கூடு விட்டு இரை தேடி சென்றன பறவைகள்
நாடு விட்டு நாடு கடந்து உணவைத் தேடி
தாய் ஒரு பக்கம் தானொரு பக்கம் பலநேரம்
ஓடாய் உழைத்து மாலையில் களைத்து கூடு சேரும்
பாடாய் படுத்தும் நினைவுகள் வந்து வந்து போகும்
உறவு துறந்து உயிரான மனையாள் பிரிந்து வாடும்
துறவு வாழ்வே தியாக வாழ்வு எனலாம் அந்நாட்கள்
பொருள் ஈட்ட நலம் வாழ நாளும் உழைப்பு
அருள் உண்டு ஆண்டவன் அவனது கருணை உண்டு
காலம் பலவும் கடந்தே போகும் கனவுகள் வளரும்
ஞாலம் முழுதும் வலம் வரும் எண்ணப் படகு
வந்திடும் நாள் ஒன்று ஆண்டில் ஒரு முறை
தந்திடும் மகிழ்வு மனதில் நிறையும் குதூகலம் பிறக்கும்
கூட்டிற்குத் திரும்பும் கூடிக் களிக்கும் கொண்டாடி மகிழும்
வீட்டில் விளையாடி மகிழும் விருந்து படைத்து களிக்கும்
நாளது இன்றே நலமுடன் பெற்றவர் தாள் பணியும்
கேள்விகள் பலவும் வினவும் நலம் விசாரி்த்து நகும்
வளமுடன் வாழும் குடும்ப நபரை அணைக்கும் அன்புடன்
இன்றும் என்றும் இன்பம் பொங்க மனம் விழையும்
சென்ற பறவைகள் சேரந்து அமர்ந்து சொந்தம் கொண்டாடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக