செவ்வாய், 13 அக்டோபர், 2020

ஜி டி சுந்தர்

 எனது நண்பர் சம்பந்தம் அவர்களின் தம்பி். எனக்கு நண்பரும். 1980-82களில் நானும் அவரும் அம்மாவோடு தங்கியிருந்த நாட்கள். ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கினார். பத்திரிகைகளில் முதலில் வரையத் தொடங்கினார். இதயம் பேசுகிறது மணியன், திசைகள் மாலன், நக்கீரன் கோபால் என அனைவரோடும் நெருங்கிய நட்புண்டு.

நானும் அவரும் ₹110 வாடகையில் தியாகப்ப முதலி தெரு, கீழ்ப்பாக்கத்தில் தங்கியிருந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஒரே தலைப்பில் நானும் அவரும் எழுதிய கவிதைகள் டைரியில் இன்றும் உள்ளது.
அவர் பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி என்று மீடியாக்களைச் சுற்றியே இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைக்கதைகளும் எழுதி, சினிமாத்துறையில் நுழைவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறார்.
அந்தக் காலத்தில் சினிமா போஸ்டர்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர்களுக்குப் பின்னால் இவரது உழைப்பு மறைந்திருக்கும். ஈஸ்வர், உபால்டு என்ற பெயர்கள் பிரபலமான காலமது.
நேரம் சரியாக அமையாததாலோ என்னவோ குடத்திலிட்ட விளக்காய் இன்றும். குன்றிலேறும் நாள் வெகு தூரமில்லை என்பது என் கணிப்பு. இவரது எதிரியென்றால் அது இவரது முன் கோபம் மட்டுமே.
சின்னத்திரையின் பல தொடர்களில் இவரது முகம் இன்றும் அவ்வப்போது தோன்றும். ஆனந்தம் சீரியலில் உதவி இயக்குனராகப் பணியாற்றி உள்ளார். கடந்த ஐம்பதாண்டுகளாக இவரோடு தொடர்பில் இருக்கிறேன்.
திறமையிருந்தும் உச்சம் தொட முடியாத நண்பர்களில் ஒருவர். எனது மற்றும் கலையின் கவிதை நூல்களின் அட்டை வடிவம் இவரது கை வண்ணம்.
நட்புப் படகில் பல்வகை மனிதர்கள். பழக இனிமையானவர், பரந்த நட்பு வட்டம் உண்டு, என் முகதூல் கவிதைகளுக்கு இவரது கமெண்ட் நிச்சயம் இருக்கும்.

கருத்துகள் இல்லை: