அரபிக் கடலோரம்
நாள் ஒன்று
பள்ளி நாட்களில் ஒரு முறை ஒன்பது ரூபாய் கொடுத்து சுற்றுலா செல்ல முடியாத வருத்தம் மனதிலே இருந்ததாலோ என்னவோ, உலகம். சுற்றும் வாலிபன் எனப் பெயர் பெறும் அளவுக்குப் பயணங்கள். மன ஆறுதலும், கண்களுக்கு பசுமையும் சேர்க்கும் இயற்கை வளம் மிக்கதாகவே பெரும்பாலும். கேரளாவில் இன்னும் பார்க்காத இடங்களுக்குச் செல்ல வேண்டுமென பல நாள் கனவு. முதலில் கார் லாங் டிரைவ் என்பது நேரெதிராக அனைத்து பொதுப் பயண முறைகளை பயன்படுத்த முடிவு செய்து, நண்பர்களைக் கலந்தாலோசித்து, அசோக் என்னுடன் வருவதாக ஒப்புக் கொண்ட பின், சென்னை நாகர்கோவில், பெங்களூர் நாகர்கோவில் பதினைந்து நிமிட இடைவெளியில் இரயில்கள் அடைய, ஏழரை மணியளவில் (12/12/23) இரண்டு பேரும் சந்தித்து, ஏற்கனவே புக் செய்திருந்த ஓட்டலை அடைந்து, காலைக்கடன் முடித்து, சிற்றுண்டிக்குப் பின், பேருந்து நிலையம் அடைந்து, முட்டம் பேருந்தில் ஏறி, பதினேழு கிமீ கடக்க சுமார் ஒருமணி நேரம். லைட் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்கி மெதுவாக கடற்கரை நோக்கி நடந்த போது அழகிய கடற்கரை விரிந்தது. நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்பு வந்தபோது சிறிய கிராமமாய் இருந்த இடம், கட்டிடங்கள் நிறைந்து, சுற்றுலாத் தளமாக மாறிக் கொண்டிருந்தது. கோவா போன்ற தோற்றம் பாறைகள் நிறைந்த கடற்கரை.
பாறை மேல் ஏறி போட்டோ எடுத்த போதே போலீஸ்காரர் ஒருவர் வந்து கீழே இறங்கச் சொன்னார். அலைகள் ஆக்ரோஷமாக பாறைகளில் மோதியபடி இருந்தன. இது திங்கட்கிழமை காலை நேரமாதலால் எங்களையும், இன்னொரு குடும்பத்தினர்,சில வாலிபர்கள் தவிர கூட்டம் இல்லை. பார்க்க மிக அழகான தோற்றம். எதிரே உயர்ந்த கலங்கரை விளக்கம். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம் எனத் தோன்றியது.
நாகர்கோவில் டவுன் பஸ்ஸில் திரும்பி, மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் 35 கிமீ தொலைவில் உள்ள திற்பரப்பு அருவி செல்ல, இரண்டு பஸ்,ஆட்டோ மூலமாக அடைந்த போது மணி நான்குக்கு மேல். நான் மட்டுமே அருவியின் மிகவேக வீழ்ச்சியை, முதுகின் மசாஜாக மாற்றி, சில மணித்துளிகள் செலவிட்டு, மீண்டும் குலசேகரம் வந்து, நாகர்கோவில் பஸ் ஏறியபோது, கூட்ட நெரிசலில் நசுங்கிய போது, பல வருடங்ளுக்கு முந்தைய சென்னை பஸ் பயணம் நினைவுக்கு வந்தது.
மறுநாள் பயணம் செய்ய புனே எக்ஸ்பிரஸில் டிக்கெட் ஆன்லைனில் பதிவு செய்த போது, எர்ணாகுளம் சென்று அங்கிருந்த படி கேரளாவின் மற்ற இடங்களுக்குச் செல்ல முடிவானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக