வெள்ளி, 8 மே, 2026
காரைக்குடி பயணம்
(2/9/25 to 6/9/25)
காலை உணவு இரவைப் போலவே பலவித வகைகள். முடித்து பங்களாவைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். நீச்சல் குளம், பாத்திரங்கள் போன தலைமுறையில் பயன்படுத்தப் பட்டவை, பெரிய தோட்டம், வேலையாட்கள் தங்குமிடம் என பெரிதாய் விரிந்தது.
ஒன்பதே காலுக்குக் கிளம்பி முதலில் சென்றது திருமயம் கோட்டை. பாறைகள், படிகள் கடந்து உயரே பீரங்கி ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கைப்பிடி இல்லாத படிகளில் ஏறி இறங்குவது கடினமே. மிக உயரம் இல்லை எனினும் அழகாய்க் காட்சியளித்தது. இளஞ்சோடிகள் வந்த வண்ணம் இருந்தனர், தனிமை விரும்பி, கூட்டமில்லாத இடமாதலால். சிவன் மலைக் குகையில் லிங்க வடிவி்ல்.
அடுத்து திருமயம் விஷ்ணு கோயில் விஜயம். தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் இரசித்து, கைட் சொன்ன விவரங்களைக் கேட்டபடி, சயன நிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களோடு இருந்த விஷ்ணுவைத் தரிசித்து முடித்து அடுத்ததாக, அய்யனார் கோயில் கானாடுகாத்தானில், ஊருக்கு வெளியே காவல் தெய்வமாய், டெர்ரகோட்டா என்ற களிமண் குதிரை சிலைகள் பல நூறு, கஜா புயலில் மரமொன்று விழுந்து, சிலைகளைக் காப்பாற்றிய கதையைக் கேட்டு, போகும் வழியில் முந்திரி பாக்கெட்கள் வாங்கிக் கொண்டு , விசாலம் என்ற செட்டி நாடு அரண்மனை வீட்டில் மதிய உணவுக்கு அமர்ந்த போது, வகை வகையாய் சைவ அசைவ பதார்த்தங்கள். இப்படி சாப்பிட்டால் உடல் இன்னும் பெருத்துப் போகும் நிச்சயமாய். மிகவும் ருசியாக செட்டிநாட்டு சமையல் முறையில்.
கைட் அன்னபூரணி, செட்டி நாடு தோன்றிய கதையை விவரிக்க ஆரம்பித்தார். கடல் கடந்த வாணிகம், பூம்புகாரின் அழிவு, பாண்டிய மன்னரின் நெருக்கம், தென்கிழக்கு நாடுகளின் அரண்மனை போன்ற வீடுகளின் உருவாக்கம், கூட்டுக் குடும்பங்களின் இடப் பெயர்ச்சி, பராமரிக்க இயலாமல் சிதிலம் அடைந்த சில வீடுகள், ஓட்டல்களாக மாறிய அரண்மனை வீடுகள் என பலவற்றை தெரிவித்தார். ஆண் பெண் திருமணத்தின் போது வரதட்சிணையாக கொடுக்கப் பட்ட வீடுகள் இப்போது கேர் டேக்கர்களின் கவனிப்பில் இருக்க செட்டி நாட்டுக் குடும்பங்கள் வெவ்வேறு நகரங்களில், நாடுகளில் தஞ்சமடைந்த விவரங்கள் என தகவல்கள் அறிந்த பின், மீனாட்சி மெய்யப்பன் அரண்மனைக்குள் நுழைந்து, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கதவு, மூன்று கட்ட உள்ளமைப்பு, இரண்டு தெருக்களை இணைக்கும் அளவுக்கு பிரமாண்டம் எனினும், மெல்ல மெல்ல சிதிலமடைந்து கொண்டிருந்தது.
செட்டி நாடு அரண்மனை உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் ( சினிமா படப்பிடிப்புக்கு உண்டு) வெளியே இருந்தே போட்டோக்கள் எடுத்து, முன்னதாக கைத்தறி நெய்யும் வீடொன்றில் எங்கள் குழுவினர் சேலை, லுங்கி, துண்டு, போர்வை என வாங்கினர். இதற்குள் மாலை இரவுக்குள் நுழைய பறவகைள் கூடு திரும்புதல் போல் நாங்களும் ஓட்டல் பங்களாவுக்குத் திரும்பினோம். குளியல், ஓய்வுக்குப் பிறகு, இரவு உணவு நேற்றைப் போலவே மிக நீண்ட உணவுப் பட்டியல். பகலின் வெயில் தாக்கம், மலைப் படியேறல், நடந்த களைப்பு ஒன்று சேர சீக்கிரமே உறக்கம் ஆட்கொண்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக