வியாழன், 12 ஜூன், 2025

அயலகப் பயணம், சிங்கப்பூர் & தாய்லாந்து Day 1 & Day 2 ( 06/11/24 & 07/11/24)

 அயலகப் பயணம், சிங்கப்பூர் & தாய்லாந்து

Day 1 & Day 2 ( 06/11/24 & 07/11/24)
மற்றொரு பயணம், திட்டமிட்டபடி பலநாட்களுக்கு முன்பே, விமான டிக்கெட், ஓட்டல் புக்கிங் எல்லாம் முடித்து, புதனன்று கிளம்பி வியாழன் காலை சிங்கப்பூர் அடைவதாக. அனைத்து பேக்கிங் முடித்து வைத்து,, ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து, நண்பர் சம்பந்தத்திற்கு பயண டிக்கெட்டை அனுப்பிய போது கூட எந்தவித ஐயமும் எழவில்லை. ஆன்லைனில் கேம் விளையாடியபடி, பயணச்சீட்டை தற்செயலாகப் பார்த்தபோது ,6/11/24, புதன் காலை 2 15 என்றிருந்தது, தூக்கிவாரிப் போட்டது, பார்த்தபோது செவ்வாய் இரவு 9 37.பயணம் செய்ய வேண்டியது புதன் விடியற்காலை. உடனடியாக முடிவடுத்து, தயாராகி, ஷேவ் செய்யப்படாத முகத்துடன், டாக்ஸி புக் செய்து, தயாராக இருந்த லக்கேஜ்களோடு பத்து மணிக்குப் புறப்பட்டு , ஏர்போர்ட் நோக்கிப் பயணித்தபோது, நண்பர் சம்பந்தம் போன் செய்து Singapore Arrival certificatelum தேதி மாற்றம் செய்ய வேண்டுமென நினைவுறுத்தினார்.
மனப் பட படப்பு மெதுவாகக் குறைந்து, டாக்ஸி மிதமான வேகத்தில் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் ஏர்போர்ட் அடைந்த போது, சம நிலைக்கு வந்து, செக் இன் செய்து இமிக்ரேஷன் முடித்து, பாதுகாப்புச் சோதனை கடந்து , கேட் D6 அடைந்து விமானத்திற்குக் காத்திருந்த போது தோன்றியது, சரியான சமயத்தில் பயணச்சீட்டை பார்க்காமலிருந்திருந்தால் , எத்தனை சிரமங்கள் கடந்திருக்க வேண்டுமென எண்ணங்கள் வட்டமிட்டன.
காலை இரண்டு மணிக்குப் புறப்பட்ட ஏர.இந்தியா விமானம், நான்கரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் விமான நிலையத்தை சில நிமிடங்களுக்கு முன்பாகவே அடைந்தது. பேகேஜை கலெக்ட் செய்து , வியக்கத்தக்க வேகத்தில் இமிக்ரேஷன் கடந்து, வெளியே வந்தபோது நண்பர் சம்பந்தம் காத்திருந்தார். அவரது இல்லத்தை அடைந்து, குளித்து, காலையுணவை முடித்தபோது, புதனன்று முழுவதும் எங்கும் செல்வதில்லை என முடிவெடுத்து, உறக்கமும் ஓய்வும் நடுவே மத்திய உணவாகச் சப்பாத்தி குருமா சாப்பி்ட்டு, மறுபடி ஓய்வெடுத்து, மாலை ஐந்து மணிக்கு மேல், செண்பக வினாயகர் கோயிலுக்குச் சென்று, நண்பரோடு உழவாரப் பணியில் ஈடுபட்டு, சாமி் தரிசனமும் முடித்து, அன்னதான உணவைச் சாப்பிட்டு, இரவு உறங்கத் தொடங்கியானது.
விடியாத இரவொன்றில் நண்பர் உறக்கம் வராமல் தவிக்க அவரோடு பேசிய படி இருந்து, ஐந்து மணிக்கு முன்பாகவே எழுந்து தயாராகி, நடைப்பயிற்சிக்குக் கிளம்பினோம். வீட்டுக்குப் பின் புறத்தில் மழைநீர் வடிகால் ஆறொன்றும், அதைச் சுற்றி, நடைபாதையும் அழகாய் அமைந்திருந்தது. ஒருமுறை சுற்ற 30 நிமிடங்கள், இரண்டு கிமீக்கு சற்று அதிகமாக. ஒரு முறை சுற்றி வந்து, சைக்கிள் ஓட்டுவது போன்ற இயந்திரப் பயிற்சி முடித்து வீடு திரும்பி மீண்டும் ஓய்வு.

கருத்துகள் இல்லை: