வெள்ளி, 8 மே, 2026
வழியெல்லாம் வசந்தம்
வழியெல்லாம் வசந்தமாமே யாருக்கோ சொல்வீரா
வழியற்றுப் போன வறுமை விலகிற்றோ
பழியேற்று பயிர் செய்யும் விவசாயம்
கழிவுநீர் அகற்றி நாற்றம் உடம்பில்
கடைவீதி தன்னில் கத்தும் குரலோசை
படைகொண்டு சென்று உயிர்நீக்கும் வீரன்
உருகும் தார்ச் சாலை உழைப்பாளி
பருகும் நீருக்கு பலகாதம் நடப்போர்
உண்டு கொழுத்த வக்கிர முதலாளி
தொண்டு் செய்பவன் உழைப்பால் உயர்ந்தவன்
பொய்கள் பேசியே உயர்ந்த தலைவன்
காய்கள் நகர்த்தும் சூழ்ச்சி அரசியல்
ஆணவக் கொலைகள் சாதிப் பேய்கள்
ஆண்டவன் பெயரில் அக்கிரமம் செய்பவன்
ஆட்சிக் கட்டிலுக்கு அனைத்தும் செய்பவன்
காட்சிகள் மாறியதா கவிஞர் பெருமக்காள்
வழியெல்லாம் வசந்தம் எதிலும் சுதந்திரம்
வந்ததா உலகில் பதிலும் உண்டா ?
கண்களை மூடியே காதுகள் அடைத்தே
விண்ணிலே பறப்பதாய் ஒரு கூட்டம்
பாவத்தின் நெருப்பில் குளிர்காயும் கூட்டம்.
கூவத்தின் நீரும் வாசனை என்கும்
செய்வது அறியாது அமைதி காக்கும்
பொய்களை நம்பி காலம் கடத்தும்
எங்கே போகிறது எதிர்காலம் என்று
உங்களைக் கேட்க நானிங்கு வந்தேன்
விடைகள் இல்லாத வினாவே இதுதான்
மடைகள் மாற்றிச் செல்வோம் வாரீர் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக