Bali, Indonesia
05/07/2024
காலை சிற்றுண்டிக்குப் பின் பஸ் புறப்பட்டு தகநுங்கண் அருவியை சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் அடைந்த போது மிகப் பெரியதாக இல்லாமல் சுமாரான நீர் வீழ்ச்சியாக இருந்தது. அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் என்பதால், மிக தூரம் டிரெக்கிங் இல்லாத இவ்வருவி தேர்ந்தெடுக்கப் பட்டது. இருநூறு படிகளுக்கும் குறைவானதாகவே இறங்க வேண்டியிருந்தாலும், இறங்கி நீர்வீழ்ச்சி அருகில் போவதற்குள் டிரெட் மில்லில் அரைமணி நேரம் ஓடியது போல வியர்த்தது. பல வேறு கோணங்களில் போட்டோக்கள் கிளிக்கிய பிறகு, மேலேறுவது இன்னமும் கடினமாய் மூச்சு வாங்கியது. கைட் கமீலா கடைசிப் படிகளில் நான் மூச்சு விடுவதைப் பார்த்து, நான் மூச்சு விட சிரமப் படுகிறேன் என நினைத்து உதவியாளரை அழைத்தார்.நான் ஐ அம் ஓகே என்ற பிறகு அமைதியானார்.
மீண்டும் புறப்பட்டு அடுத்த இடமான தீர்த்த கங்காவுக்குப் பயணம் மலைப் பாதைகளில். எங்கும் பசுமை, கண்ணுக்குக் குளிர்ச்சியாய். இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அங்கு சேர்ந்தபோது, பெரிய நீர்தேக்கம், பவுண்டன், அழகிய வண்ண மீன்கள் என ரம்மியமான காட்சிகள். மீன்களுக்கு உணவளித்தே மிகப் பெரியதாய் ஆகியிருக்க வேண்டும். மதிய உணவு அதே இடத்தில் என்பதால், சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின், ரெஸ்டாரெண்டில் மிக நெருக்கமான இருக்கைகள் மட்டுமல்ல, பாலி உணவு வகைகள் யாருக்கும் பிடிக்கவில்லை, நான் இருப்பதை அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்ட பிறகு, அடுத்த இடமான பைசாகி என்ற மும்மூர்த்திகளின் பாலியின் மிகப் பெரிய கோயில் படிகளில் ஏறுவது மிகக் கடினமாக இருந்தது. பின்னால். உள்ள அகுங் எரிமலை மேக மூட்டத்தில் மறைந்து போயிருந்தது.
அவ்வளவு உயரம் போனபோது பெருங்கூட்டமொன்று, பூஜையில் இருந்தது. அதற்கென பிரத்யேக வெள்ளைச் சட்டை, வேட்டி இல்லாததால் அனுமதிக்கவில்லை. போட்டோ மட்டும் எடுத்து, மீண்டும் கீழே இறங்கி நடந்த போது கால்கள் கெஞ்சின. அங்குள்ள கடை வீதியில் நல்ல bargain செய்து, உடைகள் சிலவற்றை வாங்கிக் கொண்டு , அனைவரும் திரும்பிய பின் பஸ் இப்போது, உபுட் இரவு உணவிற்கு உணவு விடுதியை அடைந்து இந்திய உணவை அருந்தி, ரிசார்ட்டுக்குத் திரும்பிய போது, நாளைக் காலை காலி செய்யும் அறிவிப்பும், போக வேண்டிய இடங்கள் பற்றியும் அறிவிப்பும் கைடால் சொல்லப் பட்டது.
பயண நேரங்களில் இந்தியாவிலிருந்து வந்த மார்க்கண்டேயா என்ற துறவி எப்படி இந்து மதம் பரவ பாடுபட்டார் எட்டாம் நூற்றாண்டில், அவரால் கட்டப் பட்டதே பைசாகி கோயில் என்றும் கமீலா அறிவித்தார். டச் காலனியாக 350 வருடமும், இரண்டரை வருடம் ஜப்பானிய ஆட்சியிலிருந்தும் விடுபட்டு, 1945, ஆகஸ்டு பதினேழில் சுதந்திர நாடானதாம் இந்தோனேசியா என்ற 17500 சிறிய தீவுகளால் ஆன இந்நாடு. முதல் குடியரசுத் தலைவராக சுகர்ணோ பதவியேற்றார். கனிம வளஙகளும், தேக்கு, சந்தனம், ஸ்பைசஸ் இவைகளைக் கொள்ளையடித்துச் செல்லவே, டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர் போன்றோர் ஆட்சி முடிவுற்று, இந்தியா போன்று அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட நாடுகளில் ஒன்றாக இப்போது.
( தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக