இராஜ புதனப் பயணம் - பகுதி 3
உறவினர்கள், நண்பர்கள் மனதிலே என்னைத் திட்டிக் கொண்டிருப்பார்கள், நான்கே மாதம் முடிந்து, அறுவைச் சிகிச்சை முடிந்து, அதற்குள்ளாகவா, பயணம் என்று. இயற்கையும் இறைவனும் என்னுடன் பயணிப்பதாக எண்ணிக் கொள்கிறேன். எதிர்பார்ப்புகள் தோல்வியடையும் போது, வேற்று வழியொன்று மனதிற்குப் பிடித்ததாய் அமையும்போது அதை பற்றிக் கொள்வதில் தவறில்லை. புரிந்தவர்கள் புத்திசாலிகள்
நாள் நான்கு
ஜெய்சால்மரை அடைந்து, ATM, சலவைத் துணிகள் கொடுப்பது, மதிய உணவு (1156 AD ரெஸ்டாரென்ட்) போன்றவை முடித்து, சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள Sam Sand Dunes என்ற பாலைவன மணல் பகுதியில், Stay inn Resort என்ற பாலைவன டென்ட்டை அடைய மாலை மணி நான்கு.
திட்டமிட்டபடி ஜீப் சவாரி போக, எனது வயதொத்த சாச்சா ஹயாத் கானின் ஜீப் வரும் வரை தேநீர் அருந்திக் காத்திருந்தோம். அருமையான சுவையில் தேநீர் எங்கும். அவரது ஜீப்பில் ஏறியதும், அவர் கொடுத்த அறிவுரைகள் தலைமேல் ஏற்று, பறந்தது ஜீப் மட்டுமல்ல, மனதின் தைரியமும் கூட. எல்லாத் திசைகளிலும் குலுங்கிய உடல், கைப்பிடி தவறினால் விழும் அபாயம், காயம் ஏற்படலாம், மணல் மேடுகள், பள்ளங்கள் என கவிழ்ந்து விடும்போல் நண்பர் இந்த வயதில் திறமையாக ஓட்டுவது பிரமிக்க வைத்தது. வீடியோ 13 நிமிடம் ஓடியிருந்தது. அவர் இறக்கி விட்டு ஓய்வெடுக்கச் சொன்ன இடத்தில் பைக் ரைட் வரச் சொல்லி கட்டாயப் படுத்தப் பட்டு சர்க்கஸ் கூடார ஓட்டுதல் போல் மற்றுமொரு வயிறு கலக்கும் பயணம்.
300 tent camps மற்றும் பாகிஸ்தான் எல்லை 160 கிமீல் உள்ளதால் பல இடங்களில் BSF கேம்ப், வாகனங்கள் என கலவையாய் இருந்தது.
கதிரவனின் மறைவு பாலைவன வெளியில் அழகாய். டென்ட் அடைந்தபோது பக்கத்து டென்ட்டில் கேரள இளைஞர்கள் மூன்று பேர் மொத்தமாக நான்கே பேர் பயணிகளாக.
கேம்ப் வருவதற்கு முன்பே குல்தாரா என்ற பிசாசுகளின் கிராமத்துக்குச் ( Abandoned village) சென்ற போது நம்மை வரவேற்றது மனிதர்கள் வசிக்காத வீடுகளும், இடிபாடுகளும். அங்குள்ள பெயர்ப் பலகை 19ம் நூற்றாண்டிலேயே இக்கிராமம் பிராமணர்கள் வசித்து வந்ததாகவும், பூகம்பமோ, அங்கிருந்த கொடுங்கோலாட்சி தலைவனோ ஏதோ காரணத்தால் இடம் பெயர்ந்து விட்டார்கள் எனச் சொல்கிறது.
இரவு ஏழு மணியளவில் கேம்ப்பினர் சார்பாக பாட்டு மற்றும் நடனக்குழுவின் ஒரு மணி் நேர பங்களிப்பு அருமையாய் இருந்தது. அவர்களோடு போட்டோ கிளிக்கி, இரவு உணவு முடித்து, படுக்கை சேர்ந்தபோது மறுநாள் காலை இந்திய பாக் எல்லைப் பயணம் பற்றிய நினைவுகளோடு, உறங்க முற்பட்டபோது, தூக்கம் சரியாக வரவில்லை, பகலில் சூடான இப்பகுதி இரவில் மின்விசிறியை நிறுத்திய போதும் மிதமான குளிராக இருந்தது.
( தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக