திங்கள், 31 அக்டோபர், 2022

வால்பாறை மூன்று - 4

காலையில் என்றும் போல் நான்கு மணிக்கு எழுந்து இராஜேந்திரன் குளித்து, கோயிலுக்குச் சென்று வந்தான். ஒவ்வொருவராக எழுந்து ஆறு மணிக்கே புறப்படத் தயாராகி, அறையைக் காலி செய்து, சதீஷ் காரில் ஏறி உட்கார்ந்தோம்.

அறை நன்றாக இருந்தும் சர்வீஸ் மோசம், சொல்லி விட்டுச் சென்றும், அறையைச் சுத்தம் செய்யாதது, நால்வருக்கும் டவல் தராதது என பீட் பேக் சதீஷிடம் சொன்னோம்.
புறப்பட்டு வளைவுகளில் இறங்கிய போது ஓரிடத்தில் காட்டெருமைகள் கூட்டம் தேயிலைத்தோட்டத்தின் ஊடே மேய்ந்து கொண்டிருந்தது. இறங்கி நின்று போட்டோ எடுத்துக் கிளம்பி , சிறிது தூரத்தில் அருவியொன்று கொட்டிக் கொண்டிருந்தது. அங்கே நிறுத்தி போட்டோ ஷூட் நடந்தது.
கீழே கொண்டை ஊசி வளைவுகளில் இறங்க ஆரம்பித்த போது, ஒரு வளைவில் அழகாய் ஆழியாறு அணையும் சுற்றி மலைத்தொடரும் அழகாய். மீண்டும் நிறுத்தி போட்டோக்கள் எடுத்தபோது, காவலர் மூவர் ஒரு பைக்கில் வந்து நிற்கக் கூடாதெனக் கூறி அங்கே இருந்த தடுப்புச் சுவர் மீதேறி போட்டோ எடுத்துக் கொண்டார். காவலர் உடையணிந்தால் சட்டம் எமக்கில்லையென ஏனோ ஒரு நினைப்பு. இரண்டு நாட்கள் பயணத்தில் இராஜி, அசோக் இருவருக்கும் வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது.
மலையடிவாரம் நெருங்கிய போது, ஆழியார் வாழ்க வளமுடன் ஆசிரமத்துக்கு அருகில் சிற்றுண்டிக்கு நிறுத்துனோம். நன்றாக இருந்தது. மீண்டும் பயணம் தொடங்கி, கரும்புச் சாறு கடையில் அசோக் சாறு அருந்தி, புறப்பட்டு கோயம்பத்தூர் அடைந்த போது மணி பதினொன்றே. பெங்களூர் இரயில் 12.50க்கும் சென்னை இரயில் 3 15க்கும் என்பதால் உக்கடம் ஏரிக்கரையில் அரை மணி நேரம் செலவிட முடிவானது.
அழகான பூங்கா உருவாகி முடிவுறும் நிலையில் இருந்தது. ஓய்வெடுத்து, கிளம்பி இரயில் நிலையம் அடைந்து, மூன்று நாள் எங்களுடன் காரோட்டிய சதீஷுக்கு விடை கொடுத்தோம். மதிய உணவு இரயிலில் சாப்பிட நான் மட்டும் சாம்பார் சாதம் பார்சல் வாங்கிக் கொண்டு நண்பர்களிடம் விடை பெற்று, மூன்றாம் நடை மேடை அடைந்தேன். சிறிது நேரத்தில் இராஜி வந்தான். இரயில் வரவும், அவனிடம் விடை பெற்று, டேபிளுடன் கூடிய இருக்கையில் அமர்ந்தபோது, இரயில் புறப்பட்டது.
முன்னதாக அடுத்து பயணம் எங்கே என்று பேசியபோது, பிப்ரவரியில் கோவா பயணம் போகலாம், நண்பர்கள் பெங்களூருக்கு இரயிலில் வந்தால், அங்கிருந்து காரில் பயணிக்கலாம் என முடிவானது. ஏப்ரல் / மே மாதத்தில் அந்தோணி மீண்டும் அமெரிக்கப் பயணம் போகவிருப்பதாகச் சொன்னான். பயணங்கள் தொடரும், நட்பும் தொடரும்.
(முற்றும்)

கருத்துகள் இல்லை: