புதன், 3 ஜூன், 2020

கடந்துபோகும்

அழகான நீர்பரப்பு அதிலொரு ஓடம்
அமைதியாய் தனியொருவன் தன்னிலை மறந்து
மனதில் சலனமில்வை பார்வை தொலைதூரம்
சுற்றிலும் மரங்கள் மெல்லிய காற்று
தன்னிலை மறந்த மயான அமைதி
ஏகாந்தம் என்பதே இதுவன்றோ உண்மையாய்
இருண்ட அன்னை வயிற்றை நீங்கி
இவ்வுலகில் கண்விழித்த நிர்மலமான வேளை
பூவுலகை நீத்து ஆவி பிரிந்து
வேற்றுலகு செல்லும் சூன்ய நிலை
இரண்டுக்கும் நடுவே இருக்கும் இடைவெளி
இருப்பதே சிலநாட்கள் எத்தனை மாற்றங்கள்
மனதில் ஆயிரம் பிரிவு எண்ணங்கள்
அமைதி போயிற்று வேதனை சேர்ந்தது
படகு ஆட்டத்தில் தத்தளிக்கும் நிம்மதி
இதுவும் நிரந்தரம் இல்லை கடந்துபோகும்

கருத்துகள் இல்லை: