வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஊர்ப்புறம்

நட்பே நலமா நாட்டினர் நலமா
நல்லோர் நலமா மும்மாரி பொழிகிறதா
ஊர்ப்புறம் நலமா ஊரணி நீருண்டா
உழவர் நலமா உழுத நிலமுண்டா
நெல்நாற்று நலமா நெடுவயல் நலமா
காடுகள் நலமா காட்டாறு நலமா
ஆடுகள் மேய்க்கும் அண்ணன் நலமா
தென்னைமரக் கீற்று பனைமர ஓலை
தெற்குக் காற்றில் அசையும் ஒலியுண்டா
குளமொன்றும் பரந்த ஏரியும் பார்த்தேனே
குறையாத நீரோடு கும்மாளமிடும் சிறார்
அப்படியே உள்ளது தானே உரைத்திடு
அடுத்த ஆண்டாவது வருவேன் உனைக்காண
அழகுக் கிராமம் அப்படியே இருக்கட்டும்
சொல்லடி தாயே சோர்வு ஏனுனக்கு
சொக்க வைக்கும் பார்வையெங்கே என்னவளே
நல்லசேதி சொல்வாயா நானிங்கே அமைதியாக
நாளைக் கடத்தி ஊர்வந்து சேர்வேன்

கருத்துகள் இல்லை: