வெள்ளி, 8 மே, 2026
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 12/10 & 13/10/25)
நணபர்கள் மூவர் மட்டும், சூரிய உதயம் பார்க்கச் சென்று திரும்பி வந்தனர். நான் பல முறை பார்த்து விட்டதால் செல்லவில்லை. காலை சிற்றுண்டிக்குப் பிறகு, புக் செய்த 8 - 8 30 slotல் வரிசையில் நின்று, விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகை நோக்கி நகர்ந்த போது, மிகப் பெரிய கூட்டம் புனேவிலிருந்து வந்திருந்தது, முட்டி மோதி ஏறிக் கொண்டிருந்தனர். பத்தே நிமிடப் பயணம் , படகு அக்கரையில். வெயில் காலையிலேயே சுட்டெரிக்கவும், வியர்க்கவும் செய்தது. முதலில் திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடிப் பாலத்தில் சென்று, போட்டோக்கள் எடுத்து, உயரே மாடத்திற்குப் படியேறிச் சென்ற நண்பர்கள் திரும்பும் வரை கடலை இரசித்தபடி அமர்ந்து, அவ்வப்போது தண்ணீரும் அருந்தி, நண்பர்கள் திரும்பியதும், விவேகானந்தர் மண்டபத்தில் நுழைந்து, தியான மண்டபத்தில், சில நிமிடங்கள் தியானம் செய்து முடித்து, கரைக்குத் திரும்ப நீண்ட வரிசையில் நகர்ந்து மீண்டும் படகில் பயணம். கரை சேர்ந்த பிறகு, இரு நண்பர்கள் மட்டும் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்ல, நாங்கள் அறைக்குத் திரும்பி, அடுத்த பயணத்திற்குத் தயாரானோம்.
இராமேஷ்வரம் நோக்கிப் பயணம். கார் வேகமெடுத்து, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்க, முதலில் இராமேஷ்வரத்தில் தங்க வினாயகா ரெசிடன்சி, அடுத்தது, தஞ்சாவூர் NN Palace, கொல்லி மலை BNS Village resort என வரிசையாக தங்குமிடங்களை புக் செய்து, மதிய உணவு நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் முடித்துப் பயணம் தொடர்ந்தது. இராமேஷ்வரம் அடைந்த போது, மாலை ஆறைக் கடந்திருந்தது. இரவே கோயிலுக்குச் சென்று வருவதென்றும், விடியற்காலையில் கோபால் மற்றும் பிரபாகர் இருவரும் மறுமுறை தீர்த்த நீராடச் செல்வதென்றும் முடிவெடுத்து, மொபைல், காலணிகளை காரிலே விட்டு விட்டு , தரிசனம் முடித்து , வெளியே வந்து, இரவு உணவை முடித்து, தங்கும் விடுதிக்குத் திரும்ப, ஆட்டோவைத் தேடி, வெகு தூரம் நடக்க வேண்டியதாயிற்று.
சிற்றுண்டி அருகிலிருந்த ரெஸ்டாரெண்டில் முடித்து, முதலில் அப்துல் கலாம் அவர்களின் வீடு, அடுத்தது தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை இவைகளைப் பார்வையிட்ட பிறகு, காரைக்குடி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். பயணம் நெடுஞ்சாலைகளைக் கடந்து, காணாடு காத்தானை அடைந்தபோது, மதிய வேளை ஆயிற்று. செட்டிநாடு அரண்மனை போட்டோக்கள் எடுத்து முடித்து, அருகிலிருந்த ஓட்டலில், மதிய உணவை முடித்து, தஞ்சையை நோக்கிப் பயணம். மாலை ஐந்து மணி போல் NN palace ஓட்டலை அடைந்து, என்னைத் தவிர மற்ற அனைவரும் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். அவர்கள் திரும்பிய பிறகு, இரவு உணவை அருகிலுள்ள விடுதியில் முடித்து, மறுநாள் இப்பயணத்தின் கடைசி நிறுத்தமான கொல்லிமலை போக எட்டு மணிக்குத் தயாராக முடிவு செய்து உறங்கப் போனோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக