நண்பர்களுடன் சென்னை வலம்
நாள் 14/9/23, காலை பத்தரை மணிக்கு நண்பர்கள் இராஜேந்திரன் மற்றும் குணசேகர் இராதா ரீஜன்ட் ஆஜர். எங்கே போவதென்ற விவாதம். முடிவில் மெட்ரோ இரயிலில் இலக்கற்ற பயணம் செய்ய முடிவு.
அரும்பாக்கம் மெட்ரோ நிலையத்தில் மூன்று டிக்கெட்கள், ₹ 150 ஒருவருக்கு, ₹ 100 ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யவும், ₹ 50 பயண முடிவில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிந்து, தொலைவில் உள்ள விம்கோ நகருக்கு பயணம் செய்ய நடைமேடை 2 ல் மெட்ரோவில் ஏறி ஒவ்வொரு ஸ்டேஷனாகக் கடந்து, சென்ட்ரலில் இறங்கி blue lineக்கு மாறி மீண்டும் பயணம். உயர்நீதி மன்றம் கடந்து கடலோரமாகச் சென்ற இரயிலில் ஒவ்வொரு ஸ்டேஷனைக் கடந்து, விம்கோ நகர் அடைந்த போது தான் தெரிந்தது, கடற்கரை தூரமாகவும், காப்பி குடிக்க கடைகள் இல்லை என்பதும்.
நடைமேடை மாறி இப்போது உயர்நீதி மன்ற மெட்ரோ வரை சென்று வெளியேறி,ஹைகோர்ட் வாசலில் காப்பி அருந்திய போது, கோர்ட்டுக்கு வந்து போன பழைய நினைவுகள். ஆட்டோ பிடித்து உழைப்பாளர் சிலை மெரினாவில் இறங்கி, போட்டோக்கள் கிளிக்கி, நிழலாய் இடம் தேடி அமர்ந்து பழைய குவார்டர்ஸ் வாழ்க்கை பற்றி பேசிய பிறகு அடுத்து எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலுக்குப் போக பஸ்ஸா ஆட்டோவா என விவாதித்து , ஆட்டோவில் போய் இறங்கி, ஃபுட் கோர்ட்டில் வெஜிடேரியன் சாப்பாடு, மூன்று பேருக்கும் ஆர்டர் செய்து காத்திருந்த போது, அந்த ஹால் முழுவதும் மக்கள் அமர்ந்து இருந்தது, ஒர்க்கிங் டேவிலும் இவ்வளவு கூட்டம் எனத் தோன்றியது.
அடுத்து பேருந்துப் பயண அனுபவம் பெற பஸ் நிலையம், அருண் எக்ஸல்லோ அலுவலகம் அருகில் சென்று 21 பஸ்ஸில் ஏறிய போது கூட்ட நெரிசலில் நசுக்கப் பட்டு, வியர்த்து ஊற்றியது. ஒரு வழியாக சென்ட்ரலில் இறங்கி, மீண்டும் மெட்ரோ நிலையம் செல்ல, இராஜேந்திரன் விடைபெற்று அவனது ஊரான திருநின்றவூருக்குத் திரும்பினான். நாங்கள் இருவரும், அரும்பாக்கம் அடைந்து, ஓட்டலுக்கு எதிர்ப்புற திசையில் வழி மாறி நடந்து, ஆட்டோ பிடித்துத் திரும்பிய போது கால்கள் ஓய்வு வேண்டி கெஞ்சின. முகம் கழுவி, சிறிது நேர ஓய்வுக்குப் பின்,பைக்கில் நொளம்பூர் ( முகப்பேர்) அந்தோணி வீட்டிற்குச் சென்று அவனது உடல் நலம் விசாரித்து விட்டு ஓட்டலுக்கு ஆட்டோ பிடித்து திரும்பிய போது மணி ஏழை நெருங்கி இருந்தது.
கால் நடை, பைக், பஸ்,ஆட்டோ, மெட்ரோ இரயில் என நகர் வலம் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக