Bali, Indonesia
08/07/2024 & 09/07/2024
இன்றும் முன்னரே தீர்மானித்த படி காலை எட்டு மணியளவில் புறப்பட்டு, குழுவினர் அனைவரும், படகுத் துறையை அடைந்து,ஜூலியன் பயணச் சீட்டைப் பெற்று எட்டரைக்கு, நமது படகு செல்லும் என்பதால் போட்டோக்கள் எடுத்த பிறகு, பெண்கள் மற்றும் ஆண்களின் வட்ட வடிவ குழந்தைகள் ஆட்டம் நடந்தது.
ஐவர் ஐவராகப் பிரிக்கப் பட்டு பன்னிரண்டு, கார்களில் குழுவினர், பயணித்து, கரடு முரடான சாலையில், முதல் Cliff அடைந்த போது வாவ் என மிக அழகான கடல் கண் முன்னே விரிந்தது. மலை பிளந்த பள்ளத்தாக்கும், மலை முகடுகளும் இயற்கையின் அழகுக்கு இணையில்லை. பலரும் படிகளில் கீழே இறங்கிய போது, பாதி வழியில் நான் உட்கார்ந்து கொண்டேன், கால் பிடிப்பு வந்து விடக் கூடாது என்பதால். கடல் அழகியை இரசி்த்தபடி மிதமான வெயில் சூட்டில்.
இரண்டாம் நிறுத்தம் முதல் நிறுத்தம் போல பிரமாண்டமாய் இல்லாமல் போனாலும் கண்ணுக்கு அழகானதாகவே நீலக் கடல் தோற்றம். மூன்றாவது கிரிஸ்டல் பே , அதனிடையே மதிய உணவு, இந்தியன் உணவு விடுதியில். நன்றாகவே இருந்தது. கிரிஸ்டல் பே நீர் மிகத் தெளிவான நீர், சிறிது நேரம் கடல் நீரில் காலை நனைத்து, போட்டோக்கள் எடுத்து, ஒருவர் மட்டும் நீரில் இறங்கி தலை நனையாமல் குளித்து முடித்து, மீண்டும் சிறிய அந்தச் சாலையில் இரண்டு கார்கள் போவது சிரமமே.
படகுத் துறையை மீண்டும் அடைந்த போது, மக்கள் கூட்டம் பெருந்திரளாய். மஞ்சள் Tag எங்களுக்கு கொடுக்கப் பட்டது. நாலரை மணிக்கு மேல், வெயிலின் தாக்குதல் முடித்து, படகு எண் மூன்றை அடைந்து முதல் இருக்கையில் அமர்ந்து பயணம் தொடர்ந்தபோது, கடற்காற்று முகத்தில் அறைந்தது.
கரையை அடைந்து, பஸ்களில் ஓட்டலை அடைந்து, குளித்த போது, முந்தைய நாள் நீச்சல் குளத்துக் குளியல் நினைவுக்கு வந்தது. அறைத் தோழர் மசாஜ் சென்று வந்தார். இரவு உணவுக்கு Queens Indian உணவகம் சென்று வந்த பிறகு, மறுநாள் குழுவினர் இரு பிரிவாகப் போவதற்கான அறிவிப்பு கமீலாவால் தெரிவிக்கப் பட்டது. ஏழரை மணிக்கு ஒன்றும் பதினொன்றரைக்கு ஒன்றும் என.
முதல் குழு இண்டிகோ நேராக பெங்களூரும் இரண்டாம் குழு கோலாலம்பூர் வழியாகவும் புறப்பட்டனர். நான் முன்னதாக Juna Wijaya ( பவ்யா கணவருடன் வந்த போது, பரிச்சயமானவர்) என்ற பாலி நண்பருடன் பேசிய படி தேஜா என்பவர் சரியாக ஒன்பதரைக்கு வந்தார். சிரித்த படியே நட்பாகப் பேசிய படி அவரது காரில், முதல் இடமாக Garuda Wisnu Kencanaவுக்குப் பயணம். மிகப் பிரமாண்டமாய் இருந்தது. 125000 இந்தோனேசிய ரூபா ( இந்திய மதிப்பு 640 ₹) பயணச்சீட்டு ஷட்டில் பஸ்ஸில் சென்று பெற்றுக் கொண்டு , மெதுவாக நடந்து, போட்டோக்கள் எடுத்தபடி ஆம்பி ( ஒலியுடன் நடனம்) தியேட்டருக்குள் நுழைந்து, நடனத்தைக் கண்டு களித்த பிறகு, விஷ்ணு, கருடன், மகேஷ்வர் என மிகப் பெரிய சிலைகளைப் படமெடுத்து, கால்கள் கெஞ்ச நடந்து, இலவச குளிர் தேநீர் அருந்தி, ஷட்டில் பஸ்ஸில் பயணித்து கார் பார்க்கிங் அடைந்து அடுத்த இடமான உலுவாட்டுக்குப் பயணம். வழியில் காப்பித் தோட்டமொன்றில் நுழைந்து, பூனை உண்ட காப்பிக் கொட்டைகளைக் கழுவி,வறுத்து பொடியாக்கி காப்பித்தூள் தயாரிப்பை ஒருவர் விவரித்தார். சேம்பிள் டீ மற்றும் காப்பி சுவை பார்த்த பிறகு Red Ginger tea நூறு கிராம் பாக்கெட்ஒன்றை ( 560₹) வாங்கிய பிறகு, உலுவாட்டு கோயிலை அடைந்து 50000₹ நுழைவுச் சீட்டு பெற்று, பாண்டே மலை் என்றழைக்கப்படும் உயரமான சிகரத்தில் படிகளைக் கடந்து, உச்சியை சென்றடைந்த போது கீழே மிக அழகான நீலக் கடல் மீண்டும். ஆமைகள் நீந்துவது தெளிவான கடல் நீரில் தெரிந்தது. பலவிதக் கோணங்களில் படமெடுத்த பிறகு காருக்குத் திரும்பிய போது, குரங்குகள் ஒன்றிரண்டே இருந்தன, அவைகளும் ஆனந்த் சொன்னபடி எதையும் பிடுங்கிச் செல்ல முயலவில்லை.
அருகிலிருந்த அன்னபூர்ணா உணவு விடுதியில் சவுத் இண்டியன் தாளி மற்றும் நீருக்கு 175000 ருப்பையா, கொடுத்து சாப்பிட்டு, மீண்டும் பயணித்து, பாண்டவா பீச் சென்றபோது பலரும் கயாக்கிங் என்ற படகுச் சவாரி செய்து கொண்டிருந்தனர். சிறிது தூரம் நடந்து திரும்பி, முதியோர் ஒருவரின் கைவண்ணத்தில் பென்சில் ஓவியம் ஒன்றை கிட்டத்தட்ட என்னைப் போல் வரைந்து பெற்றுக் கொண்டு, ஓட்டலை அடைந்து தேஜாவுக்கு விடை கொடுத்து அறைக்கு வந்து ஓய்வெடுத்த பிறகு, கால் மற்றும் முதுகு, தோள்பட்டை மசாஜ் செய்து,பூரி கிழங்கு இரவு உணவாகச் சாப்பிட்டு, அறைக்குத் திரும்பிய போது இன்னும் இரண்டு நாட்களில் இப்பயணம் முடிவுறப் போகிறது என்ற நினைவுடன் உறக்கம் அணைத்தது.
( தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக