்லை

நிலையில்லா வாழ்க்கை
நிரந்தரம் எதுவுமில்லை
நினைவுகள் மட்டுமே
நிழற்படமாய் கண்முன்னே
நீர்முட்டும் உடல்தளரும்
நீயும் நானுமே நண்பா
நாட்களோ மாதங்களோ
வாரமோ வருடமோ
வாழ்கிற தருணமெல்லாம்
மகிழ்வுடன் வாழப்பார்
மறுமுறை ஒன்று இல்லை

வறண்டு தான் போயிற்று

இயற்கையும் சார்ந்தவைகளையும் நன்றி மறவாதவன் தமிழன்

கதிரவனுக்குப் பொங்கல்
உறுதுணையான மாட்டிற்கு
பெரியோரைக் கண்டு வணங்க
புத்தாண்டிற்கு
சித்திரையும் கத்திரியும்
நிலவிற்கும்
நீர் கொணறும் ஆற்றுக்கும் ஆடியிலே
குல தெய்வங்களுக்கும்
புலால் தவிர்த்த மாதம்
தீயவை வதைக்கும் கொண்டாட்டம்
குளங்கள் ஏரிகளில் புனலாடி மகிழ்தல்
பனிவிழும் விடியலில்
தெருக்களில் கோலமும்
பூசணிப்பூவும்
இறை துதி பாடிய குழுக்களும்
ஊர்கள் தோறும் அரச மரத்தடியும் ஆலயமும்

வளமான வாழ்க்கை வறண்டு தான் போயிற்று

சுற்றம் நலமா

நண்பர்கள் நலமா ஞாயிறு விடிந்ததா
பண்பல பாடும் கலையும் நலமா
மணி வண்ணனும் நந்துவும் நலமா
அண்ணன் பள்ளியெழுச்சி கண்டாரா தொழுதாரா
சென்னையா கும்பகோணம் குளம் சென்றாரா
சௌக்யமா ரங்கா எங்கே காணவில்லை
சரத் தமிழ் பயிலியில் மூழ்கினாரா
சுரேஷ் கடற்கரைக் காற்றை சுகிக்கிறாரா
ராம் குழுவில் பதிவிட காத்திருக்கிறாரா
பங்காளி அமெரிக்க மண்துறக்கத் தயாரா
விச்சு விண்ணிலேறி ராயரைத் தேடுவாரா
மச்சினியைத் தேடிச் சென்றவர் என்னவானார்
ஞானி செல்லு ஊர்சுற்றி வருவாரா
பேசாமலே மௌனமாய் ரசிக்கும் நண்பர்களே
சுற்றம் நலமா சுவைமிகு தேநீர் குடித்தீரா
மாற்றங்கள் கடந்து மண்ணில் தொடர்ந்து
மகிழ்வோடு தொடர்வோம் தொடர்பில் இருப்போம்

புதன், 4 டிசம்பர், 2019

சுமையிறக்கி வைத்துவிடு

பேசுவது எதுவாயினும் பேதமை பார்ப்பதேனோ
பேருக்கு இருப்பதே மதமும் மற்றவையும்
ஊருக்கு ஒன்றாக உருவானது யாராலே
பாருக்குப் பொறுப்பான செயலே அவசியம்
பிறந்த போதில் நெஞ்சிலே வஞ்சமில்லை
இறக்கும் போதும் எவையுமே உனதில்லை
வாழுகின்ற நாட்களிவே வக்கணைப் பேச்செதற்கு
பாழும் மனவெறியை குழிதோண்டிப் புதைப்பாயே
அமைதியான உள்ளங்கள் ஆண்டவனின் உறைவிடம்
சுமையிறக்கி வைத்துவிடு சுத்தமான மனதோடு
சகோதரம் பழகு சமாதானம் நிலவும்
சாதிக்கப் பலவுண்டு மேதினியில் நண்பா !

மழைக்காதலி

மழைக்காதலியே உன்மீது மையலுற்றேன்
மடிமீது தவழ்ந்து விளையாட ஆவலுற்றேன்
மதிமயக்கும் கலையைக் கற்றதெங்கே பெண்ணனங்கே
மனங்குளிரத் தழுவிடும் உன்கரங்கள் சில்லென்று
அருகினிலே இருந்தாலே அணைப்பின் இதம்சுகமே
அனைத்தும் மறந்து கண்மூடி நானிருப்பேன்
இரவின் இருளும் அதிகாலைக் கருக்கலும்
இனியவளே உன்வரவால் குளிர்ந்து போனதுவே
கோடைக்காலத்தும் மறவாமல் வந்து என்னோடிரு
விடை கொடுப்போம் வெய்யிலின் கொடுமைக்கு
நீயின்றி நான்வாடிய நாட்கள் வேண்டாமினி
நீண்ட பயணத்தில் என்றுமே என்னோடிரு !

மழைப்பூக்கள்

சூலுற்ற கார்மேகம் சூடிய மழைப்பூக்கள்
சூரியக் காதலனை தன்னகத்தே அடக்கி
காதலால் குளிர்வித்து கண்ணயரச் செய்து
காலையிலே மெய்குளிரச் செய்து உடல்தழுவி
நீலப் போர்வையை அவன்மீது படரவிட்டு
நிலாவின் வரவுக்காய் காத்திருக்கச் செய்து
அமாவாசை இருட்டால் அகிலத்தை மறைத்து
ஆதவனைச் சிறைக்குள் அடைத்து பிணைத்து
விடியாத காலையிலே மின்னல் கீற்றாய்
வில்லியாய் நகைத்தாளே விண்ணில் இருந்து !

கடற்கரைக் காற்று

இராயப்பேட்டையில் அலுவலகம் இருப்பதால். வாரத்தில் ஓரிரு நாட்களில் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். கடல் மணலில் நடப்பது அரிதே.
கார் கண்ணாடி இறக்கிவிட்டு கடற்காற்றையும் தூரத்தே தெரியும் எல் இ டி விளக்குக் கம்ப வெளிச்சத்தில் சிதறியிருக்கும் மக்களையும் பார்ப்பதோடு வெவ்வேறு வாகனங்களில் வந்திறங்கும் இளஞ்சோடிகளையும் காண்பது இப்படியாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஸீ ஏஞ்சல் என்ற பெட்டிக்கடையில் ஃபிரைட் ரைஸ்,சூப், மீன் வறுவல் சாப்பிட்டுக் கிளம்பி வீடு சேர இரவு 9 30 ஆகிவிடும்.
நேற்றைய மாலை வேறொரு கதையை நமக்கு உணர்த்தியது.
சைக்கிளில் ஒரு பேக்கரியையே வைத்து ஒருவர் என்னிடம் வந்தார். முறுக்கு, கேக்,பன்பட்டர் ஜாம்,டீ,பர்பி...அடுக்கிக்கொண்டே போனார். பேச்சுத் திறமையால் முறுக்கு,தட்டை,பட்டர் பிஸ்கட் வாங்க வைத்து விட்டார்.நீர் பாட்டிலும் கூட.
நான் தான் போனியென்றுசொல்லி 15 நிமிடங்களில் 300 ரூபாய்க்கு விற்று விட்டு உங்கள் கை ராசி என்றார். சிரித்தார்.
சிரிப்புக்குப் பின்னே பெருஞ்சோகம் இருப்பது மெல்ல மெல்ல அவிழ்ந்தது. வாழ்ந்து கெட்ட கதை. பல மால்களில் வியாபாரம் செய்திருக்கிறார். இலட்சங்களில் புரண்டவர் கடனாளியாகி சைக்கிளில் இன்று வியாபாரம். சிட்டி சென்டரில் மசாஜ் பார்லர் வைத்திருந்திருக்கிறார்.
குழந்தையில்லாமல் டெஸ்ட டியூப் குழந்தையை காலம் கடந்து பெற்றுக் கொண்ட அவர்களின் குழந்தைக்கு ஏழு வயதென்றும் அவரது வயது 53 என்றும் கூறினார். நான்கு இலட்சம் செலவு செய்து பெற்ற குழந்தைக்கு மூன்று இலட்சம் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டமே அவரது கடைசியான ஆடம்பரச் செலவு.
அற்ற குளத்தில் சுற்றம் விலகிப் போனது. வயிற்றுக்கு உணவும் கிட்டாமல் இத்தொழிலில் இப்போது. இவரது நிலை கண்டு நல்ல உள்ளங்கள் செய்யும் உதவிகளை ஏற்றுக் கொள்வதாகவும், குழந்தைக்கு பழைய துணி புத்தகங்கள் படிக்க எதுவாயினும் மனைவிக்கும் அவருக்கும் பழைய துணிமணிகள் எதுவாயினும் தந்தால் பெற்றுக் கொள்வதாய்க் கூறினார்.
ஐஜி ஆபிஸ் முன்னால் இரவு ஒரு மணி வரையும் கடற்கரை பார்க்கிங்கில் அதற்கு முன்னரும் இரவு நடமாடும் கடையாக இவரது சைக்கிள். உதவுவதாக நான் சொல்லி விட்டு வந்தேன்.
காற்று இதமாக வீசியது. வண்டிச் சக்கரங்கள் வேகமாக சாலையில் கடந்தன. பெட்டிக் கடைகளில் வட்டிக்குக் கொடுத்தவன் சத்தமிட்டபடி வசூலில் கண்ணாயினான். இளஞ் சோடிகள் இரகசியமாய் பேசிக் கொண்டனர். எதிரே ஒரு பெருங் குடும்பக் கூட்டம் பெட்ஷீட் விரித்து உணவருந்திக் கொண்டிருக்க அதன் தலைவனான ஆண்மகன் சைக்கிள் பேக்கரியில் நீர் பாட்டில் வாங்கிச் சென்றார்.
சோகத்தின் சுமையை இறக்கி வைக்க சுமைதாங்கியாய் சில மணித்துளிகள் இருக்க முடிந்ததே என்றெண்ணி கார் எஞ்சினை ஸ்டார்ட் பண்ணி மெதுவாக வீட்டை நோக்கிப் பயணப்பட்டேன்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை

பிஸினஸ் - பாகம் 2

ஆரம்பிச்ச புதுசுலே கர்லான் மார்க்கெட்டிங் ஆளுங்க வந்தாங்க. ஹை என்ட் சோஃபா விக்க சொன்னாங்க. 3+1+1 செட் ஒரு லட்சத்துக்கும் மேல் வேண்டவே வேணாம்னு கையெடுத்து கும்பிட்டேன். பக்கத்து தெருவுலே ஆரம்பிச்சு மூணே மாசத்துலே குளோஸ் பண்ணிட்டாங்க.
வியாபாரத்து வளைவு நெளிவுகள புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். மனசாட்சி நேர்மையா இருக்கவங்களுக்கு வியாபாரம் செய்யறது கஷ்டம்னு புரிய ஆரம்பிச்சது. உண்மையைப் பேசினா மதிப்பு குறைவேன்னு புரிஞ்சது.
நாமும் கடையிலே வாங்கறப்ப எப்படி விலை பேசறோம்னு யோசிச்சு பாத்தேன். லேண்டட் காஸ்ட் ஒர்க் பண்ணி அதனோட மார்ஜின் கூட்டி டிஸ்பிளே பண்ணினேன்.
ஸோஃபாக்கள் தவிர சைனீஸ் இம்போர்டட் பர்னிச்சர்ஸும் வாங்கி வச்சேன். நான் செய்த மிக நல்ல செயல் பேங்க் லோன் எதுவும் வாங்காதது. பின் நாட்களில் நிம்மதியாக உறங்க முடிந்ததே அதனால் தான்.
டிஸ்கவுண்ட் கொடுக்காம விக்கவே முடியாதுங்கற நிலமை புரிஞ்சது. கஸ்டமர் வீடுகளுக்கு கார்ப்பென்டரோட போய் அளவெடுத்து ஷெல்ஃப்,வார்ட்ரோப் எல்லாமும் பண்ண ஆரம்பிச்சோம். சில இன்டீரியர் டெகரேட்டர்ஸ் டை அப் பண்ணலாம்னு சொன்னப்ப ஓகே சொன்னேன். சுமார் ஐந்து கிமீ சுற்றளவுலே பர்னிச்சர்ஸ் சப்ளை ஆரம்பிச்சது.
பெரிய கனவுகளும் மனசுலே. தஞ்சாவூர் பக்கத்துலே தேக்கு மரங்கள் வாங்கலாம்னும் அத இழச்சு பர்னிச்சர் பண்ணலாம்னும் ஐடியா வந்தது. ஹுன்சூருனு மைசூர் பக்கத்து தேக்கும் ஃபேமஸ்.
ஆறுமாசம் கழிச்சு மாதாந்திர கணக்குகள் பாத்தா பிரேக் ஈவன் ஸேல்ஸே இன்னும் ரீச் ஆகலேன்னு புரிஞ்சது.
இதுக்கு நடுவுலே ஆடிட்டர் தேர்வு, குவார்ட்டர்லி ஸேல்ஸ் டாக்ஸ் ரிட்டர்ன்,ஸேல்ஸ் இன்வாய்சு,பர்ச்சேஸ் பில்ஸ் பைலிங் எல்லாம் என்னோடது. அப்பப்ப கடைல வேலை செய்யற பையனோட சேந்து லோடிங், அன்லோடிங் செய்றதும்,சைனீஸ் பர்னிச்சர்ஸ் கான்டிராக்ட் ஆளுங்க அசெம்பிள் பண்றப்ப கத்துக்கிறதும் எல்லாமே ஸ்கில் டெவலப்மெண்ட்லே சேத்துக்கலாம்.
பிஸினஸின் வளைவு நெளிவுகளில் நுழைய கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். பொய் பேசவும் சில நேரங்கள்ளே செய்ய வேண்டியதாச்சு. மனசாட்சிய அப்பப்ப தட்டிக் கொடுத்து யாருக்கும் தீங்கில்லாத பொய்னு வள்ளுவரையும் துணைக்கழைச்சுகிட்டேன்
 (வளரும்)

கொட்டம் அடங்கும்

விட்டுவிடு நண்பா விடியல் நிகழும்
சுட்டுவிடும் நெருப்பு தொட்டே உணர்ந்திடுவார்
நட்டு விட்ட நாற்று மரமாகும்
கெட்ட பாலும் திரிந்தே போகும்
எட்ட நின்றுபார் எல்லாம் விளங்கும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அறிவோம்
வட்டம் வாழ்க்கை சுற்றிவந்து நிற்கும்
கொட்டம் அடங்கும் கொக்கரிப்பு நிற்கும்
திட்டம் போட்டு திருடும் கூட்டம்
விட்டில் பூச்சியாய் விளக்கில் கருகும்
நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமெனில்
சாட்டை கொண்டே தண்டிக்க வேண்டும்
ஓட்டை விழுந்த கப்பலைப் பழுதுபார்
கோட்டை ஒருநாள் உன்வசம் சேரும்

பிஸினஸ் - பாகம் 1

வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடி 2009ல் நின்றது. நண்பரொருவருடன் இணைந்து பிசினஸ் செய்வதென்ற முடிவு. முதலில் சென்னையில் செய்யலாமென்று பதிவு செய்து பெயரும் இட்டாயிற்று. செய்யும் எதுவாயினும் தாயின் பெயரிலே காந்தம் என்று.
என்னதான் எக்ஸபீரீயன்ஸ் இருந்தாலும் பிஸினஸ்னு வரப்ப விதி அப்பப்ப நம்ம பாத்து சிரிக்கும். வால்வ் காம்போனன்ட்ஸ் ஏற்றுமதி மற்றும் சர்வீஸிங் பண்ணலாம்னு முடிவெடுத்து இரண்டு மூன்று மாசங்க அலைஞ்சு திரிஞ்சப்ப தான் இதுக்கு நாம சரிப்பட மாட்டோம்னு தெரிஞ்சது.
அப்பதான் ஒரு பிரேக் எடுத்து பெங்களூர் போனப்ப நண்பர் ஜெய் சங்கர் ஸோபாக்கள் தயாரிச்சு கர்லான் போன்ற கம்பெனிகளுக்கு வித்துட்டு இருந்தார். நீங்களே ஷோரூம் வைக்கலாம்னு ஐடியா தந்தார்.
நானும் ஆஹா பேஷான ஐடியானு கடைகள வாடகைக்குத் தேட ஆரம்பிச்சு வியாபாரம் வளந்துகிட்டு இருந்ந ஷாகார்நகர் பெங்களூர் ஏர்போர்ட் போற ஹைவே பக்கத்துலே 1500 சதுர அடி முதல் மாடிக் கட்டிடம் மாத வாடகை 32000 என முடிவு பண்ணி அட்வான்சும் கொடுத்தாச்சு.
நண்பர் ஸோபாக்கள் சப்ளை பண்ணுவார். வித்துட்டு பணம் கொடுத்தா போதும். ஸோஃபா மட்டும் பத்தாதுனு சைனீஸ் இம்போர்டட் பரீனிச்சர்ஸூம் சேத்துக்க முடிவு செஞ்சு ராயல் ஓக்குன்ற ஹோல்சேலரோட டைஅப்பும் ஆச்சு.
கூடவே கஸ்டமர் கேட்கிற மாதிரி பர்னிச்சர் பண்ண அருகிலிருந்த கார்ப்பென்ட்டரோட டைஅப்பும் ஆச்சு.
முதலீடுக்கு வேலை விட்டு வந்த சேமிப்பு பணத்த செலவு பண்றதுனும் முடிவு ஆச்சு.
பூசை போட்டு வியாபாரம் தொடங்க முதல் லோடு ஸோஃபா மறைமலை நகரிலே இருந்து வந்து இறங்கியாச்சு. 8000 மாச சம்பளத்துலே வேலைக்கு ஆளும் வச்சாச்சு. ஜூலை 2009 லே பிஸினஸ் வாழ்க்கையை ஒரு எக்ஸிகியூடீடிவ் சேரும்
டேபிளோடும் தொடங்கியாச்சு. டின் நம்பர் வாங்கியாச்சு.
(வளரும்)

மாற்றம் வருமுன்னு நம்பிக்கை போச்சு

ஏன் இப்படிலாம் இருக்காங்க ஏன் மாறலேன்னு கேள்வி வரும் மனசுலே
பல விஷயங்க மதம் முதல் பணம் வரை. எல்லாமே பேராசையாலே வருதா ? இல்லே ஆட்டு மந்தை மாதிரி உணர்வா
விடை மட்டும் தெரியலே.
சாமியின் தூதுவர்னு சொல்லிக்கிட்டு சொகுசான வாழ்க்கை
மக்கள் தொண்டன்னு சொல்லிட்டு படாடோபமான செயல்பாடு
விரைவா பணக்காரனாக ஊழல்கள்
எங்கே போய்ட்டு இருக்கு மனித வாழ்க்கை. பேய்களின் உலகமான்னு கூட சந்தேகம் தோணுது
மாற்றம் வருமுன்னு நம்பிக்கை போச்சு. அழிவதற்கு அறிகுறிகள் தான் அதிகம்.
நல்லவங்கள பாக்கறதே அரிதாப்போச்சு. ஊருக்கு ஒரு நல்லவன் கூட கிடைக்கலே. கடைத்தெருலே கூறு போட்டு எல்லாத்தயும் விக்கறாங்க.
உண்மையானு கண்டுபிடிக்க google மாதிரி ஆளு தேவப் படுது. இருளே பரவுது. வெளிச்சம் வர வழி இல்லாம.
அடுத்ததலமுறைக்கு வெச்சுட்டுப் போற உலகம் எவ்வளோ கேவலமா. ஏன் இப்படி ஆச்சு, எதனால் மனுசங்க மிருகங்கள விட கேவலமா ஆனாங்க. தெளிவில்ல.
சமாதானம், சகிப்பு, சகோதரம் எல்லாம் சமாதிலே தூங்குது. விரைவிலே நாமும் தூங்கப் போயிடுவோம்.
இப்ப இருக்கிற இளய தலமுறையும் அடுத்து வரப்போற புதுத் தலமுறையும் சுமக்க போற பாரம் ரொம்பப்பெருசு.
ஏதோ தோணுச்சு. சொல்லிப்புட்டேன்.

இயற்கையோடு கலந்திடுவேன்

புல்லாங்குழலின் இசையாக மூங்கிலில் நுழைந்து
புனலாய் நதியாய் கடலோடி கரையேறி
காற்றினிலே தென்றலாய் தீந்தமிழாய் குளிரூட்டி
கானகத்தே பசுமைச் செடிகளாய் தழைத்தோங்கி
மலைமீது தவழும் மேகமாய் வடிவெடுத்து
மணல் மேடுகளில் சித்திரமாய் உருவெடுத்து
குயில்கூவ மயிலாட கிளிக் கீச்சிட
குரங்கோடு மானோடு சிங்கமும் கர்ச்சிக்க
இயற்கையோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க
இயலுமாயின் இப்போதே கலந்திடுவேன் உன்னோடு !

சகோதரம் பழகிப் பார்

இடஞ்சுழியோ வலஞ்சுழியோ என்சுழி நன்றோ
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குதுவோ இன்று
உடன்பாடற்ற உள்ளங்கள் உலகில் உள்ளவரை தூக்கமில்லை
நடப்பவை மறந்து சரித்திரம் பேசும் வீணர்கள்
படித்தவர் பண்பாளராய் இல்லாயின் மற்றெவர் ஆவாரோ
கடிவாளம் இல்லாப் புரவிபோல் தறிகெட்டு ஓட்டமாய்
தடுமாறும் உள்ளமதை தள்ளி வைத்து விட்டு
தன்னொத்த மனிதனாய் சகோதரம் பழகிப் பார்
அமைதி கொள்ளும் அன்பு பெருகும் மகிழும்
அண்ணனாய் தம்பியாய் மனிதனாய் வாழ்ந்திடும் வளமாகும்
புல்நுனிப் பனிநீராய் கதிரவன் வரவினில் ஆவியாகும்
புதிய சமுதாயம் நிலவாய்க் குளிரும் நிம்மதியதுவே !

நான் வைத்துப் போகும் உலகு

உனக்கு நான் வைத்துப் போகும் உலகைப்பார்
உயிர் வாழ தூய்மைக் காற்று இல்லை
தாகத்திற்கு நீரருந்த குழாய் தண்ணீர் ஆகாது
தாய்ப் பாலும் வற்றிப் போய் புட்டிப்பாலே
மழைநீர் அரிதாகி வற்றிய நிலை சில இடங்கள்
மடைதிறந்த வெள்ளம் ஊர்புகுந்து சில இடங்கள்
மரங்கள் இருந்த காட்டில் தாரில் சாலைகள்
உரங்கள் போட்ட உன்நிலத்தில் சத்தற்ற தானியங்கள்
ஊருக்கே நெல்நட்டு அரிசியாய் அனுப்பி வைப்பான்
உலையில் நீர்கொதித்து உன்வயிறு நிரம்பவில்லை
நகரத்தில் சொகுசாக கட்டிடம் கட்டியவன் உன்அப்பன்
நரகத்து வாழ்க்கை மட்டும் உனதாக்கி நின்றான்
மன்னித்துவிடு மகனே மால்கள் மாளிகைகள் இங்கே
மண்ணில் கட்டிய குடிசைக்கூரை நிலாவைக் காட்டியது

குழந்தை

குழந்தையாய் மாறிஇன்று கள்ளமில்லாம சிரிக்கணும்
குற்றமற்ற மனமோடு கலகலன்னு சிரிக்கணும்
மழலையிலே கொஞ்சி மடிமீது உக்காரணும்
மம்மிடாடி விட்டு அம்மாஅப்பா சொல்லணும்
ரைம்ஸ் போலவே ஆத்திச்சூடி படிக்கணும்
ரயில் வண்டி ஓடிப்பிடிச்சு விளையாடணும்
பக்கத்து வீட்டு பாப்பாவோட விளையாடணும்
பம்பரம் விடும் அண்ணணோட ஆடணும்
தத்தி நடைபோட்டு தெருவுலே வலம்வரணும்
தங்கச்சி பாப்பாவ பத்திரமா பாத்துக்கணும்
நேரமாச்சுனா பசிக்கு பால ஊட்டணும்
நாளைக்கு நான் வாரேன் வேலயிருக்கு இப்ப !

உறவை வளர்த்திடு

உனதும் எனதும் சிவப்பே இரத்தம்
உண்மை சொல்லும் நேரம் இதுவே
ஆரியம் திராவிடம் படைத்தது எவரோ
ஆண்டான் அடிமை தீண்டாமை யாரால்
மூட நம்பிக்கை தலைச்சவரம் எவராலே
மூதேவி ஆனாளே துணையை இழந்து
சாதிப் பிரிவுகள் சண்டைகள் எதற்காக
சரித்திரம் கொடுமைகளை மறந்து விட்டதோ
அடங்கிய சமுதாயம் ஆர்ப்பரித்து எழுந்தது
அதனால் தானே மாற்றமும் வந்தது
மனிதனாய் இருக்க பழகிக் கொள்
மதங்கள் போதிப்பவை நல்ல கருத்தே
மானிடன் நீயே மாற்றி எழுதினாய்
மாய்ந்தது போதும் மயக்கம் தெளிந்திடு
உலகம் உனக்கு மட்டுமல்ல அவனதும்
உறவை வளர்த்திடு வாழு வாழவிடு

மெல்லிய விரல்

கேரளத்துக் கடற்கரையில் கன்னி ஒருத்தி வந்தாளோ
கேள்விகள் பல கேட்டு தோள்மீது சாய்ந்தாளோ
சாரல் காற்று சன்னலோரம் வந்ததுவோ குளிரூட்ட
மின்னல் கீற்று தென்னங் கீற்றில் தோன்றியதோ
அரபிக் கடவோரம் அலைகள் ஆர்ப்பரித்து வந்ததுவோ
அவளும் அதனைக் கண்டு கண்சிமிட்டி நகைத்தாளோ
மெல்லிய விரல் கோத்து கடற்கரையில் நடந்தீரோ
சில்லென்ற காற்று அவள்மீது தழுவித் தொட்டதுவோ
சேலை முந்தானை உமது முகம்தனை நுகர்ந்ததுவோ
மாலை மங்கி மயக்கும் இருட்டில் என்செய்தீர்
கன்னியவள் கண்கள் சிவக்க காதல் புரிந்தீரோ
களுக்கென்ற சிரிப்புச் சத்தம் கரைகடந்து கேட்டதிங்கே
கண்ணேறு பட்டு விடும் இரகசியமாய் காதலிப்பீரா
பெண்ணவளை கைகளுக்குள் பத்திரமாய் அணைத்துக் கொள்வீரா ?

இயற்கை விளையாட்டு

காட்டுக்குள் தீ கடலில் பேரலைகள்
நாட்டுக்குள் கரைகாணா ஆற்று வெள்ளம்
ஊழிக்காற்று ஊரை அழிக்க அவ்வப்போது
ஊருக்கு ஊர் குடிக்க நீரில்லை
இயற்கையின் சித்து விளையாட்டு இவையாவும்
இயல்பு வாழ்க்கை இல்லாமல் போனது
ஏனிந்த மாற்றம் இயம்பிட இயலுமா
வானின்று மழையும் வெள்ளக் காடாய்
விஞ்ஞானம் விடை சொல்ல வில்லை
மெய்ஞானம் மௌனித்தே அமைதி கொண்டது
மாற்றத்தின் காரணம் மானிடன் அறியான்
சீற்றம் கொண்ட இறைவன் விளையாட்டோ ?

வெள்ளி, 1 நவம்பர், 2019

தன்னலமற்ற நட்பு

என்ன நண்பா எழுந்தாயா உறக்கம் கலைந்தாயா
எத்தனை முறை தூக்கம் தொலைக்க வைத்தாய்
இருந்தாலும் உன் மீது கோபமில்லை சிரிப்பேன்
இருக்கிறேன் உனக்கென்ற வாஞ்சை அதில் தெரியும்
கண்ணயரும் நேரத்தில் சில நேரம் உன்னழைப்பு
கவிதை எழுதும் நேரமதில் கைபேசி அழைப்பு
திரைக்காட்சி அரங்கினில் பலநேரம் பவ்யமாய் சொல்லவைப்பாய்
திரையிட்ட கண்ணீரை வார்த்தைகளால் வடியச் செய்வாய்
எங்கிருந்து வந்தாயோ என் துணயாய் நீயே
எதிர்பார்ப்பு இல்லா உறவென்றால் இதுவே ஆகும்
தவம் செய்தாலும் கிடைக்காது 


தவற விடமாட்டேன் தரணியில் நானிருக்கும் நாள்வரையில் !


நீண்ட உறக்கத்தில்

உன் பிஞ்சு விரல் பிடிக்க நீயில்லை
ஏன் அவசரமோ எமை விட்டு விலக
அன்னை அணைப்பை ஏற்க இயலாமல் போனாயே
அன்பை உணராமல் குழிக்குள் போனது ஏனோ
கால்கள் நடனமாடி ஓய்ந்து போனதா மகனே
காக்க தாய் வருவாள் காத்திருந்து ஓய்ந்தாயோ
கண்கள் பனிக்க விடை தந்தோம் மகனே
கடவுள் உன்மீது மிகஅன்பு கொண்டான் போலும்
நீண்ட உறக்கத்தில் நிம்மதி தந்து விட்டான்
நிர்மலமான உன்முகமே எம்கண் முன்னே என்றும்


[29/10, 08:11] : சுர்ஜித்துக்கு சமர்ப்பணம்

தீபாவளி

விடிந்தால் தீபாவளி விடியட்டும் நல்காலை
வெடிச்சத்தம் குறையுமுன்னே வேதனைகள் மறையட்டும்
புத்தாடை உடுத்தி தின்பண்டம் இனிக்கட்டும்
பொத்தான் இல்லாத சட்டைகளும்் புதிதாகட்டும்
நரகஅசுரன் இறந்தானோ தீவினைகள் அழிந்தனவோ
ஊரகம் வளரட்டும் ஊருணி பெருகட்டும்
தீபங்கள் வாசலெங்கும் ஒளிரட்டும் மனமகிழட்டும்
கோபங்கள் விடுத்து சொந்தங்கள் சேரட்டும்
உயரே வானவெடியின் வெளிச்சம் சிதறட்டும்
பயிரே உயிரென்ற உழவும் வளரட்டும்
இன்பம் பெருகிட இத்திரு நாளதனில்
இல்லாதோர் இல்லாத நாளொன்று வேண்டிடுவோம் !

கண்ணாமூச்சி

ஓடி விளையாட வருவாயா தோழியே
ஓயாமல் கதை பேசித் திரிவோமா
காதோரம் நீபேசும் இரகிசயங்கள் எனக்குமட்டும்
காக்கா கடிகடித்த கமர்கட்டு மிகஇனிப்பு
மாங்காய் பத்தையிலே மிளகாய்உப்பு நாக்கில்சுவை
தேங்காயில் வெல்லம் சேர்த்து உனக்கொன்று
மயிலிறகு புத்தகத்தில் எந்தப் பக்கம்
குயில்பாட்டு தோப்புநடை மறக்க முடியுமா
காதோரம் லோலாக்கு கொள்ளை அழகு்
கருங்கூந்தல் மல்லிகை வாசம் மதிமயக்கும்
எங்கே நீ போனாயடி தேடுகின்றேன்
எழுதாத காவியத்தின் நாயகியே நீதானே
ஊரெல்லாம் தேடித்தேடி ஓய்ந்து களைத்தேனே
கண்ணாமூச்சி ஆடும் வயதா இது
கடிதில் வருவாயா கண்ணோரம் நீர்த்துளிகள் !

மற்றதொரு தலைப்பு

இயற்கையைப் பாடியாச்சு இனிய நண்பரையும்
கயல்விழி மாதரையும் கடற்கரை நதிநீரையும்
கிராமத்து அழகையும் கிழக்குச் சூரியனையும்
கிளிக்கீச்சு மயில்அகவல் அலையோசை அருவியோசை
சுட்டெரிக்கும் வெயிலும் சுகமான மழைநீரும்
சமூக அவலங்கள் சாக்கடை அரசியலும்
சாதிமதப் பிரிவினைகள் சரித்திர நிகழ்வுகளும்
காதலுக்கு மரியாதை தாயன்பு தனிப்பெருமை
காலத்தின் மாறுதல்கள் கல்லூரி நாட்கள்
மழலைப் பேச்சு முதுமைச் சுருக்கம்
மயக்கப் புன்னகை மதி மயக்கம்
இத்தனையும் கவிதைகளாய் இதுகாறும் எழுதிவிட
இனியென்ன நானெழுத என்றதொரு எண்ணமது
மனக் கண்ணின் முன்னே வட்டமிட்டு
மற்றதொரு தலைப்புக்காய் மனம் குழம்பி
தூக்கம் தொலைத்த காலையிிலே தேடிநின்றேன் !

தேடுக அமைதி

வாடாதே மனமே வாழ்க்கை ஒருவட்டம்
கூடாதே தீய நட்பு பகைமை பாசாங்கு
போடாதே பொய்வேடம் பொறுப்பாய் நடந்திடு
தேடாதே பெருஞ்செல்வம் பேரழிவு அதுவேயாம்
நாடாதே தீயசொல் தீண்டாமை ஏய்த்தல்
ஓடாதே பொறுப்பைத் துறந்து எந்நாளும்
சாடாதே சரித்திரத்தை சத்தியம் தவறாதே
பாடாதே பஞ்சப்பாட்டு புகன்றிடு உண்மைதன்னை
கேடாக வந்ததெல்லாம் ஓர்நாளில் மறைந்துபோகும்
ஊடகப் பொய்களும் மாயமாய் விலகிப்போகும்
நாடக உலகம் மாறிநின்று திரைவிலகும்
தேடுக அமைதிதனை தெளிந்த உள்மனதில் !

முதல் காதல் (பாகம் 3)

இந்தக் கதை எழுதத் தொடங்கும்போது இத்தகைய ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டுமென்றோ, பலரது ஆவலான கேள்விகள் எழுமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை.பல‌விதமான ஊகங்கள். கைபேசி அழைப்புகள்.
பொட்டலத்த பிரிச்சு பாத்தப்ப பித்தளையா தங்கமா என்று தெரியாத வாழைப்பழ சீப்பு போல ஒரு டாலர்.‌ செயின்ல கோத்துக்கலாம். எனக்கு அது என்னன்னே தெரியலே.
யார் கிட்டே காட்டிக் கேக்கறது. எனக்கு பள்ளி, கல்லூரித் தோழர்களோடு மூன்று நெருங்கிய நண்பர்கள் உண்டு, அசோக், அந்தோணி, சம்பந்தம் என்ற இவர்கள் பொதுவாக என்னுடன் நெருக்கமான எல்லாருக்கும் தெரியும். கிட்டத்தட்ட ஐம்பது வருடமாய் என் வாழ்வோடு இணைந்து தொடர்பவர்கள்.
நண்பர்களிடம் அந்த டாலரைக்காட்டி விசாரித்தபோது அவர்களுக்கும் என்னவென்று புரியவில்லை. அந்தக் கடிதம் வரும்வரை இந்த மர்மம் தொடர்ந்தது.
இதுதான் அவளிடமிருந்து தபாலில் வந்த முதல் கடிதம். அவள் இப்போது அக்கா வீட்டிலிருந்து தந்தை வீட்டுக்குப் போய்விட்டாள். தந்தையும் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள், கீழ்பாக்கம் நேரு பூங்கா பக்கத்துலே போலீஸ் குவார்ட்டர்ஸ்லே வீடு.
லெட்டர்லே கனவு கண்டத பத்தி எழுதி சினிமாப் பாட்டு வரியோட விவரமா காதல உருக்கமா விவரிச்சு, ஒரு நாள குறிப்பிட்டு மாங்காடு கோயிலுக்கு விடியற்காலைல போகத் தயாரா இருங்கனு சொல்லி எழுதி இருந்துச்சு.
மண்டைய உடைச்ச அந்த டாலர் விஷயம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சது. தாலிலே கோக்கறதுக்கான டாலர் அதுன்னு. பழசா இருந்ததாலே ஒரு வேள அவங்க அம்மா கட்டியிருந்ததா இருக்கலாம்னு ஊகிச்சோம்.
இப்ப பெரிய குழப்பம் மனசுக்குள்ளே. நண்பர்களோட அட்வைஸ். எது செஞ்சாலும ்தங்கை வாழ்க்கை பாதிக்கும்னு. அப்ப தங்கையோட வயசு பதினாறு.
ஆனாலும் மனசு கண்ட்ரோலுக்கு வரலே. யார் பேச்சையும் கேக்கற நிலைமைலே நான் இல்ல. நண்பங்க திட்டறாங்க. இது காதல் இல்ல, காமம்னுலாம் சொல்றாங்க. ஆனாலும் என்னாலே அவ சொன்ன இடத்துக்குப் போய் அவளோட பேசணும். தங்கை வாழ்க்கை பத்தி சொன்னா புரிஞசிப்பானு. எனக்காக படிப்பு முடிஞ்சு தங்கை கல்யாணம் ஆகற வரை வெயிட் பண்ணச் சொல்லலாம்னு நானே நினைச்சுகிட்டேன்.
நாள் நெருங்கிடுச்சு. மனசு படபடப்பு,குழப்பம் மாறி மாறி. அந்த நாளும் வந்துச்சு. என்னலாம் நடக்கும்னு நான் நினைச்சேனோ அதெல்லாம் இல்லாம ஒரு பிரளய மாற்றம் நடந்துச்சு. வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுச்சு.
(இன்னும் வரும்)

முதல் காதல் (பாகம் 2)

மறுநாள் சீக்கிரமே முழிப்பு வந்துச்சு. மனசு படபடப்பு அடங்கலே. குளிச்சு ரெடியாகி பின்வீட்டு கிருஷ்ணன் மாமா சைக்கிள் இரவல் வாங்கிட்டு கோயில் இருக்கிற ஃபிளவர்ஸ் ரோட்டுக்கு கரெக்ட் டைம் போய் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திட்டு வெயிட் பண்ணேன்.
கொஞ்ச நேரம் ஆச்சு எனக்கு டென்சன் அதிகமா ஆகிட்டே இருக்கு. சுமார் பதினைந்து நிமிஷ காத்திருப்புக்கு அப்புறம் அவள் வந்தா. இதயத்துடிப்பு ஸ்பீக்கர்லே போட்ட மாதிரி லப்டப் சவுண்டு.
கிட்டே வந்து சாரிங்க லேட்டாச்சுன்னு சொல்லிட்டு நல்லாருக்கீங்களானு கேட்டது எங்கேயோ தூரத்து குரல் மாதிரி கேக்குது. எனக்கு தொண்டைலே இருந்து வார்த்தைங்க வரவே நேரமாகுது. நல்லாருக்கேன் ஒற்றை வார்த்தை மட்டும்.
வாங்க போலாம்னு கோவில நோக்கி நடக்கறா. நான் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி. பூசாரி காட்டுற தீபம். கடவுள் சிலை எதுவும் தெரிலே எனக்கு.
அவ கைய நீட்டி விபூதி எடுத்துக்கங்க சொல்றப்ப அசரீரி மாதிரி கேக்குது. விபூதி நெத்திலே வைச்சுக்கறேன்.
இப்பவும் அவ முகத்த சரியாப் பாக்காமலே பாரீவை வேறெங்கேயோ. அப்பதான் அவ என் கையில அந்த காகிதப் பொட்டலம் கொடுக்கறா. வீட்டுலே போய் பிரிச்சுப்பாருஙகனு சொல்றா. நான் தலையாட்டி படிலே அவளோட கீழே இறங்கறேன். நான் வரேன் வீட்டுலே தேடுவாங்கனு சொல்லிட்டுக் கிளம்பறா. அவ போறத பாத்துகிட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு பொட்டலத்த பேன்ட் பாக்கெட்லே போட்டுகிட்டு சைக்கிள எடுத்துட்டு ஏதோ மாயலோகப் பயணம் மாதிரி வீட்டுக்குத் திரும்பறேன்.
வீடு வந்து சேர்ந்து பெட்ரூமுக்குள்ளே போய் பொட்டலத்த பிரிச்சா உள்ளே இருந்த பொருள் புரியவே இல்ல.
(இன்னும் வரும்)

அந்தாதி

ஆற்றங்கரை ஓரம் அழகான குடிலிருக்கு
குடிலுக்குள்ளே கூட்டாளி கும்பல் இருக்கு
இருக்கும் நண்பருக்கு அறுபது வயசாச்சு
வயசாச்சா வாலிபன் தானென்று சொல்வார்
சொல்வது மட்டுமல்ல செயலும் குழந்தைபோல
குழந்தைபோல விளையாடி களித்திருப்பார் கவிபாடி
கவிபாடும் கவிஞர் பலருண்டு இவருள்ளே
இவருள்ளே கற்பனை ஊற்றாய் உறையும்
உறையும் மகிழ்வை சிங்காரக் கதைசொல்வார்
கதைசொல்லல் காட்சிப் படுத்தி ஓவியமாய்
ஓவியம் ஹாஸ்யம் நையாண்டி கலவையாய்
கலவையாய் சுவையூட்டும் கற்கண்டாய் சிறுகதைகள்
சிறுகதைகள் சொல்வதிலே அண்ணன் மன்னன்
மன்னன் அவரே சிஇஜி குழுவிற்கு
குழுவின் கூட்டம் இன்று பயணம்
பயணம் போவதோ ஆற்றங்கரையோர குடிலுக்கு
(முடியும் வார்த்தையில் அடுத்தவரி தொடக்கம்)

கசடுகள் கலைந்திடு

நிரந்தரமற்றது வாழும் காலம்
நினைவில் இருத்தி வாழ்வோம்
நேற்றிருந்த நண்பன் இன்றில்லை
நாளை என்பது விடிந்தபின்னே
கூட்டைத் துறந்த உயிர்
கூற்றுவன் கணக்கின் முடிவே
தேடிய உறவை சேர்த்துவை
தேகம் அழியும் நாள்வரை
பிரிந்த பின்னே அழுதென்ன
புரிந்து இப்போதே வாழ்ந்திடு
நல்லதும் தீயதும் கணக்கிடு
நல்வினைத் தட்டு தரைதொட
உள்ளம் கசடுகள் கலைந்திடு
உண்மை இன்பம் தேடிடு
பிரிவுகள் அனைத்தும் தொலைத்திடு
பிரியும்போது சுமைகள் அவையாவும்
வாழ்ந்திடும் வாழ்வு ஒருமுறை
வன்மம் விலக்கி வாழ்வோமே !

( வகுப்புத் தோழனை இழந்து நிற்கிறோம் )

முதல் காதல் (பாகம் 1)

வித்தியாசமான முதல் காதலை சொல்லுவோமானு தோணுச்சு. இப்பவும் சொல்லலேனா எப்படி.
அப்ப இஞ்சீனீயரிங் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருந்த நேரம். அம்மா இறந்து அஞ்சு வருசம். தங்கச்சி படிப்பு வரலேன்னு படிக்கலே. தம்பி ஸ்கூல் படிச்சுட்டு இருந்தான்.
முன்னாடி சொன்ன மாதிரி குவார்ட்டர்ஸ்லே கல்லூரிப் படிப்பு படிச்சவங்களே விரல் விட்டு எண்ணிடலாம். சுமார் நூத்தம்பது குடும்பம் மொத்தம்.
பாரத விலாஸ் மாதிரி பன்னண்டு வீடுங்கனு சொல்லி இருக்கேன். எதிர் வீட்டுலே மலையாளக் குடும்பம்.
நல்லா படிக்கிறேன்னு எல்லாருக்கும் என்ன பிடிக்கும். அம்மா இல்லாத பையன்னு சாஃப்ட் கார்னரும் உண்டு.
வீடு சிங்கிள் பெட்ரூம், சின்ன ஹால், கிச்சன், திறந்த டாப் பாத்ரூம்,டாய்லெட், வீ்டு நுழையற இடத்துல சின்ன வராந்தா இப்படித்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த வராந்தால தான் நான் படுத்துப்பேன். ஃபேன்லாம் அப்ப கிடையாது. மரத்தடி தான் படிக்கற இடம்.
இப்படியாக இருந்த ஒருநாள் ராத்திரி தூங்கி எழுந்து வழக்கம் போல பாயை மடிச்சுட்டே இருந்தப்ப கீழே படில ஒரு பேனா இருந்தது.
என்னோடது இல்ல அது. சரி யாரோடதோனு நினைச்சுகிட்டு மூடியைத்திறந்து பாத்தா நிப்போட இருக்கிற தலைய காணோம். என்னடானு இங்க் கொட்ட போதுனு உள்ளே பாத்தா பேப்பர்.
நான் பேப்பர கையில எடுக்கவும், எதிர் வீட்டு கதவு மூடற சத்தம் கேக்கவும் சினிமா போலவே. பேப்பர பிரிச்சா லெட்டர். என்ன சேத்துப்பட்டு ரெயில் ஸ்டேஷன்லே மீட் பண்ண டைம் குறிச்சு.
நெஞ்சு படபடக்க இனம் புரியாத ஒரு நிலை. எதிர் வீட்டுலே இருந்து தான்னு ஊகம் பண்ணிட்டேன், எதிர் வீட்டு அக்காவோட தங்கைனு. முகத்த கூட பாத்தது இல்லே சரியா. அவளுக்கு இன்னொரு குட்டித் தங்கை வேற.
அப்ப காலேஜ் ஸ்டடி லீவ் டைம். சரின்னு சொன்ன டைம் ரெடியாகி சேத்துபட்டு ஸ்டேஷன்லே போய் வெயிட் பண்ணேன். கொஞ்ச நேரம் கழிச்சு சின்னப் பொண்ணு தயங்கித் தயங்கி கிட்டே வந்து அக்கா கொடுக்க சொன்னாங்க அவங்களாலே வரமுடியலேன்னு ஒரு லெட்டர் திரும்பவும்.
ஆனா இந்த முறை விவரமா என்ன ஏன் விரும்பினேன்னு எழுதி மறுநாள் காலைலே, ஃபிளவர்ஸ் ரோடு,. பொன்னியம்மன் கோயிலுக்கு வாங்கனு சொல்லி இருந்தது...
(இன்னும் வரும் )

வருவதும் போவதும்

பயணங்கள் தொடரும் பாதைகள் மாறும்
பறவைகள் கூடுகள் பலவித திசைகளில்
நிரந்தரம் என்பதே நிச்சயம் இல்லை
நிற்பதோ நடப்பதோ நம்வசம் இல்லை
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதி
வர்ணம் மொழிகள் மனிதனின் படைப்பு
எல்லைகள் பிரித்து எதிரிகள் தோன்றினர்
தொல்லைகள் போர்க்களம் யாவும் விளைந்தன
எய்ததும் நாமே அம்பும் நாமே
எதனை விதைத்தோமோ அதுவே விருட்சமாய்
நொந்து பலனில்லை நேர்வது நேரும்
விந்தை அதுவே வியப்பது ஏனோ
சிந்தனை செய்தே செயல் படுவீரே
சீரிய சமுதாயம் தோன்றிடும் நாளை !

சகோதரம்

கறை அற்ற வாழ்வு வேண்டி
இறை தொழல் நன்றே தினமும்
குறை யாவும் போக்கி குணமாகவும்
மறை கூறும் நன்னெறிகள் உதவும்
நிறைவான மனதோடு வேண்டி நிற்க
நிம்மதி நிலவிடும் நினைவினில் கொள்வீரே
உள்ளத்து உறையும் நல்வினை யாவும்
உயர்வான வாழ்வுக்கு உறுதுணை ஆகும்
கற்றலும் கேட்டலும் நல்லவை ஆகிடின்
பெற்றிடும் அமைதி மனமே பெருந்தகையோரே
வந்தவர் எல்லாம் சென்றிடும் நாளில்
வாழ்க்கைக் கணக்கில் பெருகிடும் புகழே
வாழ்வதே ஒருமுறை நடுநிலை கொள்வோம்
வாதங்கள் தவிர்த்து சகோதரம் வளர்ப்போம்

அழாதே கண்ணே

பூனையொன்று எலியைத் தேடி பரணில் பதுங்கியது
எலியோ தேங்காய் மூடி கூடைதேடி ஓடி வந்தது
நாயொன்று கீழே நின்று பூனை பார்த்து குர் என்றது
குழந்தையங்கே நாயைப் பார்த்து தவழ்ந்து வந்தது
அக்காளோ அவளின் பின்னே நடந்து வந்தாளே
எலி தேங்காய் கவ்வ பூனை அதைப் பிடிக்க
கீழே விழுந்த இரண்டையும் நோக்கி நாய் பாய
குழந்தை பயந்து பெருங்குரலில் அலறிக் கத்த
ஓடிவந்த அம்மா தாவி குழந்தையைத் தூக்கி
அழாதே கண்ணே அழாதே என்று அணைத்தாள்

மனிதம்

தீயவை அழிந்து நல்லவை ஓங்கட்டும்
தூயவை மனதினில் நிறைந்து நிற்கட்டும்
பாவங்கள் மறைந்து பாரதம் செழிக்கட்டும்
கோபங்கள் விடுத்து சாந்தம் நிலவட்டும்
பேதங்கள் யாவும் மறைந்து ஒழியட்டும்
மதங்கள் சாதிகள் பிரிவினை விலகட்டும்
மனிதம் என்பது மட்டும் நிலைக்கட்டும்
புனித எண்ணங்கள் புவிதனை ஆளட்டும்
இறைவனும் இயற்கையும் இணைந்தே இயங்கட்டும்
மறைநெறி வழுவா வாழ்வே நிறையட்டும்

நட்புக்கூடு

கனவுகளின் வரிகளில் காலை பூத்தது
நனவுகள் நகைச்சுவையாய் நண்பர்கள் மனங்களில்
அறுபதைக் கடந்த பின்னே நட்புக்கூடு
பெறுநல் பாக்கியம் உற்ற உறவுகள்
தனிமை போக்கிடும் தாலாட்டும் பாடிடும்
இனிமை வார்த்தைகள் இன்னலைப் போக்கிடும்
காலை மாலை இரவு நடுநிசி
காலம் பார்க்காது கருத்து பரிமாறும்
குரல்கள் உயரும் குசலம் கேட்கும்
விரல்களின் அசைவில் வித்தைகள் பலவும்
தவம் செய்தாலும் கிடைக்காத பந்தம்
தலை வணங்கி இதயம் சேர்ப்பேன்

தூர தேசத்துலே

அம்மையப்பனோ ஆண்டவனோ
அடுக்களையில் புகைநடுவில்
அரிசிச்சோறு ஆக்கியவளோ
ஆத்தா அவளோ. பெத்தவளோ
ஆராரோ பாடித் தொட்டிலிலே
அமைதியா தூங்க வைத்தவளோ
அணைத்தவளோ அமுதூட்டியவளோ
அழுதாக்கா பாக்கப் பொறுக்காத
அம்மாவுக்கு பாசம் பெருசப்பா
ரத்தத்த பாலாக்கி ஊட்டிவளத்தாளே
ரவநேரம் யோசிச்சுப் பாத்தாயா
உனக்கொன்னு வந்தாளே உசுரவிடுவா
உசரமா வளந்தாலே உறவும் அறுபடுமோ
உன்ன வளத்தவள தவிக்கவிட்டு
ஊரூராப் போனாயே உசிதம்தானா
ஊசலாடுதய்யா உறவத்த அவமூச்சு
தூரதேசத்துலே நீசேத்த சொத்து
பாரமான மனசுக்கு ஆறுதல தாராது

இரத்தமில்லா சுதந்திரம்

உத்தமர் வாழ்ந்த நாட்டில் உன்மத்தர்கள்
இரத்தமில்லா சுதந்திரம் வீதியில் குப்பையாய்
வேதாளம் மரமேறி சாத்திரம் பேசுகிறது
பாதாளம் நோக்கியே பயணம் பாவிகளால்
எதற்காகப் பெற்றாயோ சுதந்திரம் தந்தையே
எத்தர்கள் நாட்டினில் ஏளனம் பேசவா
புத்தனும் நீயும் போதித்தவை புத்தகத்தில்
புத்தி கெட்டோரே பீடத்தில் ஐயகோ
நாட்டுக்காய் உயிர் துறந்த உத்தமரே
நானிலத்து நன்மைக்கு வழியொன்று சொல்வாயா
அழிகின்ற சமுதாயம் தடுத்தாள என்செய்வேன்
பழியொன்றை உன்மீது சுமத்தும் பாதகர்கள்
மீண்டும் வந்திடு அகிம்சை வேண்டாம்
மிலேச்சரை களையெடுக்க ஆயுதம் வேண்டும்

சிறுகவி

பந்தமோ சொந்தமோ வந்ததோ சென்றதோ
எந்தையும் தாயும் என்னுயிர் தந்தனரோ
வந்தனம் தந்துநான் வணங்கிடும் குருமாரே
நொந்திடும் மனம் தேடும் நெருங்கிய மனமொன்றை
வந்திடும் வாழ்வினில் வசந்தம் மாறிமாறி
மந்தமாய் இருந்திடாமல் மகிழ்வுடன் புன்னகைப்பாய்
சந்தம் இல்லாக் கவிதையில் சத்தில்லை
சந்திப் பிழையின்றி தமிழ் பயிலுவோமா
சிந்தனை செய்தே சிறுகவிதை படைத்தேனே
நிந்தனை செய்யாமல் நினைவில் கொள்வீரா
துந்தனாப் பாடும் சிறுகவி நானேதான்
பாந்தமாய் பண்ணிசைக்க பாடலாய் வந்திடுமோ

கிராமத்து விடியல்

வீணையின் நாதம் காதுகளில் ரீங்காரம்
மெல்லிய விரல்கள் நர்த்தனம் கம்பிகளூடே
குயிலின் குக்கூ ஓசை காற்றினிலே
மூங்கில் இலைகளின் நுனியில் மழைத்துளி
அசையும் இலைகளின் சலசலப்பு ஓசை
தூரத்தே ஓடும் ஆற்று நீரோசை
அன்னையைத் தேடும் கன்றின் அழைப்பு
கதிரவன் கதிர்கள் சன்னலின் இடைவெளியூடே
வீட்டின் முகப்பில் மாக்கோலம் பூசணிப்பூ
கணகணவென மணியடிக்கும் பால்காரன் மிதிவண்டி
கழுத்தில் மணிஅசைவில் காளையின் ஓட்டம்
மனத்திரையில் காட்சிகளாய் கிராமத்து விடியல்
மகிழ்வாய் மற்றொரு நாளின் தொடக்கம்

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்தியன்

நாள்தோறும் மழையா சென்னையிலே
இருமுறை மேட்டூர் நிரம்பியதா
காவிரியில் கரைபுரண்டு ஓடுகிறதா
கனவில்லை தானே நண்பா
கண்களை நம்ப ‌இயலவில்லை
காலங்கள் பருவங்கள் மாறுகின்றன
சமுதாயம் மாறும் நம்பிக்கையுண்டு
சரித்திரம் புரட்டிப் போடப்படுகிறது
புதைந்தவை மேலேறி புதிராய்
புதினங்கள் பனையோலையில் இன்றும்
கடல்கடந்த சரித்திரம் கண்கூடாய்
கல்வெட்டு கடாரம் வரையில்
மொழி மட்டுமல்ல பலவும்
விண்ணில் நிலவின் இருட்டில்
பகையும் பயந்தோடி கூட்டில்
மாற்றங்கள் மகிழ்வே என்றும்
மற்றொன்று உண்டு மனதினில்
ஏழ்மை ஒழிந்து ஏற்றமும்
ஏருழும் கலைஞன் உயர்வும்
சாதிகள் சவக்குழி போதலும்
சாக்கடை அரசியல் சாகவும்
அமைந்து விட்டாலே ஓங்கிடும்
இந்தியன் வல்லவன் என்றபுகழ்

தாயே உன் நினைவில்

தாய்க்கு மகனாக மறுமுறை பிறக்க வேண்டும்
தாலாட்டி அவளெனக்கு ஆரீரோ பாடவேண்டும்
நிலாவைக் காட்டி அவள் கையால் உண்ண வேண்டும்
நிதமும் குளிப்பாட்டி. தலைவாரி உடையணிவிக்க வேண்டும்
ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவளே நீவேண்டும்
ஈரம் மறையாத கண்கள் காயுமுன்னே வேண்டும்
யாரென்ன சொன்னாலென்ன அறுபதிலும் என்னருகே வேண்டும்
ஊரென்ன சொன்னாலும் உனதுமடி நானுறங்க வேண்டும்
உன்னுயிர் மறுபிறவி எடுத்து என்னோடு வேண்டும்
உனது பாசமும் நேசமும் எனக்கு வேண்டும்
தவமிருந்தால் மீண்டு வருவாயின் இறைவனை இறைஞ்சுவேன்
தாயே உன் நினைவில் தினம்தினம் மருகி உருகி நின்றேன்
வந்திடு அன்னையே உன்பிள்ளை புவிமீது காத்திருப்பேன்
வாழ்க்கைக் கணக்கை முடித்து சேர்ந்தே பயணிப்போம்

ஏனிந்த பேதம்

பாட்டு ஒன்று பாடி வச்சான்
பாரதி என்ற புரட்சிக் கவிஞன்
பெண்ணுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று
கண்ணான பாப்பாவுக்கு நாட்டுக்கு தனியொருவனுக்கு
வளம் கொழிக்கப் பாடியவனோ வறுமையிலே
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வாழ்விக்கவில்லை
சொன்னவன் சொற்கள் வாழ பலகாலம்
சொற்ப நாட்களிலே சென்றான் பராசக்திகாண
நீர்வளம் நிலவளம் மனவளம் குணநலன்
நெருப்பாய் எரிமலையாய் நெஞ்சிலே ரௌத்திரமாய்
எத்தனை பாடல்கள் ஏட்டுச் சுரைக்காயாய்
ஏனோ மனதை வருத்தியது இந்நினைவு
நல்லவர் வாழ்வு நலிந்தே இருக்க
பொல்லாதவர் வாழ்வு உயர்ந்தே இருக்க
ஏனிந்த பேதம் என்றே மனதில்
எப்போதும் கேள்விகள் விடைதான் இல்லை

ஊர்ப்புறம்

நட்பே நலமா நாட்டினர் நலமா
நல்லோர் நலமா மும்மாரி பொழிகிறதா
ஊர்ப்புறம் நலமா ஊரணி நீருண்டா
உழவர் நலமா உழுத நிலமுண்டா
நெல்நாற்று நலமா நெடுவயல் நலமா
காடுகள் நலமா காட்டாறு நலமா
ஆடுகள் மேய்க்கும் அண்ணன் நலமா
தென்னைமரக் கீற்று பனைமர ஓலை
தெற்குக் காற்றில் அசையும் ஒலியுண்டா
குளமொன்றும் பரந்த ஏரியும் பார்த்தேனே
குறையாத நீரோடு கும்மாளமிடும் சிறார்
அப்படியே உள்ளது தானே உரைத்திடு
அடுத்த ஆண்டாவது வருவேன் உனைக்காண
அழகுக் கிராமம் அப்படியே இருக்கட்டும்
சொல்லடி தாயே சோர்வு ஏனுனக்கு
சொக்க வைக்கும் பார்வையெங்கே என்னவளே
நல்லசேதி சொல்வாயா நானிங்கே அமைதியாக
நாளைக் கடத்தி ஊர்வந்து சேர்வேன்

ஆணவக் கூத்தாடிகள்

மொழிகளும் மதங்களும் சாதிகளும் மனிதனால் தோன்றின
நாடுகள் எல்லைகள் சண்டைகள் சச்சரவுகள் இவைகளும்
வேற்றுமை பொறாமை சுயநலம் ஏய்த்தல் ஏளனம்
குணங்கள் பலவும் கூடவே வளர்நதன பெருகின
மண்ணாசை பெண்ணாசை பொருளாசை வேர்விட்டு விருட்சமாயின
தீமைகள் தீயினும் வேகமாய்ப் பரவின திசையெங்கும்
பொறுமை மறைந்து பெருங்கோபம் வளர்ந்து நின்றது
மனிதம் மெல்ல மெல்ல மறைந்து தேய்ந்தது
மீளவே முடியாத பாதைகளில் பயணம் தொடர்ந்தது
ஒன்று நிச்சயமாய்த் தெரிகிறது மனிதனை மனிதனே
அழிக்கும் காலம் புரவியிலேறி விரைந்து வருகிறது
ஆயினும் அறியாமலே ஆணவக் கூத்தாடிகள் ஒருபுறம்
ஆண்டவனே காப்பாற்று கூக்குரலிடும் மனங்கள் மறுபுறம்

நினைவலைகள்

உறக்கமற்ற இரவுகளில் உனது பாடல்கள் தாலாட்டுமா
உழைத்துக் களைத்து ஓயும்நேரம் உன்விரல்கள் வருடுமா
மாலைநேரத்து மங்கிய ஒளியில் தோள்சாயக் கிடைக்குமா
மயக்கும் இனிய ‌நிமிடங்களில் அணைப்பின் சுகம்தருமா
காலார நடந்து வர கைகோர்த்த விரல்கள் அழுத்துமா
காதோரம் பேசும் இரகசியங்கள் கற்கண்டாய் இனிக்குமா
தொலைதூரம் சென்றாலும் தொலையாத நினைவலைகள் தொடருமா
தொக்கி நிற்கும் கண்ணசைவில் கதைகள்பல தோன்றுமா
இதழோரம் சுவை சேர்க்க முத்தாரம் தருவாயா
இனியேனும் என்னோடு இணைந்தே எப்போதும் இருப்பாயா
காலமது் உருண்டோடி நரைதோன்றி முகச்சுருக்கம் வருமுன்னே
காதலியே வந்துவிடு காத்திருந்தே கண்கள் களைத்தனவே

கூப்பாடு, வரலாறு,சமுதாயம்

ஏண்டா செவலை என்ன சொன்னாலும் கேக்காதோ
மாண்ட‌‌ விசயத்த பேசிப்பேசி நேரம்தான் விரயம்
ஆண்ட ‌அவன் செத்து நூறாறு வருசமாச்சு
தோண்டிப் பாக்க இதுவென்ன கேணித் தண்ணியா
திராவிடனோ ஆரியனோ இசுலாமியனோ கிறித்தவனோ சீக்கியனோ
யாருக்கும் இந்த நிலம் சொந்தமில்வே நாடோடிகளே
ஒண்டிப் பிழைக்க காடுமேடேறி வந்தவங்க
ஒனது எனதுனு பேசுறது எதுக்கு வீணா
போனது போனது தான்மக்கா திரும்ப வாராது
மானம் மரியாத காப்பாத்த மனுசனா இருந்துக்க
கூப்பாடு போட்டு ஊரக்கூட்டி வேசம் எதுக்கு
கூட்டுலே ஆவிபிரிஞ்சா மண்ணா சாம்பலாத் தான்போவே
வரலாறு விட்டுபுட்டு வருங்காலம் பத்தி யோசி
வானத்த ஊடுருவு வாழுமிடம் தேடி வளம் சேரு
வார்த்தைலே வன்மம் வேணா உண்மை நிக்கட்டும்
கூட்டா இருக்க கத்துகிட்டா மாத்தம் வரும்
கூறுபட்ட சமுதாயம் ஒன்னுசேரும் வளம் கொழிக்கும்

நெஞ்சு பொறுக்குதிலை

பாரதி நெஞ்சு பொறுக்குதிலை என்றான்
ஓடி விளையாடு பாப்பா என்றான்
கங்கை நதிப் புரத்து கோதுமைக்கு
காவிரி வெற்றிலை பண்ட‌மாற்று என்றான்
காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
தீண்டாமை முதல் சாதிவேறுபாடு வரை
மனித மனங்கள் மாறுவதில்லை ஏனோ
புத்தன் காந்தி காமராசர் போதுமோ
இன்னும் எத்தனை காலம்தான் வேண்டுமோ
வேதனை மனதில் வேரூன்றி பலகாலம்
மறுபடி பிறந்து ரௌத்திரம் பழகி
ருத்திர தாண்டவமாடி மாய்த்திடு மிலேச்சரை
களையெடுத்தே நற்பயிரைக் காக்க இயலும்

சிந்தனை செய்திடு

முழு நிம்மதி என்பது யாது
முழு நிலவுக்கும் களங்கம் உண்டு
குறை என்பது யாது கூறுவீரோ
முறை அற்ற யாவும் குறையோ
சிறை செல்வது குற்றம் செய்தே
கறை படிந்த வாழ்வின் விளைவோ
ஏழைக்கும் செல்வந்தர்க்கும் நிம்மதி இல்லை
ஏனந்த நிலையென்று கூறுதல் இயலுமோ
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன்
ஆண்டவன் நடத்தும் நாடக
த்து விளைவோ
பாட்டுக்குப் பொருள் தேடி அலைந்தே
பதிவிட்ட போது உள்ளமே ஊற்றானது
தோண்டத் தோண்ட ஊற்றாய் சுரந்திடும்
தேங்கிக் கிடக்கும் ஆழ் மனதில்
நீயும் எழுதலாம் நிதமும் எழுதலாம்
காயங்கள் கனவுகள் கற்பனை கலந்தால்
காவியம் படைக்கலாம் கவிஞனும் ஆகலாம்
ஓவியம் தீட்டலும் ஒருசிலை வடித்தலும்
புத்தியைத் தீட்டும் கூர்மை அறிவாலே
சிந்தனை செய்திடு சிற்பியாய் மாறலாம்

வாழ்க்கை புரியவில்லை

சூலுற்ற பெண்ணுக்குச் சுமையில்லை பிள்ளை
தோளுக்கு வலியில்லை சாய்ந்திடும் தலையால்
போருக்குப் போகும் வீரர்க்குப் பயமில்லை
காதலுற்ற பெண்டிருக்கு கணமேனும் உறக்கமில்லை
நட்பென்று வந்தாலே சாதிமதம் பார்ப்பதில்லை
வாழும் நாட்களிலே வாழ்வியல் புரிவதில்லை
கல்லூரிக் காலத்தில் சூத்திரங்கள் தெரிவதில்லை
மூடநம்பிக்கை மூளைக்குள் ஆராய்ந்து பார்ப்பதில்லை
கயவர்க்கும் கொலைஞருக்கும் மனச்சாட்சி இருப்பதில்லை
அரசியல் வர்த்தகர்கள் நமக்காய் உழைப்பதில்லை
பிரித்தாளும் உள்ளங்கள் இன்றும் மாறவில்லை
இறைவன் பெயராலே ஏய்த்தலும் நிற்கவில்லை
எதுதான் வாழ்க்கையென்று எனக்கும் புரியவில்லை

நிலாப் பெண்ணே

எத்தனை ஆண்டுகளாய் உனைத் தேடி நின்றேன்
எங்கே நீயென்று அலைந்து திரிந்தேன்
இருளிலும் ஒளியிலும் இரவிலும் பகலிலும்
கடும் மழை பனிப் பொழிவு இவைகளும் கடந்தேன்
மதிமுகம் கண்டிட‌ மதிகெட்டு அலைந்தேன்
மலர்ந்த உன்சிரிப்பின் மறுபக்கம் தேடினேன்
யாரும்‌ பார்த்திராத ஒருமுகம் ஒளித்தாய்
சொல்லித்தானே வந்தேன் யாருமறியா இரவின்துணையில்
சொக்கிப் போனேன் இரண்டே மைல்கல்
சொந்தமாய் என்னை அணைத்திடு வாயென
என்னவாயிற்று மாயாவிப் பெண்ணே உன்நிலை
ஏற்றுக் கொள்ளாமல் எங்கே மறைந்தாய்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உயிரோடு உனது வாசலில் இருப்பேன்
நீயும் நானும் கலந்து பரந்தவெளியில்
நிலாவென உலகம் படைப்போம் தலைநிமிர்வோம் !

ஆசிரியப்பெருமானே

களி‌மண்ணாய் இருந்தேன் பாத்திரமாய் மாற்றினார்
கல்லாய் இருந்தேன் சிலையாய் வடிவமைத்தார்
இரும்பாய் இருந்தேன் உருக்கி வார்த்தார்
இலையாய் ஓலையாய் எழுத்தாணியால் நூல்களாக்கினார்
மணலைக்கூட சிற்பமாய் மாற்றியவர் வடிவமைத்தார்
மணல்மேடுகள் கோபுரங்களாய் உயர்ந்தன நிமிர்ந்தன
மயனோமாயனோ தொட்டவை அனைத்தும் காவியமாயின
தெய்வங்கள் சிலைகளாய் சிற்பமாய் கோவிலில்
தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றிய ஆசிரியப்பெருமானே
தொடுவதற்குப் பாதம்தந்திடு சிரம்தாழ்த்தி வணங்குவோம் !

நட்பின் ஆலமரம்

அழகான ஆலமரமொன்று செடியிலிருந்து மரமாயிற்று
அதன் கிளைகளும் விழுதுகளும் பரவிநின்றன
பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி. பசுமை
பறவைகள் ஒவ்வொன்றாய்க் கிளைகள் தோறும்
பச்சைக்கிளி மைனா புறா வல்லூறு காகம்
பருந்து கழுகு குயில் குருவி
பஞ்சவர்ணக்கிளி அன்னம் வாத்து ஆந்தை
பறந்து திரிந்து மீண்டும் கிளைகளில்
சரணலாயமாய் பலவிதக் குரல்களோடு ரம்மியமாய்
சண்டையிடும் நேரங்களில் கூக்குரலாய் சத்தங்கள்
காலமாறுதல் போலவே மகிழ்வும் பிணக்கும்
ஒரேமரத்துப் பறவைகள் ஆலமரம் அவைகளின் இல்லமாய்
ஒற்றுமை மற்றவர் கண்களுக்கு வியப்பாய்
எத்தனை அழகாய் ஆலும் பறவைகளும்
சத்தான நட்புக்கு இதுவே சாட்சி
(CEG79 நட்பின் ஆலமரம்)

கணேசா

ஆனை முகத்தோனே மூஞ்சூறு வாகனனே
ஆண்டவனே ஆதிசிவன் மகனே கணேசா
கும்பிட்ட கரங்களுக்கு குறையற்ற வாழ்வுண்டு
குலம்காக்க வந்தவனே தொப்பை கணபதியே
விநாயகனே வினை தீர்ப்பவனே வேதநாயகனே
விடியும் காலையிலே வணங்கி மகிழ்வோமே
மங்கள நாளுக்கு அதிபதியே பார்வதிமைந்தா
மயிலேறு முருகனின் தமையனே சிவனின்மகனே
நல்லவை யாவும் நின்பெயர் கூறியே
நாளும் செய்திடுவோம் யாமே பிள்ளையாரே
நல்வாழ்வு என்றும் தந்து காத்திடுவாயே