திங்கள், 31 அக்டோபர், 2022

நான் மனிதன்

குரங்கிலிருந்து உருமாறியவன். இருந்தும் அவ்வப்போது தாவுவது எனக்குத் தெரியும். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு, மனம் போன போக்கில். இரத்தம் சிவப்பாய் இருக்கலாம் ஆனாலும் என்னுள் பல வேற்றுமை, நிறம் முதல் நிலம் வரை.


அன்று முதல் இன்று வரை குறை சொல்லியே வாழ்பவன். திருடனாய் குருடனாய் கொலையாளியாய் பொய்யனாய் வாழ்வது எனக்குப் பிடிக்கும். எது தப்பு என்று சொல்லி வாழ்கிறேனோ அதுவே நானும் செய்வேன்.
நான் வேடதாரி அரிதாரம் பூசாமலே, கடவுள் நடுவரானால் நானே சிறந்த நடிகன். பச்சோந்தியாய் மாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். அளவுக்கதிகமாய் பணமும் பொருளும் இருந்தாலும் மேலும் வேண்டுமெனக்கு.
உழைக்காமல் வரும் பணமென்றால் கொள்ளை ஆசை. காசுக்காகவும், பதவிக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வேன். ஈவிரக்கமற்றவன்.
படித்தவன் ஆனால் பண்பில்லாதவன். மூளை சலவை செய்து சுத்தமாய் வைத்துக் கொள்வேன், பகுத்தறியும் மனது எனக்கில்லை. கடந்து வந்த பாதை மனதில் மறைந்து புதுச்சாயம் பூசிக் கொள்வேன்.
திருந்த மனதில்லை, இப்படி வாழ்ந்தே சாவேன். அடுத்த தலைமுறை பற்றிய கவலை எனக்கில்லை.்நிரந்தமாய் உலகில் வாழ்வதாய் நினைத்து அனைத்தும் என் வசப்படுத்துவேன். எனக்கில்லை மரணம், நேற்றில்லை, இன்றில்லை, நாளையும் இல்லை.

கருத்துகள் இல்லை: