சனி, 20 ஜூலை, 2019

கருமேகமே கண்ணைத் திற

கருமேகமே கண்ணாமூச்சி ஆடும் நேரமாயிது
கண்ணைத் திற மழைநீர் மண்ணில் விழட்டும்
ஆனந்தக் கண்கள் காண ஆவலில்லையா
ஆர்மீது கோபம் உனக்கு அமைதிகொள்
குடம்குடமாய் தெருவெங்கும் மக்கள் சுமந்து
குடிக்க குளிக்கவும் அவதியுற்று கவலையுற்று
எதிலும் அரசியல் லாபம்தேடும் மனிதரைவிடு
எதற்கும் முடிவுரை உன்னாலே முடியும்
வாட்டியது போதும் வந்துசேர் வறட்சிபோக்கு
வாழ்வே கேள்வியாகும் நீயின்றி நீரின்றி
முக்காடு விலக்கி முழுமுகம் காட்டு
மூச்சுக் காற்றும் மழைநீரும் உயிர்நாடி
ஆண்டுதோறும் வெள்ளமாய் வருவாயின்
ஆட்சியர் உன்னிருப்பிடம் உருவாக்கித் தருவர்
ஊழிக்காற்று வரும்வரை உன்மத்த மனிதருக்கு
உன்னருமை தெரிவதில்லை உணர்த்திடு உன்னருமை !

கருத்துகள் இல்லை: