அழகான நீர்பரப்பு அதிலொரு ஓடம்
அமைதியாய் தனியொருவன் தன்னிலை மறந்து
மனதில் சலனமில்வை பார்வை தொலைதூரம்
சுற்றிலும் மரங்கள் மெல்லிய காற்று
தன்னிலை மறந்த மயான அமைதி
ஏகாந்தம் என்பதே இதுவன்றோ உண்மையாய்
இருண்ட அன்னை வயிற்றை நீங்கி
இவ்வுலகில் கண்விழித்த நிர்மலமான வேளை
பூவுலகை நீத்து ஆவி பிரிந்து
வேற்றுலகு செல்லும் சூன்ய நிலை
இரண்டுக்கும் நடுவே இருக்கும் இடைவெளி
இருப்பதே சிலநாட்கள் எத்தனை மாற்றங்கள்
மனதில் ஆயிரம் பிரிவு எண்ணங்கள்
அமைதி போயிற்று வேதனை சேர்ந்தது
படகு ஆட்டத்தில் தத்தளிக்கும் நிம்மதி
இதுவும் நிரந்தரம் இல்லை கடந்துபோகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக