வெள்ளி, 8 மே, 2026
கோப்பை முழுவதும் கண்ணீர்
புரியாமலே எனக்குள் தேடினேன் எதனால்
புரிந்ததும் புரியாமலே விடையும் கிடைத்தது
அழாமலே கண்ணீர் உண்டா ஆராய்ந்தேன்
அதற்கும் ஒருவிடை ஆனந்த மிகுதியால்
சரிசரி கோப்பை நிறையுமா இயலாதே
சரிவர யோசித்தே நாளும் கடந்தது
இன்றாவது விடையுண்டா தெரியாது குழப்பமே
நன்றாக தலைப்பு வேண்டாமா சோகமேன்
ஒன்றாக பலவாக பெருகினால் நிறையும்
ஒன்றும் ஒன்றும் இரண்டு விடையிங்கே
யுத்தம் என்று வந்தாலே கண்ணீர்
புத்தன் சொன்னதை எவன் கேட்டான்
அழிவின் காரணம் அளவில்லா ஆசையே
அடுத்தவன் நாட்டை அடையப் பார்க்கும்
மலிந்தவன் தலையை நசுக்கி நகைக்குது
எலியைப் பூனைகள் வேட்டை ஆடுது
பொய்களின் போர்வையில் குளிரும் காயுது
பொல்லாத புத்தி எத்தனை நாட்களோ
மனிதனை மனிதனே மாய்க்கும் பாதகம்
புனிதம் எங்கோ தொலைந்து போனது
கண்ணீரின் கடலில் மூழ்கிடும் மனிதர்
கண்ணியம் அற்ற தலைவர் மற்றவர்
இருவேறு துருவங்கள் இங்கும் அங்கும்
கோப்பை மட்டுமா குளங்களாய் உதிரம்
கோரிக்கை யாரிடம் வைப்பது நிறுத்திட
இயற்கை கொடுப்பது அனைவர்க்கும் சமமாய்
இரக்கம் அற்றவர் அனைத்தும் கேட்பர்
இறைவன் உண்டெனில் இவரை அழிக்கட்டும்
ஆனந்தக் கண்ணீரில் கோப்பை நிறைந்தால்
ஆள்பவர் என்ன அண்டமே மகிழும்
அனைத்தும் அனைவர்க்கும் என்பதே சமத்துவம்
அதிலென்ன குறையோ ஆள்பவர் கண்டார்
தனக்கென வாழாத் தலைவர் மறைந்தனர்
தன்னலம் மிக்க மாக்களின் ஆட்சி
தறிகெட்ட பாதையில் தரணியே ஓடுது
வெறிகொண்ட மிருகமாய் வேட்டை ஆடினர்
முடிவே இல்லாத கதையாய் சரித்திரம்
முதலில் இருந்து மீண்டும் ஆரம்பம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக