திங்கள், 15 ஏப்ரல், 2024

கல்வராயன் மலை

 திருவண்ணாமலைக்கு நண்பர் அசோக் வந்திருக்கிறார் என்றதும் மனதில் ஒரு பயணத்தின் தூண்டல் தோன்றியது. பதினேழாம் தேதி ( பிப்ரவரி 2024) பள்ளி நண்பர்கள் கூடும் நாளுக்கு வந்தே ஆக வேண்டுமென நெடுஞ்சேரனின் அன்பான அழைப்பு.

காதலர் தினமான பிப்ரவரி 14 பயணத்தைத் தொடங்க முடிவெடுத்த போது, பிரபாகரும் திருவண்ணாமலை வருவதாகக் கூற, மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் காலை 9 1/2க்கு ஏறி ரமணாஸ்ரமத்தில் இறங்கிய போது மதியம் 2 மணி. மதிய உணவை முடித்து, முன்னதாக பதிவு செய்திருந்த ஓட்டலுக்குச் சென்ற போது புக்கிங் எடுப்பதில்லை என்ற தகவல் கோபத்தை வரவழைத்தது. Booking.com க்கு புகார் அளித்த பிறகு கோவிலுக்கு அருகில் வடக்கு வாசலில் ஓட்டல் அறை எடுத்து, ஓய்வுக்குப் பிறகு கோயிலுக்குச் சென்று, நல்லதொரு தரிசனம் முடித்துத் திரும்பி, இரவு உணவு நண்பர் அசோக்குடன் முடித்து, மறு நாள் பயணம் பற்றி விவாதித்து, டாக்ஸியும் புக் செய்தாயிற்று.
திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாளும், வீரட்டேஷ்வரர் கோயிலும் முடித்து, பிறகு கல்வராயன் மலைப் பிரதேசத்தின் இயற்கை அழகைக் காண முடிவெடுத்தோம். காலை சிற்றுண்டிக்குப் பிறகு, அசோக்கின் உறவினரின் டாக்ஸியில் பயணித்து உலகளந்தவரைத் தரிசித்த பிறகு, ஈஸ்வரனையும் தரிசித்த பிறகு, 80 கிமீ தூரம் பயணம் என கூகுள் சொன்னது.
முடிந்த வரை நெடுஞ்சாலையில் பயணிப்பது என்ற முடிவால், பாதை தவறி, U டர்ன் எடுத்து, சரியான பாதையில், கோமுகி ஆற்றைக் கடந்து, கோமுகி அணை பெரிதாய் எதிரே தோன்றியது. காரை நிறுத்தி அணைப் படிக்கட்டுகள் ஏறிப் பார்த்தபோது மலைகளுக்கிடையே நீர்த்தேக்கம் அழகாய்த் தோன்றியது. நீரின் அளவு குறைந்திருந்தது. போட்டோக்கள் கிளிக்கி, கீழே இறங்கி, தள்ளு வண்டியில், கம்பங் கூழைக் குடித்தபோது சற்று வயிறு குளிர்ந்தது. மீண்டும் பயனித்து பெரியார் அருவியை அடைந்த போது, குறைந்த அளவு நீர் வீழ்ச்சியைக் காண முடிந்தது. உள்ளே செல்லும் பாதை தடை செய்யப்பட்டு பழுது பார்க்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் அருவிக்கு அருகில் செல்ல இயலவில்லை.
மீண்டும் பயனித்து கல்வராயன் மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை என்ற சிற்றூரை அடைந்து மதிய உணவுக்கு, மெஸ் ஒன்றில் நிறுத்தி மீன் குழம்பு, ஆம்லெட் சகிதம் சுவையான சாப்பாடு.
அங்கிருந்து திரும்பும் பாதையில், பராமரிப்பற்ற படகுக் குழாம், மற்றும் ஏரிக் கரையில் நிழலான இடம் பிடித்து, அனைவரும் இளைப்பாறிய போது, நாய்கள் உணவுக்கு பிஸ்கெட் வாங்கிப் பரிமாறினது பிரபாகர்.

கருத்துகள் இல்லை: