வெள்ளி, 8 மே, 2026
வியர்வையின் விளைச்சல்கள்
வயலோடும் நீரும் வளர் கதிர் நெல்லும்
வகையான பயிர்கள் விளைகின்ற பூமி எங்கும்
கதையாகச் சொல்வது என்ன வியர்வையின் விளைச்சல்கள்
உயர்ந்தோங்கி நின்று தலை நிமிரச் செய்யும்
உருவான மாளிகை பலவும் நகரம் என்றும்
உணர்த்தி நிற்பதுவும் இங்கே வியர்வையின் விளைச்சல்கள்
கடலோடி பலகளம் கண்டு வாகை சூடிய
மன்னர் படை வீரர்
சரித்திரச் சான்றுகள்
வீரத்தின் மாண்பை பறை சாற்றும் விளைச்சல்கள்
உடல் நோக உயிர் உருக உழைத்து
சுமை தூக்கும் தொழிலாளி காக்கும் குடும்பங்கள்
கடமை தவறாத மானிடத்தின் மகுடமான விளைச்சல்கள்
தன்னலம் மறந்த தாயின் அன்புக்கு இணையேது
பாசத்தின் விளிம்பில் ஓயாது உழைக்கும் உள்ளம் தாயினது
ஈடேது இதற்கு
இதுவே தியாகத்தின் விளைச்சல்
தாயகம் காத்திட தன்னுயிர் ஈந்து எல்லையில்
உயிரையும் துறக்கும் உன்னத வீரனின் மாண்பு
ஒப்பற்ற தேசப் பற்றின் அடையாள விளைச்சல்
வியர்வையின் விளைச்சல் முத்துக்கள் எண்ணில் அடங்கா
அயராது உழைக்கும் அத்தனை மனிதரும் மாணிக்கங்கள்
விலையேது மதிப்பிட தலை வணங்கி ஏற்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக