புதியதொரு ஆண்டு தொடங்கும் நாள் இது
பிழைத்திருப்போமா என்ற எண்ணம் போய்
பிறிதோர் நாளும் பிறந்து மயன் மாயமாய் போனது
பிரளயம் ஏதும் இல்லாமல் பிரிந்தது 2012
வேறொரு பிரளயம் மக்கள் உள்ளங்களில்
வெறியின் உச்சத்தில் மனிதர்கள் மாக்கள் ஆனது
உலகமே திரும்பிப் பார்த்தது வெறும் நிகழ்வாய் கொள்ளாமல்
உயிர் பிரிந்தாலும் உலகை உருக்கிய பெண்மையின் வீரம் பேசப்பட்டது
மாற்றம் ஒன்றே நிரந்தரமானது என்றால் மனித மனங்கள் ஏன் மாறுவதில்லை
தன்னலம் கருதா பிறர் நலம் பேணும் மனிதம் எங்கே போனது
மதங்களின் பேரால் நாட்டின் பேரால் மொழியின் பேரால் நதிகளின் நீரால்
இன்னும் எதனால் எல்லாம் இந்த மனிதன் வேற்றுமை போற்றுவான்
எனக்கு மட்டுமே சொந்தம் என்ற சுயநலம் இங்கே புரையோடிப் போயிருக்கிறது
என்னைச் சார்ந்தவர் வாழ்ந்தால் போதும் மற்றவர் மடிந்தால் எனக்கென்ன என்பர்
எங்கே போகிறோம் நாம் சாத்தானின் வேதம் தலைக்கேறி விட்டதா
எதற்கும் ஒரு விடியல் உண்டு என்றால் இதற்கும் விடியல் வேண்டாமோ
முன்பே நான் கூறியது தான் வேற்றுமை பாராத உலகம் வேண்டும்
மூர்க்கர்கள் இல்லா புதியதோர் சமுதாயம் வேண்டும்
காந்தி சொன்ன வார்த்தைகள் எப்போது நிறைவேறும்
பெண்ணென்பவள் தனிமையில் நடுநிசியில் செல்லும் அந்த நாள்
நாடுகள் போர் தொடுக்கும் பகைமை பொய்த்து
நானிலம் தழைக்க நீர் வளம் மின் வளம்
பசுமை புரட்சி பட்டினியற்ற வயிறுகள்
பரந்த நோக்கு பல்வளம் பெருக்கம்
இவையனைத்தும் இவ்வுலகில் நிகழ்ந்திடும் நாளே
புதிய ஆண்டாய் புதிய யுகமாய் கொண்டாடும் நாளாம்