வெள்ளி, 7 டிசம்பர், 2018

எனக்கொரு காதலி

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
என்னோடு நகையாடி இருக்கின்றாள்
எப்போதும் நிழலாய் என்னுள்ளே
எனக்காய் பிறந்தவள் இன்னுயிரானவள்
கருத்தாய் கரிசனமாய் இருப்பாளவள்
கரம்கோர்த்து கதைபேசி என்னோடிருப்பாள்
காதோரம் காதலுடன் கதைத்திடுவாள்
களுக்கென்ற அவள்சிரிப்பு தேனமுதாம்
நானும் அவளும் உடலும் உயிருமாய்
அவள் பாட்டைக் கேட்டு உறங்கிடுவேன்
அவளின்றி ஓரிரவும் இருந்ததில்லை
சுகமான வாழ்க்கை என்றென்றும்
கற்பனைதான் ஆனாலும் கற்கண்டாய் !

எம்மினம்..

என் இனத்திற்கு எப்போதும் வேதனை
கண்டமொன்றே கடலுக்கடியில் உறங்குகிறது
மாற்றான் மண்ணில் அடிமையாய் அல்லல்
ஊருக்கு இளைத்தவர் எம்மினம் என்றாயிற்று
நெல் வயல்கள் நீருக்காய் ஏங்கி கருகிற்று 
நெடும்புயலால் வேரோடு சாய்ந்தன மரங்கள்
மழை வெள்ளம் மண்குடிசை புகுந்தது
தீக்கனல் காட்டை கருகச் செய்தது
வானம் பொய்த்தது வயல்கள் வறண்டன
புயல் காற்று இல்லையேல் பெரும் வெள்ளம்
ஏனிந்த தண்டனை எம்மின மக்களுக்கு
ஏதேனும் பரிகாரமுண்டா செய்திட
நிம்மதியாய் வாழவிடு நிர்க்கதியாய் ஆக்காதே
இயற்கையோ இறைவனோ இனியேனும் வேண்டாமிது !

மாறிவிடு

அடே மானிடப் பதர்களே
மனித இனம் பிறந்து
பல்லாயிரம் ஆண்டுகள்
இன்னும் உங்கள் 
சாதிவெறி போகவில்லை
இரத்தம் நிறம் சிவப்பு
தோலின்நிறம் மட்டுமே மாறும்
மானுடா யாவரும் உன் இனமே
சாதி மதங்கள் நீதானே பிரித்தாய்
காதல் இதைப்பார்ப்பதில்லை
உயிர்க்கொலை செய்து
என்ன கண்டாய்
பிடிக்காதவர்களை நீஒதுக்கு
அவர்களை வாழவிடு
களையெடுக்கப் பட வேண்டியது
உங்கள் உயிர் அவர்களல்ல
கற்றுக்கொள் ஒற்றுமையை
மிருகத்தினும் கீழாய்நீ
மாறிவிடு இல்லை செத்துமடி
அழிக்கப்பட வேண்டியது நீயே !
விசயன்

ஊழல் முதலைகள்

மாற்றமொன்று தேவை
மாற்றிட வேண்டுமென்றால்
மாக்களின் ஆட்சியை
கூழைக் கும்பிடு கூத்தாட்டம்
பொய்வாக்கு பொறுப்பின்மை
ஆள்வது மட்டுமே மனதில்
ஊழல் முதலைகள்
ஊரார் பணத்தில்
உல்லாச வாழ்க்கை
முடிவுக்கு வழிவேண்டும்
வாக்களித்தவரே தண்டிக்க
வாய்ப்பொன்று வேண்டும்
ஐந்தாண்டு அல்ல
இடித்திட வேண்டும்
இறுமாப்பை இப்போதே
வழியொன்று செய்வோம் !

மாயபிம்பம்

கண்மூடி உறங்கினாலே பல கனவுகள்
காலச்சக்கரம் புரவிகள் பூட்டியதேர்
வாழ்க்கை என்பதோ வளர்பிறை தேய்பிறை
வான்வெளியில் தோன்றும் தாரகைகள் சிலநேரம்
நீலவானில் முடிவு தேடிப் பயணம்
முடிவே இல்லையென்று
முதுமை சொல்லும்
உறவு நட்பு உறுதுணை உண்டு
உள்ளம் சிலநேரம் தனிமை நாடும்
மனித வாழ்க்கை மாயபிம்பம்
இறுதிப் பக்கம் வெற்றுத்தாளாய் !

நண்பர்களே

தோண்டக்குறையாது அன்பும் அறிவும்
பண்பாளருக்கு உள்ளது பரிவும் பாசமும்
என்றும் அழியாதது காதலும் நட்பும்
வாழ்வில் உயரத்தேவை
விடாமுயற்சி திறமை
வணக்கத்திற் குரியோர்
மூதறிஞர் முன்னோர்
இறப்பின் பின்னும் தொடரும்
புகழும் செய்த தர்மப்பலனும்
சொல்லும் சொல்லின் சிறப்பும்
இறைவன் கொடுத்த வரம்
வாழும் நாளெல்லாம் நண்பர்களே
வசந்தம் வளம் செழிக் கட்டும் !

கடைக்கண் பார்வை

கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன்
கதவிடுக்கில நான் பாத்தேன்
நித்தம் நித்தம் நீதானே என் நினைவு
அந்தி சாயும் நேரம்வரை
உனக்காக காத்திருப்பேன்
உன் கடைக்கண் பார்வை 

கதவிடுக்கில் நான் காண்பேன்
கண்ணை மூடி உறங்கும் வேளையிலும்
உன்னுருவம் என் முன்னே
ஏனிந்த தண்டனையோ ஏங்க வைத்தாயே
கண்ணுக்குள் உனை இருத்தி வைத்தேன் நான்
கரங்களுக்குள் எனை அணைத்து ஏற்பாயென்றே!

நரகாசுரர்

எல்லாமே மாறிப் போனது
அசை போட பழங்கதை மட்டுமே
பாட்டிக் கதை சொல்லும்
பாட்டனாய் நீயும் நானும்
பேசுவதும் எழுதுவதும் தவிர
பாமரனாய் ஒன்றும் செய்ய
இயலாதவனாய் நண்பா நீயும்தானே
தீயவை களையவே தீபாவளி
தீயிட்டுக் கொளுத்த பட்டாசு
அன்று மட்டுமே அழித்த இறைவன்
எங்கே போனான் தேடுகிறேன்
நரகாசுரர் ஆயிரமாயிரம் நாடெங்கும்
இன்னொரு தீபாவளி நாள்குறித்து
இவரெல்லாம் அழிக்க நீ வருவாயா ?

பொய்வாக்கு

ஏரு பூட்டி சோறு போடும் நண்பா 
ஏழையானாலும் உன்மனசு தங்கமே இங்கு
ஆனை கட்டி போரடிச்ச காலம்போச்சு
ஆர்கண் பட்டு ஆத்து நீர் வறண்டுபோச்சோ 
பாருக்கே பாரதம் முன்னோடி பாடிவச்சான்
பாட்டாளி உழைப்பாளி பரிதவிப்பது ஏனோ
காசுக்கு விலைபோகும் கயவர் கூட்டம்
காடாக நாட்டையே மாத்திப் புட்டாக
வீண்பேச்சு பொய்வாக்கு அரசே ஆச்சு
வாக்கு சுத்தம் இல்லாத நாடாபோச்சு
வாய்கிழிய கதறினாலும் செவிசாய்க்க ஆளில்லை
மாறுமோ இந்தநிலை மனசெல்லாம் குழப்பமே
மக்கள் துயர் தீக்க மன்னவன் வருவானோ!

மனித வாழ்க்கை

மழைக்கால குளிர் காற்று
மனதுக்கு இதமான காலை
கதிரவனுக்கு விடுப்பு
கடல் அலைகளுக்கு அமைதி
கால்கள் நடை போட
கனவுலகில் எண்ணங்கள்
கால மாற்றம் தான்
கண்களில் திரையோட்டம்
வாழ்க்கைப்பாதை வண்ண ஓவியமாய்
வளைந்து நெளிந்து
உயர்ந்து தாழ்ந்து
தொலைதூரம் போய்க்கொண்டு இருக்கிறது
இருந்தவை இல்லாமலும்
இல்லாதவை சேர்ந்தும்
எத்தனை திருப்பங்கள்
எங்கேயோ தொடங்கி
எங்கேயோ முடியும் மனித வாழ்க்கை !

விரைந்தோடி வா

என் காதுகளுக்குள் நீ இரகசியம் பேசி 
எத்தனை நாட்களாயிற்று
நதிநீரின் குளிர்ச்சியில் உன் கால்களை நனைக்க 
அதை என் கைபேசியில் புதைத்து வைத்தேன்
அடிக்கடி பார்த்து மகிழ
தூரமாய் நீ ஏங்கும் மனதோடு நான்
எத்தனை இரவுகள் இன்னும் இந்த இன்னல்
நாளொன்று போனால் வயதொன்று வளரும்
நரைத்த முடியை சாயமிட்டு மறைத்தே
இளமையை இருத்தி வைத்துள்ளேன்
முதுமை கொடியது கண்ணிமைக்கும் நேரத்தில்

காலனை அழைத்து விடும்
இனியேனும் தாமதம் செய்யாதே
இயற்கைக் காற்றில் இதயங்கள் சுமக்க

இமயம் போவதாய் சொன்ன வார்த்தைகள்
நீ உள்ளத்தின் ஆழத்தில் இருத்தி வைத்தாய் தானே
பனிபடர்ந்த சிகரங்கள் நமக்காய் 

கண் விழித்துக் காத்திருக்கின்றன
உன் கரம் பிடித்து தத்தி நடை போட்டு

மீண்டும் குழந்தையாய் நான் தவழ்ந்திருக்கிறேன்
விரைவில் வா! மேக ஊர்தியேறி விரைந்தோடி வா !

சுகமே

காலைக்கதிரவன் ஒளியூடே
கடற்கரைநடை சுகமே
அருவிச் சாரலில் ஆனந்தமாய் 
அமர்ந்திருத்தல் சுகமே
உயர்ந்த மரங்களின் சருகுகள் 
சத்தமிட கானக நடை சுகமே
மேகக்கூட்டம் உடல்தழுவ 
மலைமுகடுகள் சுகமே
நதிநீர் ஓட நாமதில் 
நின்றிடல் சுகமே
ஆர்ப்பரிக்கும் அலைகள் 

கால்கள் தழுவ கடல்நீர் சுகமே
வானம் கருத்து மழைநீர் 

நனைதல் சுகமே
மெல்லியளாள் கைகோர்த்து 

வேகமற்ற நடை சுகமே
தென்றல் உடல்தழுவ 

தெம்மாங்குப் பாட்டிசை சுகமே
பசுமை நெல்வயலில்

வரப்புமேல் நடை சுகமே
இயற்கை நமக்களித்த இன்பம்

இவையாவும் சுகமே !

கேள்விக்குறியாய் எதிர்காலம்

மாயவலைகள் பின்னப்பட்டன
மயக்க உணர்வில் வைக்கப்பட்டனர்
நன்மைதீமை உணராத நிலை
பொய் வாக்குறுதிகள் நாடகங்கள்
ஊழல் பெருச்சாளிகள் தலைமையில்
செய்வதறியாத மக்கள் செயலற்று
ஊடகங்கள் விபச்சார நோக்கில்
மூளைச் சலவை வேகமாய் எங்கும்
முடங்கியது ஆராயும் தன்மை
அரக்க குணமே அதிகவளர்ச்சி
சிக்கலில் சமுதாயம் சிக்குண்டு
விடைதான் இல்லை வினாக்கள் பல
விடிந்தது இன்னொரு நாளும்
கேள்விக்குறியாய் எதிர்காலம் நோக்கி ?

காதல் தேவைதானோ?

விழியிலே உதித்து இதயம் நுழைந்து
விடைகள் காணா உணர்வுகள் கலந்து
உறக்கம் தொலைத்து
கண்கள் பனித்து
உயிரின் ஆழம் கண்டு மீண்டுவந்து
பெரும் போராட்டம் என்றாலும்

விடாது தொடர்ந்து
சுட்டுவிடும் நெருப்பென்று தெரிந்தாலும்
சோகத்திலும் சுகம் கண்டு
உய்த்தவர்க்கே புரியும் இதன் வலிமை
காலமெல்லாம் நினைத்திருக்க

காதல் தேவைதானோ !

ஒற்றுமை வழிதேடு

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
பிரிவினை கண்டவர் யாரோ ?
மதமென்ற மாயை எதற்கு
தோலின் நிறம் கருப்போ வெள்ளையோ
உதிரம் மட்டும் சிவப்புதானே
கடவுளர் பலரும் கண்டவர் எவரோ ?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
தெரிந்தும் தெரியாத நிலை ஏனோ ?
கொண்டுவருவதும் எடுத்துச் செல்வதும்
மானிட உடல்மட்டும் தானே
மயக்க நிலை விட்டு வெளியேறு
மக்கள் நாமென்று கொள்
மாக்களும் பசித்தபோதே உண்ணும்
வேற்றுமை பாராட்டல் ஒழித்து
வேதங்கள் சொல்லும் உண்மையுணர்ந்து
ஒற்றுமை வழிதேடு உயர்வாய் !

புதிய உதயம்

உறக்கம் வராத இரவில். 
உருண்டு புறண்டு உறங்கி
மீண்டும் காலை மீண்டும் கவிதை
நீண்ட வாழ்க்கையிது
நீயும் நானும் வாதாடி
நித்தமும் கவிபாடி
வசந்தமும் வருத்தமும்
மாறிமாறி வருமென்று
தெரிந்து தெளிந்து
ஞானம் பிறந்து
ஞானியாகி மோனநிலை

பெற்றோமா ?
புறப்படு புதிய
உதயம் காண !

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வேற்று வழி இல்லையினி


விலங்கோடு விலங்காக வேட்டையாடி
பகிர்ந்துண்டான் ஆதி மனிதன்
பசி மட்டுமே வயிற்றில் இருந்தபோது 
பாழும் சாதிபேதம் இல்லை மனதில்
பரந்த உலகமே தனதாக் கி
ஊர் விட்டு ஊர் சென்று
உணவைத் தேடினான்
உயிர் பிழைப்பது மட்டுமே மனதில்
நாடுகள் இல்லை நதிகள் பிரிவில்லை
வயிறு நிரம்பிய உள்ளம்
வாலிப முறுக்கில் சுகம்தேட
வந்தது முதல் பிளவு
தன் துணை தன் மக்கள்
தனக்கென ஓர் இடம்
வீடுகள் கிராமம் நகரம்
பெருகிய வட்டத்தில்
பொறாமை சுயநலம் பொல்லாங்கு பலவும்
அமைதிப் பூங்கா காடானது
மனிதனை மனிதனே கொல்லும்
விலங்குத் தன்மை வந்தது
வேற்றுமை பாராட்டி
வெட்டி மடிந்து மானிடன்
விலங்கினும் கீ்ழானான்
வேதனை தான் என்றானது
வே
ற்று வழி இல்லையினி
மானுடம் மெல்லச் சாகும் !

விடிவு இல்லை

ஊருக்கு ஒரு பாதை இல்லை 
ஓடுகிற ஆற்றின் குறுக் கே ஒரு பாலம் இல்லை
விவசாயி வாழ்க்கை உயரவில்லை
கழனியில் வேலை செய்ய ஆளே இல்லை
நெல் விளயும் பூமிக்கு நீருமில்லை
வெள்ளக்காடாய் ஒரு பக்கம்
வெடிக்கும் பாலையாய் மறுபக்கம்
ஊருக்காய் உழைத்த உத்தமர் மறைந்தார்
ஊரை ஏய்க்கும் எத்தர் எங்கும்
கேட்கவும் ஆளில்லை செய்யவும் ஆளில்லை
எனைப் போன்றோர் எழுதும் வரிகள்
பட்டாணிக் கடையில் பொட்டலமாய்
பஜ்ஜிக்கடையில் வடிகட்டியாய்
விடிவும் இல்லை விடையும் இல்லை

அவசர உலகம்

தென்றல் வந்து எனைத் தொட்டுப் போகும்
தேமதுரத் தமிழோசை கேட்கும்
காலையிளம் கதிரவன் கண்டு புள்ளினங்கள் கூடு துறக்கும்
காளை பூட்டிய வண்டியில் சலங்கை ஒளிக்கும்
சாணம் தெளித்த வீதிகளில் மாக்கோலம் விரியும்
சாத்திரங்கள் ஓதும் சான்றோர் குரல் கேட்கும்
ஏர்பூட்டி உழவுக்கு ஏற்றம் இறைக்கும்
எண்ணிப் பார்த்தேன் எத்தனை அழகு
அனைத்தும் மாறிய அவசர உலகம் என்செய்வேன் !

அமைதியுண்டு

காட்டு மலருக்கும் வாசமுண்டு
காக்கைக்கு கரைந்துண்ணும் குணமுண்டு
சேற்றிலே செந்தாமரை மலர்வதுண்டு
பாதைகள் கரடானாலும் பயணங்களுண்டு
படிக்காத மேதைகள் பாரினிலுண்டு
படித்தும் பண்பில்லா மாக்களுமுண்டு
வறண்ட பாலையில் சோலைகளுண்டு
வளமான நிலமும் வறண்ட பாலையாவதுண்டு
ஏற்றமும் இறக்கமும் எதிலுமுண்டு
ஏற்றிடும் மனதில் நிம்மதியுண்டு
போற்றலும் தூற்றலும் பாரினிலுண்டு
போகட்டும் விட்டுவிடு் அமைதியுண்டு

மனிதவாழ்க்கை

அன்புக்கும் அணைப்புக்கும்
பண்புக்கும் பாசத்துக்கும்
உறவுக்கும் உரிமைக்கும்
ஏங்கிடும் மனித வாழ்க்கை
உண்மைக்கும் பொய்க்கும்
நன்மைக்கும் தீமைக்கும்
பொறுமைக்கும் கோபத்திற்கும்
இடைப்பட்ட மனிதவாழ்க்கை
காதலுக்கும் காமத்திற்கும்
கருணைக்கும் கயமைக்கும்
கருத்துக்கும் உணர்வுக்கும்
ஊசலாடும் மனிதவாழ்க்கை
சாதிக்கும் மதத்திற்கும்
நீருக்கும் நிலத்திற்கும்
உணவுக்கும் உரிமைக்கும்
போராடும் மனிதவாழ்க்கை
அனைத்தும் அமையாத
அடிப்படை வாழ்வுதேடி
அலைந்தே காலமெல்லாம்
அடங்கிப்போகும் ஒருநாள் !

தாயாக நீ

எனக்காக நீ அழுத காலங்கள் போய்
உனைத் தேடி உருகவைத்தாய்
ஓர் அடி வைத்த பாதம் முத்தமிட்டாய்
ஓராயிரம் அடிவைத்தாலும் உனைச்சேர முடியாது
கவளச்சோறூட்ட நிலா அழைத்தாய்
காணாமல் இன்று நிலவுக்கும் அப்பாலே
கண்ணே கனியமுதே என்றவளே
கண்ணுக்கும் எட்டாத தொலைதூரத்தில்
கன்னத்தைக் கிள்ளி நகைத்த நீ
கண்மூடிப் பார்த்தாலும் காணவில்லை
கள்ளமற்ற உன் உள்ளம்
காணக் கிடைக் கவில்லை
காத்திருக்கேன் பலகாலம் உனக்காக
தாயாக நீயும் தவழும் குழவியாய ்நானும்
இன்னொரு முறை விளயாடுவோமா ?

மனக் கசடு

மீண்டும் மீண்டும் சொல்வேன்
மத மொழி சாதியற்ற
மக்களே என் உறவினர்
மண்ணில் மாச்சர்யம் எதற்கு
இன்றிருப்போர் நாளைஇல்லை
இங்கிருக்கும் எதுவும் உனதில்லை
இயன்றவரை இல்லார்க்கு உதவு
இழிவாக எவரையும் எண்ணாதே
இறை பெயரால் இழிசெயல்
வர்ணவேற்றுமை தீண்டாமை
அறவே அழித்து விடு
அறம் வளரப் பாடுபடு
நாட்டுக்கும் நகருக்கும் நன்மைசெய்
நல்லதோர் தலைவனை தேர்வுசெய்
மனக் கசடுகளை கழுவிடு
மக்கள் அனைவரும் உற்றோரே
மாயக் கண்ணாடியைக் கழட்டு
இனியேனும் இவ்வுலகம் அமைதியுறும்
மாறுமாறவிடு இல்லையேல் மரித்துப்போ !

பேச்சு பேச்சா தான் இருக்கு

ஆத்து வெள்ளம் வீணாப்போது 
அணை கட்டு ஐயா
ஏரு பூட்டி உழறதுக்கு
ஏத்த உதவி செய்யுமய்யா
ஏரி குளம் தூர்வாரி
எங்க ஊருலே தண்ணி தேக்கு
நெல்லுக்கும் கரும்புக்கும் நீர்பாய்ச்சுனா
நீயும் நானும் முப்போகம்
விளைய வச்சு விவசாயம் செழிக்குமய்யா
ரோடு போடு குண்டு குழி மறை
நகரத்துலே ஆங்காங்கே பாலம் கட்டு
முடிக்காத பாலமே ஏராளமா இருக்கு
இதுக்குள்ளே எட்டு வழிச்சாலை எதுக்கு
எத்தனையோ வேல இருக்க
இதுக்கு மட்டும் அவசரமோ !
மல்லையா கோடி வருசம் பலவாச்சு
மத்தவங்க கோடி சுவிச் வங்கியிலே
கருப்பு பணம் சேரந்துகிட்டே இருக்கு
புது நோட்டு வந்தாலும.
உம்ம ஆளே பதுக்கறான்
பேச்சு பேச்சா தான் இருக்கு
சொன்னதைச் செய்யுமய்யா
கார்ப்பரேட்டுங்க மட்டும் இல்ல
கிராமங்களும் கொஞ்சம் கவனி
சொன்ன வார்த்தை காப்பாத்து !

இறைவனாகு

சொல்லித்தா சொல்வதை நன்றே
எழுத்தறிவித்த இறைவனாகு
தாய்மொழியோடு பழகு
மற்றமொழி ஏற்றாலும்
தாயை மறவாது இரு
கல்விக்கு வரம்பில்லை
கல் பலவும் கல் கருத்தில் கொள்
அள்ளக் குறையாதது
ஊற்று நீர் போல
சென்றவிடமெல்லாம் சிறப்பு
காசுக்கு கல்வி தரும்
கசடரை நீக்கு
அனைவர்க்கும் சமமாய்
அனைத்து ஊர்களிலும்
இலவசக்கல்வி இதுதான் தேவை !

விடியல் தேடு்!

காசுக்கு விலைபோன என் மக்களே !
காதையும் வாயையும் மூடியதேன் சொல்வீர் !
தூண்டில் புழுவுக்கு மீனாய் சந்தையிலே 
கால்காசு கொடுத்து கோடியிலே அவன் புரள
கால் வயிறு நிரம்பாமல் தெருக்கோடியில் நீ
காமராசல்ல இவர் கசடர் அறியவில்லை
கடமையே கண்ணென்பது அந்தக்காலம்
காசேதான் கடவுளடா இந்தக் காலம்.
இரண்டு நாள் இன்பத்திற்கு ஆண்டுகள் தொலைத்தாய்
நல்லவர் ஒருவரை ஊர்தோறும் தேடு
அரசுக்கட்டிலில் அமர வழிவகை செய்
ஆயிரம் காமராசர் அப்போது வ்ருவார்
கற்றுக்கொள் கசடு நீக்க காலம்கடக்குமுன்னே
விட்டில் பூச்சியாய் விளக்கில் மடியாதே்!
விழித்தெழு விரைந்திடு விடியல் தேடு்!

புரட்சி

என் நாட்டுக்கு என்னென்ன வேண்டும்
வறியவர் வயிற்றுப்பசி போக்கிட வளமை வேண்டும்
வயிறார அவர் உண்ண உணவு வேண்டும்
வயலுக்கு நீர் பாய்ச்ச ஊர்தோறும்
ஏரி குளங்கள் ஆறு வேண்டும்
அணைகள் ஆங்காங் கே அமைய வேண்டும்
ஊர்தோறும் சாலை ஊர்திகள் வேண்டும்
காடுகள் கழனிகள் கால்வாய்கள் வேண்டும்
ஊருக்கு ஒன்றாய் உண்மைத் தலைவர் வேண்டும்
உழைத்தே அனைவரும் உண்ணல் வேண்டும்
எம்மதமும் சம்மதமாய் எம்மொழியும் தன் மொழியாய்
ஏற்றிடும் உள்ளம் எல்லோர்க்கும் வேண்டும்
ஓட்டு அரசியலன்றி ஊருக்காய் அரசு வேண்டும்
இத்தனை மாற்றமும் இன்றைய தேவை
இதுதான் புரட்சியென்றால் இப் போதே வேண்டும் !

காத்திருப்பேன் நானே !

உனக்கென நானும் எனக்கென நீயும்
உருகிக் காதலித்த நாட்கள் எங்கே
உறக்கம் தவிர்த்து உன் நினைவாக
உறைந்த இரவுகள் எங்கே
இமைமூடி இதமான உன்நினவை
இதயக் கூட்டில் சுமந்த நாட்கள் எங்கே
உன்உடல் சூட்டில் குளிர்காய்ந்து
உரசும் உன்தோளில் சாய்ந்து
கண்ணோடு கண்பேசி காதலுற்று
கையோடு கைகோர்த்த நாட்களெங்கே
ஆறுதல் வார்த்தை அணைப்பு
இணைந்த உதடுகள் எங்கே
இருக்கும் காலமெல்லாம் உன்காலடி
இதுதானே நீசொன்ன சொற்கள்
இரக்கமில்லாமல் இனியேனும் விலகிநில்லாமல்
விரைந்து வந்திடு காதலியே
வழிமீது விழிவைத்து காத்திருப்பேன் நானே !

மனிதரே பகைவர்

வானத்தில் பறக்கும் வல்லூறு
பூமிமேல் காணும் கோழிக்குஞ்சு
வனத்தில் வலம்வரும் புலி
காற்றினும் விரைந்திடும் புள்ளிமான்
நீரினுள் உறையும் முதலை
நிலத்தின் வாழும் உயிரினம்
புற்றுக்குள் வாழும் பாம்பினம்
பதுங்கும் வாலினம் எலிகள்
பகையென்றும் பசியென்றும் வந்தால்
பாய்ந்தே தன்னுள் அடக்கிடும்
மனிதருக்கு மட்டுமே மனிதரே பகைவர்
மதமென்று மொழியென்று மண்ணென்று
நீருக்கு நீண்ட வான்வெளிக்கு
கடலுக்கு காற்றுக்கு கால்வாய்க்கு
கற்பனைக்கும் எட்டாத எல்லாவற்றுக்கும்
ஏனிந்த ஆட்டம் வாழ்வதோ சிலநாட்கள்
ஆறடி நிலமொன்றே சிலருக்கு
ஆற்றுநீரில் கரையும் சாம்பலாய்
அனைத்தும் அறிந்தும் அடங்கமாட்டாயா ?

காலமின்னும் இருக்கு !

கண்ணின் இமைமூடி கண்ணுறங்கு மகனே
காலம் பலவிருக்கு காரியமாற்ற
கருக்கல் முதலாய் கதிரவன் மறையும்வரை
மகனாய் கணவனாய் தலைவனாய்
மாறிடும் காலமெல்லாம் ஓயாத உழைப்பு
உனக்கென வாழும் நேரம் குறைவு
உரியவர் உடன்பிறந்தோர் உன்னவள்
உனைச்சுற்றி உறவுகள்
வாழ்க்கை நீண்டிடும் வசதி தேடும்
ஓட்டம் நிற்காது ஓடும்பாதை நீளம்
ஓயும் நேரம் உடலும் ஓய்ந்திடும்
கண்மூடி உறங்கு காலமின்னும் இருக்கு !

இரவல் எண்ணங்கள்

இரவு முதிர்ந்து இளைய காலை மீண்டும் உதயம்
இதய வானில் உலவும் உறக்கமற்ற இரவுகள்
இளமைக்கும் முதுமைக்கும்
உறக்கமில்லை
இரவானால் இரவல் எண்ணங்கள்
இருண்ட கண்ணுக்குள் ஆயிரமாயிரம் வண்ணங்கள்
இதற்கும் மேலே என்ன நடக்கும்
விடைகாணத் துடித்து வினாடிகள் பெருகி
விடியும் வேளையில் களைத்த கண்கள்
விழிமூடி உறக்கக் கூட்டில் அடங்கிப் போயின !

வேடிக்கை மனிதரடா!

கிறித்தவம் வேண்டாம் இசுலாம் வேண்டாம்
டாலர் வேண்டும் தினார் வேண்டும்
பைபிள் வேண்டாம் குர்ஆன் வேண்டாம்
தொழில் முனைவோர் பெட்ரோல். வேண்டும்
சர்ச் வேண்டாம் மசூதி வேண்டாம்
தளவாடங்கள் சொகுசுக்கார்கள் வேண்டும்
ஆங்கிலம் வேண்டாம் உருது வேண்டாம்
அந்நிய நாட்டில் அனைத்து வேலை வேண்டும்
அவனை இங்கே அடித்து நொறுக்கி
அவன் நாடு சென்று அனைத்தும் கேட்போம்
எவனும் வேண்டாம் எதுவும் வேண்டாம்
பொருள் கல்வி தொழில்
இவை வேண்டும் இன்னமும் வேண்டும்
வேடிக்கை மனிதரடா வேலவா !

உயரட்டும் உன்னதநாடு !

வள்ளுவனைத்தந்த தமிழினமே
வாழ்விலக்கணம் வகுத்தது நீயே
வரலாற்றில் வையகம் சேர்த்தாய்
வான சாத்திரத்தில் விற்பன்னரானாய்
வேதங்கள் படைத்து் வேள்விசெய்தாய்
பொற்றாமரைக்குளம் சங்கம் வளர்த்தாய்
புகழ்பாடும் புலவர்க்கு பொற்காசு ஈந்தாய்
பாண்டியன்சேரன் சோழன் பல்லவன்
பரங்கியரை பதறவைத்த மன்னர்கள்
வீரம் விளைந்த நாட்டிலின்று வீண்பேச்சு
விட்டில் பூச்சியாய் இலவசத்தில் அழியாதே
விழித்தெழு வீறுகொள் ஒளிர்விடு
விரைந்து செயல்படு உயரட்டும் உன்னதநாடு !

இறைவா நன்றி உனக்கு !

இனிய காலை இரவின் மறைவு
கதிரவன் வரவு காரிருள் விலகல்
புள்ளினங்கள் கூடு துறந்து 
இரை தேடும் பயணம்
புத்தம் புதுக் காலை
பூபாளம் இசைக்கும் நேரம்
கூவும் குயிலின் கானம்
கூடவே கிளிகளின் கீதம்
இயற்கையின் இன்ப விளையாட்டு
சுட்டெரிக்கும் சுடராய்
சுகமான தென்றலாய்
தூரத்து இடிமுழக்கமாய்
தூறும் மழையாய்
மலையின் அருவியாய்
மான்களின் துள்ளலாய்
மயிலின் தோகையாய்
மந்தியின் சேட்டையாய்
கானகமாய் பசுஞ்சோலையாய்
எத்துணை கொடுத்தாய்
இறைவா நன்றி உனக்கு !

ஆயிரம் கரத்தோனே ஆதவனே

ஆயிரம் கரத்தோனே ஆதவனே
ஆண்டுகள் பலவானாலும் ஆறாது உன் ஆற்றல்
ஆயுள் நீட்டிக்க நீ மருந்தே
காய்கனி காடு கழனி கார்மேகம்
நீயின்றி இவையில்லை 
இருளுக்கு எதிரி குளிருக்குப்பகை
இவையாவும் மறுக்கவில்லை
ஆயின் சுட்டெரிக்கும் சுடராய்
சிலகாலம் நீ சீறுவது ஏன்
மறந்துவிடுவர் மக்கள் உமையென்றா ?
மழை கொண்டு வந்து
மனம் குளிரச் செய்வாயா ?

வேதனையே மிச்சம் !

தீண்டாமை வேண்டாமென்றேன்
தீய சாதிப்பிரிவினை வேண்டாமென்றேன்
பார்ப்பனர் பரையர் பிரிவு வேண்டாமென்றேன்
பாகுபாடு ஆலயங்களில் வேண்டாமென்றேன்
மொழிகள் மதவேற்றுமை வேண்டாமென்றேன்
சிறார் திருமணம் வேண்டாமென்றேன்
கட்சிகள் பலவும் வேண்டாமென்றேன்
கருப்புப் பணமும் வேண்டாமென்றேன்
ஆண் பெண் பேதம் வேண்டாமென்றேன்
ஊழல் அறவே வேண்டாமென்றேன்
ஊருணி நீரை அணைபோட வேண்டாமென்றேன்
ஓட்டுக்கு பணம் வேண்டாமென்றேன்
காயப் படுத்தும் ஆலைகள் வேண்டாமென்றேன்
காலம் மட்டுமே மாறியது இங்கே
வேற்றுமை வெறும்பேச்சு பேதங்கள்
சாக்கடையாய் சமுதாயம் மாற்றமில்லை
சமாதானம் சமதர்மம் சிறிதுமில்லை
வேண்டாமென்றேன் இவ்வுலகம்
வேடிக்கை செய்கின்றார் வேதனையே மிச்சம் !

மனிதர் மாறுவரா ?

சொல் வளம் பொருள் வளம்
நீர வளம் நில வளம்
பல் வளமும் பெருகி
பாரதம் சிறக்கப்  பாடிடுவோம் !
பசியில்லா மனிதர் 
பகையில்லா தேசம்
பண்புள்ள மனிதர்
பாட்டுக்கு மட்டுமா ?
மனிதர் மாறுவரா ?
மனமும் பண்படுமா ?
மாக்களும் உறவு தேடும்
மானிடம் பகையை விடுமா ?
மாசற்ற உள்ளம் உண்டா ?
மண்ணுக்கும் பணத்துக்கும்
ஆசை கொண்டே
மாபாதகம் செய்யுமிவரே
மாறிடும் நாள் உண்டோ ?
வேதனையே வாழ்க்கை என்றால்
வேற்றுலகம் செல்வேன் நானே !

அம்மாவுக்கு ஒரு பாட்டு

அம்மாவுக்கு ஒரு பாட்டு
அன்னை தாலாட்டுக்கு ஒன்று
ஆராரோ பாடி அமுதூட்டிய தாய்க்கு
உயிர் கொடுத்த உத்தமிக்கு
உதிரம் பாலாய் ஊட்டியவளுக்கு
எனக்காக கண்விழித்த கண்மணிக்கு
எண்ணற்ற தியாகம் செய்த அவளுக்கு
கடல் அளவு பாசம் வானளவு வாஞ்சை
கிடைக்குமா இன்றும் எப்போதும்
உன் பாசக் கரங்களுக்கு
உலகையே ஈடு கொடுக்கலாம்
மீண்டுமொருமுறை உன் வயிற்றில்
பிறந்து தாயே
உன்மடி சேர வேண்டும்
வரம் தருவாயா 
காத்திருக்கிறேன் !


வெள்ளி, 11 மே, 2018

கோடை வெயிலே கருணை காட்டுநீ

கோடை வெயிலே உன் கோரத்தாண்டவம் ஓய்வதெப்போது
கருணை காட்டுநீ காற்றும் சூடாச்சு
தொட்டவிடமெல்லாம் சுடுகிறது
தண்ணீரும் வெந்நீராய் 
தாகம் தணிக்க தண்ணீர் இங்கு காசுக்காய்
காற்றும் மணலோடு கலந்து
ஊழிக்காற்றாய் ஊர்தோறும்
புரிகிறது எனக்கு உன்கோபம்
தீயசெயல்கள் பெருகிடும் போதெல்லாம்
உணர்த்திடும் போக்கு இதுவன்றோ
சற்றே பொருத்தருள்வாய்
பிரளய மாற்றம் இப்போது வேண்டாம்
பிரிதொரு நாளில் திரும்ப வா !

சிந்தனைச் சிற்பிகள்

கனவிலே மிதக்கும் நாங்கள்
கற்பனை வான்வெளியில் தாரகைகள்
கணநேரத்தில் கண்டம்விட்டு கண்டம்பாய்வோம்
கண்முன்னே தோன்றும் காட்சிகள்
கவிதையாய் உருவெடுக்கும் உணர்வூட்டும்
சமுதாய நிகழ்வுகள் காதல் உணர்வுகள்
இயற்கை இனிய நினைவுகள்
கோபமாய் சில நேரம்
சாந்தமாய் சில நேரம்
பருவ மாற்றம் போல் மாறும்
பொய்யர்கள் அல்லர் கவிஞர்
பொறுப்பாய் பொருளுரைப்பர்
புரட்சிக்கும் வித்திடுவர்
புகழும் பாடுவர் புத்துணர்வூட்டுவர்
உள்ளக்குமுறல் வார்த்தையாய்
உலக நோக்கு வரிகளாய்
தினம் தினம் மாறிய சிந்தனை
சிறிய உளிகொண்ட சிற்பிகள் போல் !

விலை பேசப்பட்டுவிட்டது

பேனாக்கள் எழுத மை தேவையில்லை
மனமில்லை பணமே தேவை
உண்மை விடுத்து பொய்யும் பரப்பும்
விழுக்காடு முக்கியம் விலைகள் அல்ல
வருமானமே இலக்கு வறியவர் அல்ல
இரக்கம் விடுத்து இடம் நிரப்பும் செய்தி
நேர்மை நீதி நியாயம் கூறுபோட்டு
வீதிகளில் கூவி விற்கப்படும்
விலை பேசப்பட்டுவிட்டது
உன்னையும் என்னையும்
விற்றுவிடுவார்கள் ஒரு நாள் !

கவிஞன்

கவிஞன் என்றாலே கவலையின் உருவம்
கற்பனை உதிப்பதே அதனாலோ
உள்ளே எரிமலையாய் வெளியே குளிர்நீராய்
அந்நியன் அகமது புறமொன்று புதிராய்
அனைத்தும் அணையாத நெருப்பாய்
காதலால் கசிந்துருகி ஒரு கவிதை
காணும் காட்சியினால் கோபமாய் மற்றொன்று
வான்நிலை மாற்றம் நிகழும் நிதமும்
மழைமேகங்கள் மண்வாசம் சேர்க்கும்
மனக்குமுறல் நெருப்பாய் கொதிக்கும்
காலத்தை வென்று கவிதைகள் பேசும்
காதலும் காமமும் கலந்திருக்கும்
புரியாத புதிராய் சிலநேரம்
புதிய அறிஞராய் சிலநேரம்
இவனிலும் மாற்றமொன்றே நிரந்தரம் !

திங்கள், 9 ஏப்ரல், 2018

நண்பர்கள்

எண்ணிப் பார்க்கிறேன்
எத்தனை நண்பர்கள்
பண்ணிசைத்து பாவியக்கி
பல்பல கலைகளாக
பரவிக்கிடக்கும் மாணிக் கங்கள்
பசியாற பாசறையாய்
வயிற்றுப்பசி அல்ல
செவிக்குணவு செந்தமிழில்
செருக்குண்டு எனக்கு
உண்பதற்கு குறையில்லையென்று
குன்றேறி நின்றார்
குவலயம் போற்றும் வகையில்
நாளொரு செய்தி நாளிதழ்களில்
நண்பரவர் சாதனைசுமந்து
என்ன தவம் செய்துவிட்டேன்
ஈங்கிவரை் நான் பெறவே !

வியாழன், 22 மார்ச், 2018

முதல் காதல்

முதல் காதல் முடியாக் காதல்
நிலவே நீ இல்லாது போனதனால்
விண்ணில் உலவுமந்தத் தாரகையும்
ஒளியிழந்து போனதடி
காதலின் வலியில் கருத்தரித்த கவிதை
ஆண்டுகள் பலவாயினும்
வாழ்க்கை வட்டத்தில்
வாலிபக்காதல் மனதில்
வந்துவந்து போகும்
வாசலில் கோலமிட்டு என்
வாழ்க்கையில் வண்ணமிட நினைத்தவளே
கோல
ம் கலைந்து கேரளம் சென்றாய்
உன் நினைவுகள் சுமந்தேன்
காலச்சக்கரம் உருண்டோடும் நேரம்
உன் நினைவுகள் மெல்ல மெல்ல மறைந்து
உலகவெளியில் உறைந்து போனது
எனக்காக நீ வடித்த கண்ணீரும்
காற்றில் கரைந்து
கால ஓட்டத்தில் கலந்தது
சிட்டுக்குருவியாய் சிறகடித்து வந்து
சிறிதேனும் உனைக்கண்டு வரவா ?

மனிதம்

 மனிதம் மரித்துவிட்டதோ
ஐயுறும் அவலம் அவ்வப்போது
கூட்டுக்குடும்பம் பிரிந்தது
கூடி வாழ்தல் அரிதானது
காதல் குறுகி காமம் மிகுந்தது
கருணையில்லா இதயங்கள்
காசுக்காகவே வாழும் உன்மத்தர்கள்
எதற்கும் துணிந்த எத்தர்கள்
எரியும் உள்ளத்து நெருப்பில்
எண்ணெய் ஊற்றும் ஈனர்கள்
அமைதி அன்பு அடுத்தோர் துயர்நீக்கல்
அரிதாய்ப் போனது அய்யகோ
எங்கே போகிறோம் மனிதா ?
எரிதழல் எரியூட்டும் உடலை !

கவிஞன் காதல்

கவிஞன் காதல் மறக்கலாகாது
கற்பனை ஊற்றே அதுதானே
தேன்வந்து பாயும் காதில்
தேவதை உன் சொல்லின் மகிமை
வார்த்தைகள் வர்ணங்களாகும்
வரவே தென்றலாகும்
கூடுவிட்டு கூடுபாயும்
இதயக்கூடுகள் இடம் பெய
ரும்
இன்பம் இயற்கையாகும்
இரவும் பகலும் ஒன்றாகும்
காதில் விழும் உன் சொற்கள்
கன்னலாய் இனிக்கும்
கனவு நனவு சேர்ந்திருக்கும்
காதலின் வலிமை சொல்ல
காலமெல்லாம் போதாது
வாலிபம் வயோதிகம்
வேற்றுமையில்லை
வாழும் நாட்கள் முழுதும்
வந்து வந்து போகும் !

மாற்றம் நல்லதே

மன வலிமை ஒன்றே
மனக்கசப்பு தீர்க்கும்
மனித நேயம் மறைந்து
மக்கள் குமுறும் நாளில் 
மாயெரும் புரட்சி வெடிக்கும்
மாய உலகு இது
மறைக்கப் படும் உண்மைகள்
அரக்கு மாளிகைகள்
அனல் நெருப்பில் அழிந்துபோம்
நன்மை தீமை அறிதலும்
மானிடன் மறந்தான்
மாற்றம் நல்லதே மனிதா
மக்கள் நலனுக்கே என்றால் !

தீ

தீயொரு தெய்வமென்னு
தினமும் வணங்கினோம்
கடவுளர்க்கிணையாக
கற்பூர ஆரத்தி எடுத்தோம்
காட்டுத்தீயாய் நீயோ
கருகச் செய்தாயே !
கன்னியர் முதலாய்!
கருணை இலையோ
கடின மனமோ ?
ஏன் இந்த வேதனை ?
எம் குலத்தோருக்கு !
சாம்பலாய்ப்போ நீ !
சாபம் ஏற்றுக்கொள் !

தமிழ்மண்

கவிஞர் கணல் போன்றவர்
காணும் காட்சியின் கொடுமை
மனதினுள்ளே கசப்பு
காலம் காலமாய் ஒற்றுமை
கருத்தினில் இருத்திய தமிழ்மண்
கண்டவர் அழித்திட
கண்ணுற்று இருப்போமா ?
நல்லவை மட்டுமே நாடும்
நன்மக்கள் வாரீர் !
நல் பயிர் நடுவே
களையெடுத்தல் வேண்டும்
தலையில்லாத தனிமை
தவறேதும் சகியோம்
கொள்வது எல்லாம்
குணமதின் உயர்வே !
மாற்றாரை மதித்து
மனம் ஏற்பது நாமே !
அரவணைப்பின் அன்பை
அழிக்கப் பார்க்காதீர் !
சாம்பல் என்றெண்ணி
சாக்கடையில் தள்ளாதீர்!
கணல் சுடர்விட்டெறிந்து
சுட்டுவிடும் உம்மை!

ஏக்கமும் தூக்கமும்

ஏக்கமும் தூக்கமும்
ஏன் படைத்தாய் இறைவா ?
ஏக்கம் தாக்கம் தாபம்
கோபம் கொடியது அன்றோ !
சிறுபொழுதேனும் தூக்கம் வேண்டும் 
சீரிய சிந்தனை இல்லாத்தூக்கம்
சிறிய வயதில் சில காலம்மட்டும்
கால மாற்றத்தில் கற்பனை பலப்பல
காட்சிகள் கண்முன்னே
கண்கள் மட்டும் உறங்க மறுத்தன
காதல் காமம் கவலை எல்லாம் சேர்ந்த எண்ணக்கீற்று
எனது உறக்கம் மறுத்தது
அமைதிப் பூங்காவாய் மாற்று
அப்போதாவது தூக்கம் என்
கண்களைத் தழுவும் !

விடியட்டும்

விடியட்டும் காத்திருந்தேன்
விடிவெள்ளி முளைத்தநேரம்
என்னுள்ளே தோன்றும்
எண்ணங்கள் உருப்பெறுமோ ?
பேதங்கள் அற்ற மானிடம்
பேதமை இல்லா பெரியோர்
சாதிகள் இல்லா சமுதாயம்
சாத்திரம் அறிந்த சான் றோர்
அன்னசத்திரம் ஆயிரம்
அனைவர்க்கும் கல்வி
அணைகள் ஆங்காங்கே
அள்ளக்குறையா நீரோட்டம்
இவையனைத்தும் இணைந்த
இயற்கை வளமும்கூட
நினைக்கவே ஆனந்தம்
நித்திரை கலைந்ததுவே !

கலங்காதிரு மனமே

இடிப்பாரை இல்லா எவனும்
துடிப்பாய் செயல்பட இயலாது
இருப்பினும் இடம் பொருள் பார்ப்பதுண்டு
விழலுக்கிறைத்த நீர் புல்லுக்கு மட்டுமே புசிதல் உசிதமல்ல
வானத்து நீர் போன்ற உம்கருத்து
வயலுக்கும் பாயும்
இரவென்று ஒன்றுண்டேல்
பகலென்றும் உண்டு
பருவங்கள் மாற்றம்போல்
நன்மை தீமைகள் மாறும்
மாயவன் விளையாட்டு
தேடி நிதம் நீர் சொல்லும் வார்த்தை
தேடிப்போய் சேரும் உரியவர்க்கு
கலங்காதிரு மனமே
காற்று இத்திசையிலும் வரும்

வியாழன், 15 பிப்ரவரி, 2018

காதலர்க்கு சமர்ப்பணம்

வயதைப் பார்த்து வருவதில்லை
வனப்பு கொஞ்சமாய்
இதயத்தின் ஈரம் மிக அதிகம்
இரக்கம் இரகசியம் இதனோடு
ஈர்ப்பும் சேர இணைவது
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் இழக்கத்துணிவர்
உதடுகளின் உராய்வும்
உடல்களின் உராய்வும்
காதல் உணர்வால்
காமத்தால் தோன்றக்கூடும்
காலத்தின் ஓட்டத்தில்
காதல் கனிந்து அங்கே
கடலினில் சங்கமிக்கும்
ஆற்று நீர்போல் அன்பே
மிகுந்து நிற்கும் !

உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம்
உன்னத எண்ணங்கள்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமை
ஊர் நன்மை பேணுதல்
பகைமை பாராதிருத்தல்
வறுமையும் வளமையும்
ஒன்றாய் உணர்தல்
நட்பு பாராட்டல்
நால்வருக்குதவுதல்
நாக்குச்சுத்தம் நாவடக்கம்
எம்மொழி் தன்னில்
எத்துனை உண்டு
எதிரியென்று எண்ணாமல்
ஏற்றுக்கொள் நண்பா !