வெள்ளி, 8 மே, 2026
54 ஆண்டுகள் நட்பு
காலம் வேகமாக ஓடிக் கொண்டே தான் இருக்கும். நிகழ்வுகள் தினமும் நடந்தேறிய படியே இருக்கும். தொடங்கும் அனைத்தும் முடிவதும் இயற்கை. நண்பர்கள் பயணத்தில் இன்று இறுதி நாள். காலை உணவுக்குப் பிறகு, விடுதிக் காப்பாளரிடம், உணவுக்கான தொகையைச் செலுத்தி விட்டு, பயணம் மதுரையை நோக்கி ஆரம்பித்தது.
முதல் நிறுத்தம், Sacred Heart பள்ளியின் வளாகத்தில் அமைந்த மியூசியம். நுழைவுக் கட்.டணம் செலுத்தி உள்ளே நுழைந்த போது ஆர்வம் அதிகமில்லை. ஆனால் அங்குள்ள கலெக்ஷன்ஸ் பிரமிக்க வைத்தது. பெரும்பாலானவை இங்குள்ள காடுகளிலும், மலைகளிலும் கண்டெடுக்கப் பட்டவை. பதப்படுத்தப்பட்ட குழந்தை முதல், மிருக எலும்புகள், தோல்கள், பாம்பு, பூச்சி வகைகள், முதுமக்கள் தாழி, நாணயங்கள் என சிறிய இடத்தில் இத்தனையும். ஆச்சரியப் பட்டு போனோம். அதனுடைய பொறுப்பாளர் ரோம் நகர போப் பால் II விடம் பணி புரிந்தவர், எண்பது வயது கடந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. ஸ்டனிஸ்லாஸ் என்ற அவரிடம் ஆசி பெற்று பயணத்தை மதுரைச் சாலையில் தொடர்ந்தோம்.
வழி நெடுகிலும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையாதலால், வாகனங்கள் வரிசையாக மேலேறிச் செல்வதைக் காண முடிந்தது.
ஓரிடத்தில் தேநீர் அருந்த நிறுத்திய போது, கடைக்காரருக்குச் சொந்தமான நாயின் தாயன்பைக் காண முடிந்தது. நண்பர் சாம் பிஸ்கட் வாங்கிக் கொடுத்த போதே டிரைவர் சொன்னபடி தரையில் போடாமல் அதன் வாயில் கொடுத்த போது, முதல் பாதி மட்டும் தான் தின்று, அடுத்தடுத்துக் கொடுத்தவைகளை கீழே பள்ளத்தில் அமைந்த வீட்டுக் கூரைக்கு எடுத்துச் சென்றது ஏனென்று பார்த்தால் குட்டிகள் இரண்டு அங்கே இருந்தன. முதலில் ஒன்றுக்கும், அடுத்தது மற்றொன்றுக்கும் எனப் பகிர்ந்தளித்தது. ஏனோ மேலே இருந்த மூன்றாவது குட்டியை அவ்வளவாக கவனிக்கவில்லை.
தேநீர் அருந்தியபடிநே மலைச்சரிவில் அவரைக் காய் தோட்டத்தைப் பார்வையிட்டு, கீழே இறங்க ஆரம்பித்து, பாட்டி ஒருவரின் பழக் கடையில் நிறுத்தி பலாப்பழ சுளைகள் சுவைத்து, மலை வாழைப்பழம், ஆரஞ்சு முதலானவற்றை வாங்கிக் கொண்டு, வத்தலகுண்டு ஈடன் உணவகத்தை அடைந்த போது மதிய உணவு நேரம் ஆகியிருந்தது.
மதிய உணவுக்குப் பிறகு பயணம் தொடர்ந்தது. மீனாட்சி அம்மன் கோயில் மூன்று மணியளவில் அடைந்த போது, அனைத்து வாயில்களிலும் மக்கள் கூட்டம், தொடர்ந்த விடுமுறை காரணமாக. வெளியே நின்றே அம்மனைக் கும்பிட்டு விட்டு, திருமலை நாயக்கர் மகால் சென்ற போது, பள்ளிச் சிறுமிகளின் பெருங்கூட்டம். ஐந்து மணிக்கு மூடுவதாகவும், ஒலி ஒளிக் காட்சி நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆனதென்றும் தகவல் தெரிந்தது. விரைந்து உள் நுழைந்து, பார்வையிட்டு, போட்டோக்கள் எடுத்து, படிகளில் உட்கார்ந்த போது, வெளியேறுமாறு விசில் சத்தம்.
இரயில் நிலையம் நோக்கிப் பயணித்து, ஓட்டுனர் சக்திவேலிடம் பயணக் கட்டணம் செலுத்தி விடை பெற்று, குளோக் ரூமில் லக்கேஜ்கள் வைத்து, ஏழு மணியளவில், அருகில் உள்ள ஓட்டலில், இரவுச் சிற்றுண்டி சாப்பிட்டு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பாலும் அருந்தி, சென்னைக்கு நண்பர்கள் விடை பெற்ற போது நெஞ்சம் ஏனோ கனத்தது.
எனது ட்ரெயின் நடுநிசியில் பிளாட்பாரத்துக்கு வரவும், ஏறி பெர்த்தில் படுத்து கண்மூடி உறங்க முயன்ற போது இன்னொரு பயணம் இது போல் அமையுமா என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் அவரவர் இல்லம் சேர்ந்தனர் என்ற மெசேஜ்களோடு இந்த நட்பின் பயணக் கட்டுரை முடிவுறுகிறது. மீண்டும் பயணிக்கும் வரை ஓய்வு விரல்களுக்கு.
( முற்றும்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக