பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பாடியவன் மறைந்தான் பகன்றது மறையலே
வேடிக்கை மனிதர்கள் மாறிடுதல் அரிதாமோ
வாடிக்கை வாழ்விலே பணமே முதன்மையாம்
பண்டைய மனிதன் பண்டம் மாற்றினான்
இன்றைய மனிதன் இதயம் மறந்தான்
காசுக்காக கோயிலும் வியாபாரத் தலமாயிற்று
கூசுவதில்லை பகட்டான வாழ்க்கை பாவமென்று
பந்தம் நட்பு பரிவு காற்றோடு
சொந்தம் செல்வமென்று சேர்த்து வைத்தார்
அடைகாத்த கோழியாய் அனுதினமும் அதனை
கடைசிவரை வாராது தன்னோடு தெரிந்துமே
மனிதம் மரணித்து மனங்களில் புற்றுநோய்
புனிதம் எதுவென்று புரியாத மானிடர்
வருவதும் போவதும் வாழ்வின் நாடகம்
இருக்கும் காலத்தே இனியவை செய்கவே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக