ஓய்ந்த பின்னே உட்கார இடம்தேடி
காய்ந்த சருகாய் சுமந்த உடல்தனை
வேய்ந்த கூரைக்குள் உள்ளடக்கி சுருக்கி
சாய்ந்த உடலுக்கு சாமரம் வீசுவையோ
பட்ட மரமாய் பரிதவித்த மனிதனுக்கு
கெட்ட குடியே கெடுமென்று விட்டிடுவாயோ
சொட்டச் சொட்ட வியர்வை சிந்தி
வட்டிலிட்ட அன்னம்தானே உன்னுயிராய் இங்கே
சோற்றுக்கு நெல்தந்து சோர்ந்த உழவன்மனம்
கூற்றுவன் வரும்நேரம் நோக்குதல் முறையாமோ
பற்றற்ற உள்ளமதை பற்றியது ஏனோநீவிர்
கற்றது இதைத்தானோ கசடராய் மாறுதற்கோ
உலகிற்கே உணவளித்த ஊரிலிப்போ உழவில்லை
ஊருணி நீருமிங்கே உலர்ந்து போனதய்யா
வெள்ளநீர் வந்தாலே வாய்க்கால் வழிந்தோடும்
கொள்ளை போனமணல் கொண்டுபோனது நதிகளையே
கூக்குரல் யார்செவியும் சேராது என்செய்ய
கூனிக்குறுகி நிதம் கும்பிட்டு நின்றால்
வறியவர் கூப்பாடு புல்லுக்குச் சேருதிங்கே
வருமோ ஒருமாற்றம் இன்றோநாளையோ யாரறிவார் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக